Thursday, November 1, 2012

கண்ணியம்




























































Monday, July 9, 2012

அன்றொரு நாள் காலை...


நான் பெரிய கோடீஸ்வரன் என்று என்னிடமே பலர் சொல்லக் கேட்க சுகமாக இருக்கும். 

அன்பை பகிர்ந்து கொடுக்கவும், பாசத்திற்கு நேரம் ஒதுக்கவும், நன்றியுணர்வை அறிவிப்பதிலும் தான் நான் கடனாளி. 

ஆனால் பொருளாதாரத்தில் அல்ல.

இந்த வகையில் நான் பெரிய கோடீஸ்வரனா என்றால், தன்னடக்கத்துடன் என் பதில். “ ஆம் இறைவனின் கருணையால்” என்பேன்.

சென்னைக்குள் எனது பயணங்கள் காரிலும் ஆட்டோ ரிக்ஷாவிலும் சில வேளைகளில் அரசு பேருந்துக்களிலும் இருக்கும்.

கடந்த மாதம் ஒரு நாள் காலை வேளை நான் அரசு பேருந்தில் அமர்ந்திருக்கிறேன்.  அதிசயமாக அன்று அந்த பேருந்தில் அதிகமாக கூட்டம் இல்லை. 

இன்னமும் சென்னையின் வெப்பம் குறையவில்லையே என்ற பரிதவிப்போடு ஜன்னலோரம் அமர்ந்து சென்னை சிங்காரச் சென்னையாக என்று தான் மாறப்போகிறதோ என்று நான் யோசித்துக் கொண்டிருக்க…

பேருந்தில் என் பின்பக்கமிருந்து ஒரு சத்தம்….  “  ஐயோ பணம் காணலயே.. ஐயோ ஊருக்கு போகவேண்டுமே”

திரும்பி பார்த்தேன். 

குறைந்தபட்சம் நாற்பது வயது கொண்ட ஒருவர்.  அவரின் அப்போதைய மனநிலையால் அவரின் இரத்த அழுத்தம் ஏறிக்கொண்டே இருப்பதை அவரின் முகத்தை பார்த்து அறிந்து கொண்டேன்.  என்ன பதில் சொல்லி அவரை ஆறுதல் படுத்த என்று அறியாமல் அப்படியே அவரை பார்த்திருந்தேன். 

அதற்குள் அவருடைய மனைவி அவரிடம் ஓடி வந்து.

-        பணம் எங்கே வைத்தீர்கள்
-        பின் பாக்கட்டில் தான்
-        அங்கே வைக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல..
-        வண்டி ஏறும்போதே ஒருவன் என்னை இடிச்சான்.  அப்போதே எனக்கு சந்தேகம். 
-        சரி இப்ப சென்டரல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து எப்படி ஊருக்கு போறது…         
          எவ்வளவு பணம் இருந்தது?
-        ஆயிரத்தி ஐநூறு ரூபாய்…

அவர்களிடம் இருக்கும் பைல்கள், மற்றும் ரத்த சோதனை செய்த இடது கைகளிலிருக்கும் அடையாளம்  இவையெல்லாம் வைத்து நான் பார்க்கையில், அவர்கள் மருத்துவமனையிலிருந்து தான் வருகிறார்கள் என்று உடனே புரிந்து கொண்டேன்.

நான் அந்த பெண்ணிடம். 

-        அம்மா, அவர் பணத்தெ தொலைத்தார்.  ஆனால் நீங்க அவரிடம் கோபமாக பேசினால்      அவருக்கு இன்னும் பதற்றம் தானே வரும்
-        என்ன சார் செய்றது…! இப்ப நாங்க ஊருக்கு போகனுமே.  ஆனால் என் கணவர் நான் என்ன          சொன்னாலும் எப்போதும் கோபப்படமாட்டாறு.

அவர்கள் அப்படி ஒரு பதில் சொனனதில் எனக்கு கொஞ்சம் கூட ஒரு நகைச்சுவை உணர்வு வரவில்லை.  ஏனெனில் அவர்கள் இருவரும் அன்புள்ளவர்களாகவும் ஒருவருக்கொருவர் மிகவும் பாசமுள்ளவர்களாகவும் அறிந்து கொண்டேன்.

எனது பர்ஸில் என்ன பணம் உள்ளது என்று பார்த்தேன்.  இரண்டு கிரெடிட் கார்டும், தொள்ளாயிரத்தி ஐம்பத்தி ஐந்து ரூபாயும், கொஞ்சம் சில்லறை காசுகளும் இருந்தது.

என்னிடமிருந்த அந்த பணத்தை அனைத்தையும் எடுத்து அவரிடம் கொடுத்தேன். 

-        சார் வேண்டாம் சார்
-        அப்பறம் எப்படி ஊருக்கு போவீற்கள்?
-        வழியனுப்ப என் மாமனார் வருவார்.  அவர் வழியனுப்ப வரும்போதெல்லாம் ஆயிரம்     இரண்டாயிரம் என்று என் மனைவியிடம் கொடுப்பது வழக்கம்.  அது போதும்.  பதற்றத்தில்     என் மாமனார் வருவதும் அவர் பணம் தருவதும் எனக்கு ஞாபகமில்லாமல் போனது.     மன்னிக்கவும் சார்.
-       பரவாயில்லை இந்த பணமும் இருக்கட்டும்.  ஒருவேளை உங்கள் மாமனார் வரவில்லை     என்றலோ, ஒருவேளை பணம் தராமல் இருந்தாலோ என்ன செய்வீர்கள்
-       வேண்டாம் சார். ப்ளீஸ்…
-       சரி இது என்னுடைய விசிட்டிங்க் கார்ட்.  ஒருவேளை உங்களுடைய மாமனார் வரவில்லை     என்றால் என்னை தொலைபேசியின் தொடர்பு கொள்ளுங்கள்.  நான் என் உதவியாளர் வழி       உங்களுக்கு சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு பணம் அனுப்புகிறேன்.
-       மிக்க நன்றி சார்.

