Wednesday, October 10, 2007

குழந்தையின் முதல் பிரார்த்தனை

Wednesday, September 5, 2007

நிஜங்களின் கோலங்கள்


அவளையின்று அழைக்க
அடைபட்ட கிளிமொழி
பதற்றமாய் சொன்னது
" அவர் இருக்கார்"....!

உயிர் தோழிக்கா இந்நிலை!
புன்னகையின் பெட்டகம்
சுதந்திரத்தின் விரிந்த சிறகுகளென
எத்தனை வியப்புகளிருந்தது அவளில்..!

தோழியவளின் திருமணமிட்ட வேலியால்
எத்தனையோ வருடங்களாய் இந்நிலையிது
அவனில் பற்றவைத்தது கவலைகளை!

புன்னகையால் மறைத்தாளவள்
அடிமையென்பதை!

பிள்ளைகளால் இருக்கிறது இல்லறம்
என்கிறது நிஜம்!

பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்
ஒளிந்துகொள்ளும் அவளின் வேதனைகள்!

பெண் சுதந்திரப் போராட்டம்
இவளிலிருந்து இனி என்று ஆரம்பித்து.....!!!!

Tuesday, September 4, 2007

மீண்டும் கல்விக்கூடத்தில்...!


நேரமும் செல்வமும் அன்று தடைசெய்த
கல்விப்பயணம்
தொடர்கிறதின்று
மீண்டும் மாணவனல்ல
நீயென்றும் மாணவனேயென்று

மறந்துபோன அந்தகால நினைவுகள்
மறவாமல் மனமெங்கும் பூக்களைத்தூவ
மனதின் வர்ணங்களெல்லாம் தெளிந்துணர்த்த
மறக்கவில்லை எதையும் நானின்று!

நிஜங்கள்
மனதின் மென்மையான பிரதேசங்களில்
தியானத்திலிருப்பதை
மறதியென்று பெயரிடல்
சரியாயென்று
கலைந்த தவங்கள் மகிழ்ச்சியிலின்று!

Monday, September 3, 2007

இறைவா...!!!




நீ என்னை மறப்பதுமில்லை
என்னை விட்டு விலகுவதுமில்லை!

சிரித்தால் என்னோடு சிரிக்கும் உலகம்
அழுதால் எனக்கு தனிமையை அனுப்பும்
என்னோடு நீயிருப்பதை அறியாமல்!

உமையென்றும் நினைத்து வாழும்
உள்ளமெனக்கென்றும் தாரும்
என்னுயிர் இறைவா!

உம்மை அறிவதால்
உண்மை அறிகிறேன்
உமது பணிகளைச் செய்வதிலேயே
நான் நிஜ மகிழ்ச்சியடைகிறேன்

உமது சித்தத்தின்படி வாழ்வதினாலென்
கவலைகள் கரைந்து மகிழ்கிறது

எனது மறைவான பிரதேசங்களிலுமென்
தவறுகளை வெளிப்படுத்துகிறீர்

நகையாக ஆசைப்பட்ட உலோகமெனக்கு
சோதனைகளும் கவலைகளும் - இனி
கொஞ்சகாலமே

சோதனைகளை வெல்ல
உமது கிருபைகள் மட்டும் போதும்

சோதனைகளில் வென்றுதும்
என்னிலுள்ள உம்மை காண்கிறேன்

இறைவா
என்னை உமது கண்களென்றாய்
எனக்கினி ஏது பயம்!

Thursday, August 30, 2007

வரும் முன் காப்போம்...

Wednesday, August 29, 2007

பறந்து சென்றது




அவளை
அடித்துதைத்து தன்னுடலே
வலிக்கத் துவங்கியதும் அவனது
ஆத்திரம் தீர்ந்ததாம்!

உதை வாங்கி வாங்கி விழுந்து
மயக்க நிலையிலினி திட்டித்தீர்க்க
சக்தியோ வார்த்தைகளோயின்றி
வாடிய நிலையில்
பாவமவளின் கவலைகள் தீரவில்லை
அடங்காத ஆத்திரம் மயக்கதிலிருந்து
வெளிவரவில்லை!

அவன் கணவனாம்
அவனின் தாலி அணிந்ததால்
இவள் மனைவியாம்!