கொஞ்சம் நேரத்தில் என்னருகே அமர்ந்திருந்த ஒரு பெரியவர் பேருந்திலிருந்து இறங்கினார்.  அப்போது அந்த பெண்மணி

-        சார் நான் இங்கே உட்காரட்டுமா?
-        அதற்கென்ன வாங்க தாயீ… உட்காருங்க..
-        ரொம்ப நன்றி சார்.
-        எதற்கு நன்றி.  உங்கள் கணவர் என்னிடம் பண உதவி பெறவில்லையே?
-        சார் நீங்க உதவி செய்ய முன்வந்தீர்களே… அந்த பாவி என் கணவரின் பணத்தை திருடினானே    என்று சென்னையை திட்ட ஆரம்பித்தேன்.  ஆனால் நீங்க உதவி செய்ய முன் வந்ததும்      நிறுத்தி விட்டேன்.
-        பரவாயில்லைம்மா… சரி என்ன உங்களுக்கு உடம்பு சரியில்லையா ?  உங்களுடைய         கணவருக்கு என்ன வேலை? எந்து ஊர் நீங்க?
-        சார் நாங்க விவசாயம் செய்கிறோம்.  ஜோலார்ப்பேட்டை தான் எங்க ஊரு.  எங்களுக்கு     திருமணமாகி எட்டு வருஷமாச்சு குழந்தை இல்லை.  ஒரு குழந்தை இறந்து பிறந்தது.     இரண்டாவது குழந்தை அபாஷன் ஆயிடிச்சு.  சரி ஜோலார்ப்ப்ட்டையை விட சென்னையில்     வைத்தியம் நன்றாக இருக்கும் என்பதால் தான் இங்கே வைத்தியம் ஆரம்பித்தோம்.     வைத்தியத்தின் தொடர்ச்சியாக இது சென்னைக்கு எங்களின் மூன்றாவது பயணம். அப்பா,    பாண்டிச்சேரியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார்.  நான் சென்னைக்கு வருவதை       அறியும்போதெல்லாம் எங்களை   வழி அனுப்ப சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார்.
-        உங்கள் இருவருக்கும் என்ன வயது?
-        சார் அவருக்கு முப்பத்தி எட்டு.  எனக்கு முப்பத்தி மூன்று
-        கவலையை விடுங்க. உங்களுக்கு அப்படியொன்றும் வயதாகி விடவில்லை.  உங்களுக்கு           இறைவனின் ஆசியால் மருத்துவம் சரியாகி குழந்தை பிறக்கும். கவலைப்படாதீங்க.
-        சார், குழந்தை இல்லாமல் எங்க ஊரிலே ஒரு கல்யாணத்திற்கோ கோவிலுக்கோ கூட போக      முடியல.   இன்னும் குழந்தை இல்லையா? யாருக்கு பிரச்சனை…  அது இது என்று        கேள்விகளால் எங்களை கொலையே செய்கிறார்கள். 
-        இன்னமுமா இப்படி நம்ம நாட்டிலே…
-        ஆமாம் சார்.
-        நீங்க இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. இருவரும் பத்திரமாக சென்று வாருங்கள்.       அப்பா வரவில்லை என்றால் எனக்கு போன் செய்யுங்க.  சரியா?
-        எங்கப்பா கண்டிப்பா வருவார் சார்.
-        சரி, அப்படியென்றால், பத்திரமாக நீங்கள் ஊர் சென்றதும் எனக்கு போன் செய்யுங்க

வணக்கம் சார், வணக்கம் சார் நன்றி நன்றி என்று மாறி மாறி இருவரும் என்னிடம் சொல்ல நான் எந்த உதவியும் செய்யாமல் இவர்கள் எனக்கு ஏன் இந்த வணக்கமும் நன்றியும் சொல்கிறார்கள் என்று வியந்தேன்.

பகல் பதினொன்று மணிவரை என் அலைபேசியை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தேன்.  ஆனால் அவர்களின் அழைப்பு வரவில்லை.

மாலை நான்கு மணிக்கு அந்த பெண்மணி என்னை தொலைபேசியில் அழைத்தார்கள்…

-        சார் பத்திரமாக நாங்க ஊருக்கு வந்து விட்டோம், ரொம்ப நன்றிங்க சார்
-        பிறகு அவர்களின் கணவரும் நன்றி சார். எப்போதாவது எங்க ஊருக்கு ஒரு முறை வாங்க சார்
-       அடுத்த முறை சென்னைக்கு வரும்போது நாம் சந்திப்போம். நன்றி… நீங்கள் பத்திரமாக வீடு     சேர்ந்த செய்தி அறிந்ததில் மகிழ்ச்சி

இந்த சம்பவத்தை என் நண்பரிடம் அலுவலகத்தில் சொன்ன போது என்னை அவர் பாராட்ட ஆரம்ப்த்தார். அதற்கு நான்…

“நண்பா,  நான் என்ன உதவி செய்தேன்.  என் உதவியை அவர்கள் வாங்கவில்லையே.  அவர்கள் நினைத்திருந்தால் என்னிடம் இருந்த பணத்தை வாங்கியிருக்கலாமே.  அதை அவர்கள் செய்யவில்லையே… உண்மையான தமிழ் விவசாயிகள் அவர்களின் கள்ளம் கபடம் இல்லாத அன்புள்ளத்தை நீ பாராட்டு.  அவர்களுக்கு விரைவில் ஒரு குழந்தை பிறக்க பிரார்த்தனை செய்” என்றேன்.

இதை வாசிக்கும் உங்களுக்கு என் இனிய அன்பு கட்டளை….

இந்த சிவகுமார் – கௌரிலக்ஷ்மி தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறக்க உங்களின் ஒரு சிறுபிரார்த்தனையை தயவாக செய்யுங்கள்.

ததாஸ்து
ஆமென்
ஆமின்
(அப்படியே ஆகட்டும்!!!)

அன்புடன்
என் சுரேஷ்

Thursday, May 17, 2012

அந்தப் பெண் காவலர்...


ஐந்து வருடங்களுக்கு முன்னர்…

அன்று மாலை மிகவும் களைப்பாக தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டேன்.

சென்னையை நோக்கின எனது ஒன்றரை மணிநேர பயணத்தில், காரிலேயே களைப்பால் உறங்கிவிட்டேன்.

கார் ஓட்டுனர் பழனி என்றும் நல்ல பார்த்தசாரதி.

நாங்கள் வீடு வந்து சேர இன்னமும் இருபது நிமிடம் இருக்கும் நேரம் எனது அலைபேசி அடித்தது.

என் அலுவலகத்தின் தலமை நிர்வாக இயக்குனர் தான் அழைக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.

-        Hi Suresh, I am going for an urgent business meeting to Taj. 
         I want you to be there with me. 
         That English team really needs your convincing presentation. Please come to my home straight.
-        Sir, Sir…

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதை இந்த பைத்தியக்காரன் காலையிலேயே சொல்லித் தொலைத்திருக்கலாமே! - என்று புலம்பினேன்.

என்ன தான் உயர்ந்த பதவி எனினும் ஒரு தொழிலாளி என்பவன் அடிமை தான்! - என்று மீண்டும் என் மண்டைக்கு அறிவு சொன்னது!

களைப்பு, வெறுப்பு, கோபம், புலம்பல் என என் மனநிலை என்னை கரைத்துக்கொண்டிருந்தது.

" பழனி! வண்டியை அப்படியே ஓர் யூடேர்ண் அடித்து விட வேண்டியது தான்.
முதலாளி கட்டளை. பழனி! ஒன்று செய்யுங்கள், மீட்டிங்கிற்கு நான் அவருடன் காரில் செல்கிறேன். என்னை நீங்கள் அவரின் வீட்டின் சாலையின் எதிரில் இறக்கி விட்டு நீங்கள் இந்த காரிலேயே உங்கள் வீட்டிற்கு சென்று காலை வாருங்கள். நடக்க இயலாத உங்கள் மகனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றீர்களே”  என்றேன்.

“ரொம்ப நன்றி சார்” - பழனியின் முகத்தில் சந்தோஷம் காண்பதில் எனக்கு எப்போதும் ஒரு மகிழ்ச்சி.

தலமை நிர்வாக இயக்குனரின் வீட்டிற்கு எதிரே பழனி என்னை இறக்கி விட்டார்.

பழனி காரில் புறப்பட்டார்.

அப்போது நேரம் இரவு 7.30.

அந்த இடத்தில் அப்படி ஓர் இருட்டு.

நான் அங்கிருந்து சாலையை கடந்து (Road Crossing செய்து) தான் எதிரில் உள்ள என் முதலாளியின் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

அதற்காக முயற்சிக்கிறேன். ஆனால் நந்தனத்தில் உள்ள அந்த சாலையில் ஒன்றின் பின் ஒன்றாக வரும் வாகனங்கள் என்னை சாலை கடக்க அனுமதிக்காமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

என்னடா இது! என்று வெறுப்புடன் இருக்க என்னருகே காக்கி உடையில் ஓர் இளம் பெண் காவலாளர் அயர்வோடு நிற்பதைக் கண்டேன்.

அவர் மிக வாட்ட சாட்டமுடனும் அழகாகவும்  இருந்தார். ஆனால் அவர்களின் முகத்தில் சொல்ல முடியாத ஓர் உணர்வு இருந்தது. அவர்கள் என்னையே பார்ப்பதாக நான் புரிந்து கொண்டேன்.

அவரிடம் சென்றேன்.

- மேடம் என்னிடம் நீங்கள் ஏதாவது பேச வேண்டுமா?

- இல்லை

- ஏன் அழுகுறீர்கள்?

- வயிற்று வலி தாங்க முடியவில்லை சார். வெளி நாட்டிலிருந்து ஒரு பிரசிடண்ட் சென்னைக்கு வந்திருக்காங்க… அவங்க கார் இந்த சாலை கடந்து தொலைக்கர வரைக்கும் நான் இங்கு நின்று தான் ஆக வேண்டும்.

- இது என்ன கொடுமை. இதற்கு ஓர் ஆண் காவலரையே இந்த பணிக்கு போட்டிருக்கலாமே

- ஆண்களுக்கு இணையாக சம்பளம் வாங்கறீங்க தானே! அப்போ நீங்களும் எங்களைப் போன்று பொறுப்பெடுங்கள் - என்றால் எங்களிடம் என்ன பதில்?

- உங்களுடைய பிரச்சனை என்னவென்று நான் புரிந்து கொண்டேன். மேடம் நீங்க என்னோடு தயவாக வாங்க; எதிரிலுள்ள அந்த வீட்டிற்கு தான் நான் செல்கிறேன்.

- சரி வருகிறேன்.

முதலாளி தன் வீட்டுக் கதவைத் திறந்ததும் என்னையும் அந்த பெண் காவலாளரையும் அதிசயத்தோடு பார்த்தார்.

வடநாட்டுக்கார முதலாளியின் மனதில் என்னமோ ஏனோ - ஒரு பயம்.

வடிவேலு அண்ணனின் ஸ்டையில் என் மனம் சொன்னது “ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்” 

சில நொடிகளுக்குப் பிறகு..

நான் எனது சாதாரண குரலில், எந்த அர்த்தமற்ற வெட்கமுமின்றி என் முதலாளியின் மனையிடம் சொன்னேன்.

-Madam she has severe stomach pain.  May be it’s due to her period timings but I don’t know as she finds it shy to tell.  Please speak to her and kindly take care of her.  I just met her on the road while crossing.

அந்த வடநாட்டு முதலாளியம்மா அன்புடனும் கனிவுடனும் அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள்.

பத்தே நிமிடங்களில் காக்கி உடை மாறி, ஒரு புதிய சுரிதாரில் அந்தப் பெண் காவலர் வந்தார்.

அதற்குள் அந்த வீட்டில் வேலை செய்யும் சாந்தி அக்கா, ஒரு கோப்பை காப்பியும் மூன்று பிஸ்கட்டும் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு அன்போடு கொடுத்தார்கள்.

கொஞ்சம் காப்பியும் ஒரு பிஸ்கட் மட்டுமே சாப்பிட்டு பாவம் அந்த காவல் அதிகாரி எல்லோருக்கும் நன்றி சொல்லி புறப்பட்டார்கள்.

இல்லை இல்லை தனக்கு குறித்துள்ள அந்த சாலைக்கு ஓடினார்கள்!

பெண்களுக்காக போராடும் பலரும் கூட பெண்களின் அடிப்படை தேவைகளைப் பற்றி உணர்ந்து கொள்வதில்லை என்று அந்த பெண் காவலாளர் என்னிடம் சொன்னது நான் முன்னமே இதை வாசிக்கும் உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன், மன்னிக்கவும்.

நானும் முதலாளியும் மீட்டிங்கிற்கு புறப்படும் நேரம்.... முதலாளி அம்மா … என்னிடம்-

-Is she your relative?
-Yes
-How
-We both are Tamilians!

Wednesday, May 2, 2012

ஜெயந்தி என்ற அவள்...