இந்த கொடூரம் கண்டு கலங்கி
பயந்து நடுங்கும்
பாவம் குழந்தைகளின் கண்ணீர்
தொடர்ந்து கேட்கும் கேள்வி
" ஏன் பிறந்தோம் "

மேகமூட்டம் கொண்ட அந்த
உணர்ச்சி நொடிகளில்
கூண்டுக்குள் சிறையிடப்பட்ட
பறவைகளைக் கண்டு
பூக்களுக்கு முத்தமிடவந்த
வண்ணத்துப்பூச்சியொன்று
கவலையாய் பறந்து சென்றது!

Saturday, August 18, 2007

எறிந்து விட்டீர்களே...


எஜமானரே
எங்களை எறிந்து வீட்டீர்களே!

ஆண்டுகள் பல
அயராமல் உழைத்தும்
அந்நியராகிவிட
நாங்களின்று விலாசம் தெரியாத சொற்கள்
ஆம்!
நேற்று எறியப்பட உங்களின் பற்கள்!

நினைத்துப் பார்க்கிறோம்...
உங்களில் எத்தனை நினைவுகள்!

எங்களைக் கண்டபோது தான்
உங்களுக்கு அறிவு பிறந்ததென்றார்கள்!

உங்களின் கோபங்களில்
எங்களில் எத்தனை துடிப்புகள்!

உங்களின் ருசிக்கென உணவை அரைத்துழைத்த
இயந்திரச் சக்கரங்களில் மூத்தவர்கள் நாங்கள்

இன்று ஒருவேளை எங்கள் நிலைகண்டு
இன்பமாய் சிரிக்கலாம் நீங்கள்!

இனி வரும் இனிய உணவுப்பொழுதுகளில்
இனியவரே எங்களை நீங்கள் நினைப்பீர்கள்!

எங்களில் காயம் வந்ததற்கு
எப்படி ஐயா நாங்கள் காரணம்?

பாசத்தை நீங்கள் காட்டியதெல்லாம்
எங்களை சுத்தம் செய்வதில் மட்டும் தானே?

வந்து
இரண்டே நாட்களில் அழகிழக்க
ஒவ்வொரு நாளும் முறையிடும்
பாவமந்த பல்துலக்கி!

முன்வரிசை கீழ்வரிசை அழகர்களுக்காவது
நல்லதோர் பலதுலக்கியை
வேலைக்கு வையுங்கள்..
மாதமொன்று போதும் - அதை
மென்மையாய் பயன்படுத்துங்கள்
அந்த வரிசை அழகர்களுக்காவது
எங்கள் நிலை வராமலிருக்கட்டும்!

உங்களின் எத்தனை சந்தோஷங்களிலும்
துக்கங்களிலும் உங்களோடு
பயணித்திருக்கிறோம்?

நீங்கள் பேசின யாவும்
எங்களுக்குத் தெரியும்
பற்கள் எங்களை பயந்தே பலவேளை
நீங்கள் சத்தமாகச் சிந்திக்கவில்லை!

இத்தனை வருட சேவைக்கு பின்
எங்களின் ஓய்வின்று
உங்கள் மருத்தவரின்
குப்பைத்தொட்டியில் தான்!
அவருக்குத் தெரியுமா
நாங்கள் குப்பையிலிருக்கும்
வைரங்களென்று!

ஒரு சமாதானம்!
எங்களை எறிவதற்கு முன்னால்
நகைச்சுவையாய் பலரிடம்
எங்களுக்கு நன்றி சொன்னீர்கள்!
நன்றி ஐயா
நன்றி..!!!!

ஒரு மொழி
அதன் பழைமையாகி விட்ட
அகராதி புத்தகமொன்றை
எறிந்து விட்டது!

இன்று குப்பையிலிருக்கும் நாங்கள்
நாளை எங்கிருப்போமோ!

உங்களுக்கு சேவை செய்ததில்
எங்களுக்கு மகிழ்ச்சியே!

மீண்டுமொரு சமாதானம்
உங்கள் மகிழ்ச்சியில் மகிழ்ந்தே...
நீங்கள் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்தி
உங்களுக்கு முன்னமே
பற்களில் மூத்தவர் நாங்கள்
மங்களமாய்
சென்றுவிட்டோம்!