அன்பர்களே… வணக்கம்! இறைவனின் கருணையால் எனது முதல் நாவல், “ஜெயந்தி என்ற அவள்…”, திருமகள் நிலையத்தினர் வெளியிட்டுள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பணிவன்போடு தெரிவிக்கிறேன்! இதுவரை வெளியான எனது எட்டு கவிதைத் தொகுப்புகளுக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கும் நீங்கள் தந்த ஆதரவும் ஊக்கமும் தான் இந்த முதல் நாவல் எழுத எனக்கு உதவிற்று என்றால் அது மிகையாகாது! தொடர்ந்து உங்கள் அன்பையும் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். “ஜெயந்தி என்ற அவள்…” எனும் இந்த நாவலை வெளியிடும் திருமகள் நிலையத்தாரின் இணையதள விலாசம் www.thirumagalnilayam.com. இன்னமும் ஓரிரு வாரங்களில் தமிழ் புத்தகங்கள் விற்கப்படும் எல்லா இடங்களிலும் இந்த புத்தகம் எளிதாக கிடைக்க திருமகள் நிலையத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். “ஜெயந்தி என்ற அவள்…” எனும் நாவல் எனது ஆறுமாத உழைப்பும் தவிப்பும் பொறுமையும் கண்டு இறைவன் தந்த பரிசு என்றே நன்றியோடு உணர்கிறேன். இந்த கதைக்கான ஒரு கருவை என்னுயிர் நண்பர் ஒருவரோடு பேசும்போது ஒரு முறை பகிர்ந்தேன். அந்த இனியவர் தந்த அழுத்தமான ஊக்கம் தான் இந்த புத்தகம் என்பதை ஒரு நாளும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. இந்த நாவலில் யாராலும் போற்றப்படும் ஜெயந்தி என்ற கதாபாத்திரமும், ஆச்சரியமான மனிதம் நிறைந்த இலக்கியன் என்ற ஒரு கதாபாத்திரமும் நம்மிடம் பல செய்திகளை சொல்கிறார்கள். நமது சிந்தனையை பல விலாசங்களுக்கு அவர்கள் கொண்டு செல்கின்றனர்; நமது சிந்தனைகளை புனிதமாக்கின்றனர்! இந்த நாவலை நீங்கள் வாசித்த பின்னர் உங்களினிய கருத்துக்கள் என்னைத் தேடி வருமென்ற நம்பிக்கையில்… என்றென்றும் அன்புடன் என் சுரேஷ்

Thursday, January 19, 2012

மழைச்சாரல்... ( என் சுரேஷின் சிறுகதைகள்)


அணிந்துரை

தமிழ் மொழி தொன்மையானது. தமிழ் இலக்கியம் பல கிளைகளைக் கொண்டது. இலக்கியம், செய்யுள் வடிவத்திலும் உரைநடை வடிவாகவும் படைக்கப்படுகின்றன. இவை கலை வடிவம் கொண்டவை.

இலக்கியம், காலத்தை வென்று வாழக்கூடியது. உலக வரலாற்றையே மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டது.

இலக்கியம் படைப்பாசிரயரோடு தொடர்புடையது. படைப்பாளர் அன்றாட வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகழ்வுகள், கிடைக்கும் அனுபவங்கள், உணர்ச்சிமிக்க கலை வடிவங்களாக வடிக்கப்பெற்று, அவை கவிதையாக, புதினமாக, நாடகமாக, சிறுகதையாக அமைகின்றன.

இக்கால இலக்கியங்களில் புதினமும் சிறுகதையும் சிறந்து விளங்குகின்றன.

புதினம் நெடுங்கதை அல்லது பெருங்கதை என்றும், சிறுகதை சிறியகதை என்றும் பொருள்படும்.

புதினத்தை விட சிறுகதையே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. சுவையான ஒரு நிகழ்ச்சி, கவர்ச்சியான ஒரு காட்சி, ஒருவரின் தனிப்பண்பு, ஒரு சிறு அனுபவம், வாழ்க்கையில் பெறுகின்ற வெற்றி, அறவுணர்வு ஆகிய இவற்றை உணர்த்தும் கருத்துக்களைக் கொண்டதாக இருக்கும்.

“மழைச்சாரல்…” என்ற இத்தொகுப்பு பதினெட்டு சிறுகதைகளைக் கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவமாக அமைந்துள்ளன. படைப்பாளருக்கு கிடைக்கின்ற சூழல் அனுபவத்தின் பயனைப் படிப்பவ்ர்களும் பெறக்கூடும்.

இத்தொகுப்பிலுள்ள கதைகளில் கதாசிரியரே பாத்திரமாகிவிடுகிறார். படைப்பாளரே கதைமாந்தர்களில் ஒருவராகி கதை கூறும் முறை, கதை கூறும் உத்திகளில் ஒன்றாகும். இம்முறையினை அறிஞர் மு.வ. அவர்களின் புதினங்களில் காணலாம்.

திரு என் சுரேஷ் அவர்களின் சிறுகதை முதல் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள் அணிவகுப்பில் இவர் இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை!

இச்சிறுகதைகளில் குறிப்பிடக்கூடிய பகுதிகள் பல இருப்பினும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

“ சென்னை கிராமம் இன்னமும் மிச்சம் இருப்பது இங்கிருக்கும் ஓலை வீடுகளில் தான்” என்று சிங்காரச் சென்னையை ஆய்வு செய்கிறார்.

“அரசே மது விற்கிறது” என்று ஒரு கேள்வியும், “ கள்ளச் சாராயம் ஏழைகளின் உயிரை அழித்தால் பரவாயில்லையா?” என்றொரு எதிர் கேள்வியையே பதிலாகவும் தருகிறார், “மழைச்சாரல்” எனும் கதையில்.

“விமான நிலையத்தில்” எனும் தலைப்பில், கோட்டை கட்டி ஆண்ட சரித்திரம் கம்பி வலைக்குள்ளும், அகதிகளாகவும் வாழும் நிலையைச் சுருக்கியுரைத்து சுருக்கென்று சுடுகிறது.

“ஓர் அலைபேசி அழைப்பில்”, “நீங்கள், அலைபேசி வழியாக, ‘ அம்மா சாப்பிட்டீர்களா?’ என்று ஒற்றைக் கேள்வியைத் தூக்கி வீசுகிறது. நெஞ்சம் பற்றி எரிகிறது. நாம் ஒரு பொழுதுகூட இவ்வாறு எண்ணிப் பார்க்கவில்லையே என்று நெஞ்சம் பதைக்க வைக்கிறது. தாய்ப்பாசத்தை நாம் மிகவும் சாதாரணமாகக் கருதிக் கொண்டிருக்கின்றோம்! என்று நமது குறையைத் திருத்துகிறது. இதனை படைப்பாளரின் வெற்றியாகக் கருதலாம்.

“பூங்காவில் ரிஸ்வானா” எனும் கதையில்,

‘பூங்காவில் ஆங்காங்கே பச்சை நிழல்’

‘அவள் கண்ணின் அழகே அவள் இளமையானவள், அழகி, இனிமையானவள் என்னும் செய்தி’

‘மாற்றங்களை நான் ஆசைப்பட்டால் அது முதலில் என்னிடமிருந்தல்லவா ஆரம்பிக்க வேண்டும்?” என்னும் இடங்கள் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றன.

‘ உயர்ந்த சாதியில் பிறந்த ஒரே காரணத்தால் அரசின் நலத்திட்டங்களில் பல உயர்சாதி ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை’ எனும் சமூகச்சிந்தனை கருத்துக்கள் நெஞ்சைத் தொடுகின்றன.

பலவிடங்களில் ஆசிரியரின் மனக்குமுறலைக் காணமுடிகிறது. அத்தகைய குமுறலே அவரின் படைப்புகளுக்கு மூலமாக இருக்கக் காண்கிறேன்.

திரு. என் சுரேஷ் அவர்களின் படைப்புக்கு வாசகர்கள் அவரை ஆதரித்து மேலும் மேலும் எழுதத்தூண்ட வேண்டும்.

வாழ்த்துக்களுடன்,

முனைவர் இர. வாசுதேவன் MA., Mphil., Ph.d.

Wednesday, September 7, 2011

சக்தி அண்ணனின் வாழ்த்துக்கள்...

Monday, August 15, 2011

ஏன் இப்படி நானும் என் வாழ்த்துக்களும்...

நேற்று முதல் இந்த நொடி வரை எனக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் வந்து கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள் அனுப்பினோருக்கு மட்டும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அறிவித்து வருகிறேன்.

64 வருடங்களுக்கு முன் கிடைத்த சுதந்திரம் வைத்து இன்னமும் நாம் இந்தியர்கள் ஏன் முன்னேறவில்லை!

ஒரு கூட்டம் கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஏன் இன்னமும் மக்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்ற சிந்தனை ஒவ்வொரு வருடமும் என் நெஞ்சில் வில்லெனப் பாயும்; அது இன்றும்!

குட்டி நாடுகள் ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டிருந்த போது வணிகம் வழி வந்து ஒவ்வொரு நாடாக ஆட்சி பிடித்து பிறகு எல்லா நாடுகளையும் சேர்த்து இந்தியா என்று ஆங்கிலேயர்கள் அழைத்தனர் என்று சரித்திரம் சொல்கிறது.

அவன் கொள்ளை அடிக்க, அடிமைப் படுத்த, ஆட்சி செய்ய சௌகரியம் கருதி செய்திருப்பினும், அந்த செயலால் தானே இன்று இந்தியா என்றொரு நாடு என்று ஒரு சிந்தனையும் மலர்கிறது.

அவன் அவனுடைய வசதிக்காக கட்டி அமைத்த கட்டுமானப் பணிகள், கட்டிடங்கள் இவைகளுக்கு அதிகமாக 64 வருடங்களில் இந்நாடு சாதித்துள்ளதா?

வெறுத்துப் போகும் நொடிகளில் வெள்ளையர்களே இந்த நாட்டை ஆண்டிருக்கலாம் என்று சொன்னோர்களிடம் நான் அன்றெல்லாம் ஏன் சண்டையிட்டேன் என்றும் என் மனசாட்சி என்னிடம் கேட்கிறது! இந்தியனே இந்தியாவை ஆளட்டும் என்று சமாதானமும் செய்கிறது என் மனம்!

இதற்கு நியாயம் காட்டியும் முரணான கருத்தோடும் உதவி செய்ய வருகிறது Hong Kong நாட்டின் சரித்திரம். வெள்ளையர்கள் அந்நாட்டை சீனத்திடம் கொடுத்து புறப்படுகையில் ஏன் கவலையுடன் ஆழ்ந்தனர் அந்நாட்டு மக்கள்?

தமிழ்நாட்டில் வாழும் சிலர் இன்னமும் தங்களின் குழந்தைகள் பாணிடிச்சேரியில் பிறந்திருக்கும் சான்றிதழ் கிடைக்க ஏன் ஆசைப்படுகின்றனர். பிரஞ்சு நாடு மீது பாணிடிச்சேரி மக்களுக்கு இன்னமும் ஏன் அப்படி ஒரு பற்று?

எரிந்த விறகுகளைப் பற்றி கவலைப்படாமல் ருசியான உணவு அருந்துவது போலத்தான் நாம் மகாத்மா காந்தித் தலமையிலான சுதந்திரம் வாங்கித் தந்தோரை மறந்து சுதந்திரம் அனுபவிக்கிறோமா?

இன்று மட்டும் தான் தேசீயத்தலைவர்களின் சிலைகள் குளிக்க வேண்டுமா?

இன்று மட்டும் தான் தேசீயக் கொடிகள் விற்கப்பட வேண்டுமா?

நாளை காலையில் ஒரு மாணவன் தேசியக்கொடியை தன் சட்டைப்பைய்யில் ஏந்தி சென்றால் அவனை கிண்டல் செய்யும் சகமாணவர்கள் மீதா குற்றம் ? அல்லது இப்படி குழப்பின கல்வித்திட்டம் மற்றும் சமூகம் செய்வதா குற்றம்!

தேசத்தில் எங்கும் பசி, பட்டினி, பஞ்சம் இவைகள்இன்னமும் இருப்பதை தெரிவிக்காத ஊடகங்களுக்கு மட்டும் வளர்ந்த இந்தியாவின் எத்தனையோ அழகான புகைப்படங்கள்!

இனத்தை காப்பவர் என்று நம்பினோர்கள், அதை உறுதி மொழியாக சொன்னவர்கள் எல்லோரும் திசை மாறிச் சென்று சுயநலக் கரையில் கட்டிடங்களாகினரே!

1947 இல் சுதந்திர தின விழாவில் மகாத்மா காந்தி ஏன் பங்குகொள்ளவில்லை!

பெரியார் ஐயா ஏன் சுதந்திர தினத்தை எதிர்த்தார். வெள்ளையர்களிடமிருந்து தான் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் உயர்ந்த ஜாதிகளின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை கிடைக்கவில்லையே என்ற அவரின் கேள்வி, இன்னமும் ஜாதி மதங்களை முன் நிறுத்துவோருக்கும் ஏழைகளை அடிமைகளாக்கி தொழிலாளி என்ற போர்வையில் அழைப்பவனுக்குமாக பதிலின்றி நிற்கிறதே!

சுதந்திர தினம் என்றால் இனொரு நாள்; இந்த வருடத்தில் கிடைத்த இன்னொரு விடுமுறை நாள் என்று தானே ஒரு சாதாரணனின் மகிழ்ச்சி!

வருடத்தின் ஒரு நாள் கொண்டாட்டமா இது?

கோழைகளின் மனைவிகள் குங்குமத்துடன் இருக்க வீரர்களின் மனைவிகள் இன்னமும் விதவையாகி வரும் கொடுமை இன்னமும் தொடர்கிறதே!