இருப்பினும் எஜமானரே
எங்களை எறிந்து விட்டீர்களே!

Wednesday, August 15, 2007

ஆகஸ்ட் 15


இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியை நினைவுபடுத்தும் ஆகஸ்ட் பதினைந்திற்கு ஒவ்வவொரு வருடமும் எத்தனை எதிர்பார்ப்புகள்! ஆனால் ரோஜாத்தோட்டம் வாங்கி மகிழ ஆசைப்பட்ட ஒருவருக்கு ஒரே ஒரு ரோஜா மட்டும் வாங்க அனுமதி கிடைத்தது போல், மனநிறைவின்றி கவலையாய் அடுத்த வருடத்தை நோக்கி ஒவ்வொரு வருடமும் தனது பயணத்தை தொடர்கிறது, பாவம் ஆகஸ்ட பதினைந்து!

அவ்வப்போது ஆங்காங்கே எடுக்கப்படுகின்ற புள்ளி விவரங்களில் அதிகமும் ஏதோ குறிப்பிட்ட சிலரை மட்டும் சில கேள்விகள் கேட்டு அதை மிகவும் சரியென்று வாதம் செய்கின்றவைகளாக இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. உதாரணமாக, சென்னை போன்ற ஒரு நகரத்தை ஒரு தனியார் புள்ளிவிவர நிறுவனம் எடுத்துக்கொண்டு சிலரிடம் சில கேள்விகள் மட்டும் கேட்ட்விட்டு, “இன்று பெண்களில் அதிகம் பேர் வேலைக்கு செல்கிறார்கள். கடந்த வருடத்தை விட இந்த வருடம் பெண்களின் முன்னேற்றம் மிக அதிகமாக உள்ளது” என்றெல்லாம் சொன்னதும் பொதுவாக எல்லோருக்கும் இந்தியா முழுக்க மாபெரும் வளர்ச்சி அடைந்து விட்டது போல் ஒரு எண்ணம் தவறாக வந்து விடுகிறது. இதைக்கண்டு கோபப்படுகிறது ஆகஸ்ட் பதினைந்து!

இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் கிராமமும், கிராம மக்களும், விவசாயமும் சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்களாகியும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தானுள்ளது. அவ்வப்போது மேலே வருவது போல் தோன்றினாலும் வறுமைக் கோட்டை இது வரை முழுமையாகத் தாண்டவேயில்லையே! கிராமத்துப் பெண்களில் இந்த அறுபது வருட சுதந்திர வருடங்களில் மருத்துவர்களாக அல்லது பொறியாளர்களாக அல்லது மற்ற உயர் பதவிகளைப் பெற்றோர்களாக எத்தனைபேர்கள் முன்னேறியிருக்கிறார்கள், என்று ஆராய்ந்து பார்த்தால் அந்த எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்குமென்பதில் சந்தேகமே இல்லை. அது சரி தான் என்கிறது ஆகஸ்ட பதினைந்து!

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானது கல்வி. அதிலும் பெண்களுக்கு கல்வி கட்டாயமாக இருக்க வேண்டும். ஆனால் உயர்கல்வி இந்தியத் திருநாட்டில் ஏழைகளுக்கு, அதிலும் முக்கியமாக கிராமத்து ஏழை மக்களுக்கு எட்டாத ஒரு கனியாகவே இன்றும் இருப்பதால், அதிகமும் குலத்தொழில் செய்தே ஒவ்வொரு தலைமுறையினரும் வாழ வேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது. ஏழையின் மகன் பரம ஏழையாகவும், லட்சாதிபதியின் மகன் கோடீஸ்வரனாகவும் பரிணாமம் அடைகின்ற ஒரு பத்தை நோக்கி நமது நாடு சென்று கொண்டிருக்கிறது. இதை கவலையோடு பார்க்கிறது, ஆகஸ்ட் பதினைந்து!