அறப்போர் செய்யக்கூட உரிமை மறுக்கப்படுகிறதே!

இயக்கங்களின்றி இந்த நாடு கட்சிகளால் நிரம்பியுள்ளதே!

இந்தியாவிற்கு வெளியுள்ளோரின் இந்திய நாடு மீதுள்ள பற்று கண்டு வியக்கிறேன். ஆனால் அதில் பலரிடமிருந்தும் " இந்த ஏழை நாடு முன்னேற என்ன உதவி செய்தீர்கள்?| என்ற கேள்விக்கு பதில் ஒன்றும் பெரிதாக கிடைகக்வில்லை, அவர்களின் கோப உணர்ச்சிகள் தவிற!

இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி போன்ற படங்களில் இயக்குனர் அந்த படங்களின் கடைசியில் வைத்துள்ள வசனங்கள் எவ்வளவு சிறப்பானவை ! இதில் தவறுகுகள் இருப்பின் அதை அகற்றி அதில் இருக்கும் சிறப்புகளை அறிந்து அதை இந்த நாட்டு மாணவர்களுக்கு அரசோ தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ பரப்புரை செய்யலாமே!

அந்நியன் மற்றும் இந்தியன் தாத்தா செய்தது போல யாரும் யாரையும் கொலைகள் செய்யவே வேண்டாம். ஆனால் அறப்போராட்டத்தால் சுதந்திர தினம் பெற்றும் அதைக் கொண்டாடும் 64 ஆவது வருடம் விஜய் தொலைக் காட்சியில் இன்று " யுத்தம் செய்" என்ற படம் ஏன் என்று யோசிக்கலாம். யுத்தம் செய் என்ற படம் நான் பார்க்கவில்லை. அதன கதையும் எனக்குத் தெரியாது. ஆனால் அதன் சில காட்சிகள் விளம்பரமிட்டு காண்பிக்கையில் அதில் உண்மையாகவே கொலைவெறி உள்ளதாக உணர்ந்தேன்.

இந்தியாவில் நேர்மையாக சம்பாதிப்பவனுக்கு 11 மாதம் மட்டுமே சம்பளம். 12 ஆவது மாத சம்பளம் வருமான வரியாக எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் எத்தனை கோடி மக்கள் உண்மையாக வருமான வரி கெட்டுகிறார்கள்? அப்படி உண்மையாக கொடுத்த பணத்தை கொள்ளை அடித்து சிறைவாசம் அனுபவிப்போர் ஆயிரத்தில் ஒன்றோ இரண்டோ? வெளிச்சத்திற்கு வராமால் போன ஊழல்கள் இந்த 64 வருடங்களில் எத்தனை என்று யாருக்குத் தெரியும்?

குறிப்பிட்ட ஒரு கல்லூரி என்னை இன்று சிறப்பு நிகழ்ச்சிக்கு அழைத்தனர். அங்கு செல்ல மறுத்தேன். கல்லூரி முடித்து வேலைக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு ஒரு செய்தி சொல்ல நண்பர் கேட்டார். " படித்ததை என்றும் மறக்காமல் இருங்கள்! நல்ல நிர்வாகத்தில் வேலைக்கு செல்லுங்கள். தனிமனிதனுக்கு உரிமையான எந்த நிறுவனத்திலும் வேலைக்கு செல்லாதீர்கள். சுய தொழில் செய்ய முயற்சி செய்யுங்கள், நல் வாழ்த்துக்கள்" என்று சொல் நணபா என்றேன்.

64 வருடங்களில் அரசு நேரடியாகவே பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு மணி ஆர்டரில் பணம் அனுப்பியிருந்தால் இன்னமும் அவர்கள் பிறபடுத்தவர்களாக தொடர மாட்டார்கள் என்று சொன்னால் அதை மறுக்க யாரால் இயலும்!

ஏழ்மை இல்லாத இந்தியாவை கனவு காண்போம் நானும் இதை வாசிக்கும் நீங்களும்!
நல்ல கனவுகள் நம்மை தூங்க விடாமல் இருக்கட்டும்!

இவ்வளவு சொன்ன பிறகு என் தாய்த் திருநாடு இந்தியாவை வணங்கி உங்களிடம் வாழ்த்துக்களை கூறி மகிழ்கிறேன்...

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...!!!

பேரன்புடன்
என் சுரேஷ்

Saturday, April 16, 2011

அழைப்பு மணியோசை...

சுய நினைவின்றி எனது அக்கா மருத்துவமனையில்!

என்னை அமைதியில் அடிமைப்படுத்த நான் முயலும் நொடிகளில் .. "வெளியே போ" என்றொரு சத்தம்.

அது எனக்குள் இருந்த கவலையை கோபமாக்கினது!

யாரது இப்படி அநாகரீகமாக கர்ஜிப்பது.. என்று திரும்பிப் பார்த்தேன்.

விளங்க இயலாத ஓர் உணர்வை முகத்தில் ஏந்தின இளமையான ஒரு செக்யூரிட்டி!

"நான் யாரென்று தெரியுமா... இந்த மருத்துவமனையின் டிரஸ்டிகள் எல்லாம் எனக்குத் தெரிந்தவர்கள் என்று ஆரம்பித்து அவனை திட்ட ஆரம்பித்த்தேன்...

அப்போது அவனது மொபைலில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் அவன் வைத்திருந்து அழைப்பு மணியோசையை அந்த மொபைலில் பாடினது " சோதனை மேல் சோதனை போதுமடா சாமி"...
உடனே அவன் மருத்துவமனைக்கு வெளியே சென்று, பேசி முடித்து வந்தான்.

கனிவோடு அவனிடம் சென்று, அக்காவின் உடல்நிலை சரியில்லையே என்ற கவலையால் தான் கோபப்பட்டேன். தவறாக நினைக்க வேண்டாம் என்றேன்.

அது பரவாயில்லை சார் என்றான்.

சரி தம்பி.... எத்தனையோ ரிங் டோண்களை நானும் கேட்டுள்ளேன், ஆனால் சோதனை மேல் சோதனை ... எனற பாடலை மொபைலின் அழைப்பு மணியோசையாக ஏன் நீங்கள் மட்டும் வைத்துள்ளீர்கள்? நேரடியாக கேட்கிறேன், என்ன? காதல் தோல்வியா?

அவனின் கண்ணீர் ஆமாம் என்றது! சில நிமிடங்கள் அவனுக்கு ஆறுதல் கூறினேன். முடிவில்... ஒரு முறை கூட உங்க்கள் காதலியின் வீட்டாரிடம் பேசி முயற்சி செய்யலாமே தம்பி - என்று சொல்லிப புறப்பட்டேன்.

இரண்டு நாள் கழித்து, உடல்நலம் தேறின எனது அக்காவை அழைத்து நான் மருத்துவமனையிலிருந்து புறப்படுகையில் மகிழ்ச்சியோடு என்னெதிரே வந்தான் அந்த இளைஞன்!

சார், என் காதலியின் குடும்பத்தாரோடு என் வீட்டார் நேற்று பேசி இப்போது எல்லோரும் எங்கள் திருமணத்திற்கு சம்மதித்தனர் என்றான் பெருமகிழ்ச்சியுடன்!.

எனது அக்காவிற்கு, அவர்களின் உடல்நிலை சரியானதை விட, தனது மகனின் வயதுள்ள அந்த இளைஞனின் உள்ளம் மகிழ்ச்சியானதே அதீத சந்தோஷம் தந்தது என்றிட என் மனதிலும் அப்ப்டி ஒரு சந்தோஷம் என்றேன்!

காதலர்களை பிரிக்காத சமூகம் உருவாக மௌனமாக பிரார்த்தனை செய்தது என் மனமும்!

Thursday, March 17, 2011

திரு மைக்கல்ராஜ் அவர்கள் இறைவனின் ராஜ்ஜியத்திற்கு...



எனது ஆசிரியர் திரு மைக்கல் ராஜ் அவர்களைப் பற்றி எனது வலைதளத்தில் 11/6/2008 - ல் பதிவு செய்திருந்தேன். இதை தயவாக வாசிக்கவும்.

http://nsureshchennai.blogspot.com/2008/07/blog-post_11.html

அன்புடன் குழுமத்தின் ஒரு சந்திப்பில் தலமை விருந்தினராக வந்து எல்லோரையும் வாழ்த்தினார்.

நேற்று (16-03-2011) இரவு 7.00 மணி அளவில் மாரடைப்பால் இவர் இறைவனடி சேர்ந்தார்.

நாளை சென்னையில் உள்ள சின்னமலையில் இவருக்கு இறுதி மரியாதை செய்ய உள்ளது.

அவரின் அன்பைப் பெற்ற என்னையும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சோகத்தில் தவிக்கிறோம்.

இந்த புண்ணிய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஆழ்ந்த துயரத்துடன்
என் சுரேஷ்

Saturday, March 12, 2011

இனிய மனிதர் தம்பி காதர் பாஷா அவர்களை வாழ்த்துங்கள்!!!



காதர் பாஷா


பாஷா - என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் மாணிக்கம் என்ற கதாபாத்திரம் இவரைக் கண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டதோ?

அலுவலகரீதியாக இவரோடு ஓராண்டு தொலைபேசியில் பேசிய பிறகு ஒரு நாள் நான் நேரடியாக இவரைக் காணச் சென்று அவசரமாக நான் கொடுத்த வேலையை முடிக்க என் கருத்துக்களை சொல்லி வந்து விட்டேன்.

ஓராண்டு தொலைபேசி நட்பில், சார்... என்று அழைக்க ஆரம்பித்து பிறகு என்னை அண்ணா என்றழைக்க இவருமெந்தன் அன்புத் தம்பி ஆனார்!

என்னை விட வயதில் பெரியவர்கள் அண்ணா என்றழைக்கையில் தான் கொஞ்சம் சங்கடம். அனால் இவர் முதிர்ச்சியில் மட்டுமே என்னை விட மூத்தவர்.

அன்று மாலை, எனக்கு தம்பி காதரிடம் பேச வேண்டுமென்று மனதில் பட்டது.

கொஞ்சம் நேரம் அன்றும் அதற்கு பிறகும் பேசியதில் என் மனதில் பதிவானவைகள்:

வெற்றிபெற்ற எல்லோருக்கும் கடினமான பாதைகள் உண்டு; பலர் அதை மறந்து விடுவார்கள் ஆனால் காதர் அதை ஒவ்வொரு நொடியும் நினைவு கோருகிறார்.

"தாய் என்ற பாசத்தின் அதிசயத்தை மக்கா அனுப்ப தூய்மையான உழைப்பும் சேமிப்பும் செய்து வருகிறேன்" என்றார். நான் உதவி செய்ய முன் வந்தேன், அன்போடு மறுத்தார்.

சொந்தமான நிலத்தில் மிகச்சி சிறியதாக ஒரு வீடு கட்டித் தான் வாழ்கிறார். "ஏன்" என்று கேட்டேன், " "எங்கள் சொந்த பந்தத்தில் எத்தனையோ பேர் வறுமையால் போராடுகிறார்கள் தெரியுமா அண்ணா! அவர்களுக்கு உதவ என் வியர்வைத்துளிகள் மண்ணில் விழட்டும்; எனக்கு இநத வீடே போதும்" என்றார்.

கல்லூரியில் சேர்ந்து படிக்க பொருளாதாரத்தால் தடைபட்ட ஒரு மாணவன் ( இந்து மதத்தை சார்ந்தவன்) இவரிடம் வேலை கேட்டு வந்திட, காதர் அவனுக்கு வேலை கொடுத்து உதவினாலும், அந்த மாணவனை ஓர் எஞ்சினியரிங்க் கல்லூரியில் எப்படியாவது சேர்க்க வேண்டுமென்று ஆசைப்படார். ஒரு வருடகாலத்தில் அவனின் சம்பளத்தில் ஒரு பகுதியை சேர்த்து வைத்து அதில் தனது சொந்த பணத்தையும் போட்டு காத்திருந்ததை அவர், "அண்ணா இந்த மாணவனை ஓர் எஞ்சினியராக பார்க்க ஆசைப்படுகிறேன் என்றார். என்னால் முடிந்த மிகச்சிறிய உதவி செய்தேன். தற்போது நல்லதொரு எஞ்சினியரிங்க் கல்லூரியில் அந்த மாணவன் படிக்கிறான்! - இதனால் இவருக்கு என் மீது அதீத பாசம்! என்ன தான் வேலையில் பிசியாக இருந்தாலும் எப்போதாவது நான் தொலைபெசியில் அழைத்தால் உடனே சந்தோஷமுடன் என்னோடு பேசுவார்.

மனைவியை கிண்டல் செய்தும் அடுத்தவர்களிடம் நகைச்சுவைகளை பேசியும் சிரிக்கும் வாலிபர்கள் அதிகம் இருக்கும் இந்த சமுதாயத்தில் இவர் வித்தியாசமானவர். "அண்ணா எனக்கு இறைவன் மிகவும் சிறப்பான பரிசுகளை தந்துள்ளார். அந்த சிறப்புப் பரிசள் தான் எனது பாசமான மனைவியும் இரண்டு குழந்தைச் செல்வங்களும்" என்று சொல்லி மகிழ்ந்தார்.

இன்று இவர் டிஜிட்டல் பான்னர் துரையில் இந்தியாவிலேயே மிகச் சிறப்பான ஒரு கலைஞனாக வளர்ந்திட இவருடைய உழைப்பு தான் என்ற எனது புரிதலை இவர் சம்மதிக்காமல் சொல்கிறார், " அண்ணா இதற்கு காரணம் எனது தாயின் கடினமான உழைப்பால், அவர்கள் என்னை எங்கள் குடும்பத்தின் வறுமையும் பாராமல், படிக்க வைத்தது தான் " என்று.

குறிப்பிட ஒரு நபருக்கு ஓர் உதவி செய்ய இவரால் இயலவில்லை. ஆனால் வெற்றிக்கு வழியிட்டு கொடுத்தார். அந்த உதவி பெற்றவர் என்னுடைய நண்பர்களில் அதிக காலம் எனது நட்போடு இருக்கும் ஏழை நண்பன், கே.ஜான்.

கணினியில் இவர் அளவுக்கு திறமை கொண்ட ஒருவரை இதுவரையில் நான் பார்த்ததில்லை.

இவர் முகநூலிலும் இருக்கிறார்.

இவருடைய அலுவலகஇணையதளம் www.marcads.com

உண்மை -உழைப்பு -எந்நேரமும் இறை உணர்ந்து வாழ்ந்தல் -அடுத்தவனுக்கு ஜாதி மத வித்தியாசமின்றி உதவ காத்திருக்கும் இதயம் கொண்டு வாழ்க்கையை மகிழ்தல் - நல்ல மகன்- நல்ல கணவர்- நல்ல தந்தை- எல்லோருக்கும் அன்பின் சொந்தம் ----- என இவரைப் பற்றி உண்மையான தகவல்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

" எல்லா புகழும் இறைவனுக்கே " - என்பார் தம்பி காதர் இதை வாசித்தால்!

நாளை 13 ஆம் தேதி இந்த நல்ல மனிதருக்கு பிறந்த நாள்.

என்/நம் இனிய இந்த முகநூல்/வலைதள - நட்பின் சகோதரனுக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த சமாதானமும், நோயற்ற வாழ்வும், குறையற்ற செல்வமும், அன்பின் குடும்பமும் தொடர்ந்து அமைய அவருடைய பிறந்த நாளன்று, ஆதாவது 13/3 - நாளை நாம் வாழ்த்துவோம்! கவிதையாலும் வாழ்த்துவோம். தமிழன்னையும் மகிழட்டும்!

இது போன்ற நற்பணி செய்ய முன் வரும் நண்பர்களுக்கு முன்னதாகவே எனது நன்றிகள் பல!

இவருக்காக ஒரு நொடி கண்களை மூடி பிரார்த்தனை செய்வோம்!

நல்லவன் வாழ்வான்!
காதர் வாழ்வான் - இதற்கு
கிருபை தந்து கனியட்டும் இறைவன்!

அன்புடன் காதரின் அண்ணன்
என் சுரேஷ்

Monday, February 28, 2011

கடந்த - அந்த 18 நாட்கள்

இம்மாதம் 3-ஆம் தேதி எனது பிறந்தநாளை இனிதாக கொண்டாடினோம். வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

பிறந்த நாள்ன்று அண்ணனோடு கோவில்களுக்கு சென்று மதிய உணவு தாமதமாகவே எடுத்தோம்.

அடுத்த நாள் 4 ஆம் தேதி மாலை அண்ணனோடு ஒரு துணிக்கடைக்கு சென்றோம். துணி வாங்க அல்ல: அதன் உரிமையாளர்கள் இருவரை அண்ணன் சந்திக்க வேண்டும் என்பதற்காக. அந்த உரிமையாளர்களின் மூத்தவருக்கு வயது 85 இளையவருக்கு 76. இருவரும் பேரன் பேத்திகளோடு கொஞ்சி விளையாடும் இந்நாளிலும் ஒரே குடும்பத்தில் இருவரின் குடும்பத்தார் யாவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். அண்ணன் மீது தம்பிக்கு உயர்ந்த மரியாதையும், தம்பி மீது அண்ணனுக்கு அளவு கடந்த பாசமும்!

இந்த சந்திப்பில் அந்த இரு பெரியவர்களும் என் அண்ணனும் பேசிக்கொண்டிருக்க நான் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருந்தேன். திடீரென்று எனக்கு கொஞ்சம் வியர்வை வருவது போலும் மயக்கம் வருவது போலும் அதீத ஒற்றைத் தலைவலியாகவும் இருந்தது. சந்திப்பு முடியும் வரை எப்படியோ சமாளித்து காத்திருந்தேன், பிறகு அண்ணனின் உதவியோடு வீடு வந்து சேர்ந்தேன்.

ஒன்றுமிருக்காது என்ற நம்பிக்கையில் அடுத்த நாள் 5 ஆம் தேதி இரவு ஏற்கனவே முன்பதிவு செய்தது படி பேருந்தில் ஊருக்கு புறப்பட்டு சென்றேன். 9 ஆம் தேதி அண்ணனின் மகளுக்கு திருமணம். சென்னை திரும்பி வரவும் கூட விமானம், இரயில் என ஒன்றும் இல்லாமல் 13 ஆம் தேதி இரவில் பேருந்தில் புறப்பட்டு 14 ஆம் தேதி காலை சென்னை வந்து சேர்ந்தேன்.

வழக்கமாக ஊருக்கு சென்றதும் நான் எப்போதும் செல்லும் ஒரு கான்வெண்டு (ஏழைகளை நேசித்து உணவளிக்கும் கன்னியஸ்த்ரீகள்(தாய் தெய்வங்களின்) அமைப்பு, புத்தகக்கடைகள், பிரபல எழுத்தாளர்கள், சில அரசியல் பிரமுகங்கள் (நல்லவர்கள்-ஏழைகள்) – என இருக்கும் பட்டியல்களில் எங்கும் எனக்கு செல்ல இயலவில்லை.

9 ஆம் தேதி அண்ணன் மகளின் திருமணத்திற்கு சென்று வந்தேன்.

11 ஆம் தேதி 80 வயதான ஒரு பெரியவரை அவரின் வீடு சென்று கண்டு வந்தேன். சம்பாதித்து பிள்ளைகளை வளர்த்தி பெரிய மனிதர்களாக்