கிராமத்து மக்கள் கல்விபெற படும் பெரும்பாடுகள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதிலும் முக்கியமாக மாணவிகள் மிக மிக சிரமப்பட்டு வறுமையின் கொடுமையிலும் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் நகரத்தில் வாழ்வோருக்கு இணையாக நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பின்றியும், கோடீஸ்வரர்களுக்கு இணையாக பணம் கொடுத்து கல்வி கற்க வசதியின்றியும் கவலைக் கடலிற்குள் புதைந்து போகிறாகள். ஏழை கிராமத்து மாணவிக்கு பொறியியலும் மருத்துவமும் கரைந்து போன கனவாகியதும், படித்த படிப்பையெல்லாம் நினைத்து அழுது அழுது, வேறு வழியின்றி வீட்டு வேலைக்காரியாக, சித்தாளாக, விவசாயம் அல்லது வேறு தொழிற்சாலைகளில் கூலி வேலைக்காரியாக தனது இளமையின் ஆரோக்கியத்தை கரைத்து கிடைக்கும் கொஞ்சம் கூலியை நோக்கி தனது வாழ்க்கை பயணத்தைத் துவங்குகிறாள். ஒரு தாலி வாங்கும் அளவிற்கு சேமிப்பு சேர்ந்ததும் அவளுக்கு திருமணம் செய்து வைக்கும் சமுதாயம், ஒரே வருடத்தில் குழந்தை மட்டும் அவளுக்கு பிறக்கவில்லையென்றால் மலடி என்ற பட்டம் கொடுக்கிறதே இது நியாயமா என்று கேட்கிறது ஆகஸ்ட் பதினைந்து!

கீழ்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு இருக்கிறதே, அவங்க அந்த பதவியில் வந்தார்களே, இவங்களுக்கெல்லாம் வேலை கிடைத்ததே என்றெல்லாம் சொல்லி உண்மையை மறைக்க யாராலும் முடியாது. அறுபது வருடங்களில் பிற்படுத்தப்பட்டோரில் எத்தனை குடும்பங்கள் இந்தியாவில் முன்னேறியுள்ளது அதில் பெண்களின் முன்னேற்றம் என்ன என்று பார்த்தால் அது வியப்பைத் தவிற வேறென்ன தரமுடியும். சில பெண்கள் விமானம் ஓட்டினாலோ, சில பெண்கள் இராணுவத்தில் சேர்ந்தாலோ இந்தியா ஒலிர்கறது என்று சொல்ல முடியுமா. சில அதிசயங்களைக் கண்டு எல்லாமே மாறிவிட்டது என்று சொலவது மிகவும் தவறு. இங்கே ஒரு பெண் குடியரசுத் தலைவராய் வர எத்தனை போராட்டங்கள்! இதிலிருந்தே யாருக்கும் இன்றைய இந்திய ஏழைப்பெண்களின் நிலையை புரிந்து கொள்ளலாம்! மற்ற நாடுகளை வைத்துப் பார்த்தால், அறுபது வருடங்களில் இந்தியாவின் வளர்ச்சி திருப்தி தராத ஒரு கசப்பு தான் என்பது நிதர்சனமான உண்மை. சரி.. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி என்ன செய்ய என்ற கேள்வியை தனது பார்வையில் வெளிப்படுகிறது ஆகஸ்ட் பதினைந்து!

இந்தியா வளர்ந்து வெற்றிபெற வேண்டுமென்றால் இந்தியாவில் இந்தியப்பெண்கள் முதலில் முன்னேற வேண்டும். அதற்கு எல்லோருக்கும் கல்வி என்ற திட்டம் நூறு விழுக்காடு வெற்றி பெற வேண்டும். கல்வியை வியாபாரமாக்கும் கொடூரத்தை உடனடி அழித்து, தாய் மொழியிலேயே எல்லா உயர் படிப்புகளும் படிக்க தேவையான வசதிகளை அரசே பொறுப்பெடுத்து உடனே செய்து வெற்றி பெற வேண்டும் இதை மட்டும் செய்தால் போதும், கண்டிப்பாக இந்தியா உலகத்திலேயே உயர்ந்த வல்லரசாக ஒளிரும் என்றதும் உண்மையுணர்ந்து சந்தோஷமாய் சிரித்து மகிழ்கிறது ஆகஸ்ட் பதினைந்து!

Tuesday, August 14, 2007

இயற்கையின் ஆசை

இயற்கையின் ஆசை

எனக்கோர் இறக்கையும்
உனக்கோர் இறக்கையும் தந்து
படைத்தை இயற்கையின்
ஆசையெல்லாம் - நாம்
தழுவியணைத்தே
வாழவேண்டுமென்பதே!

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments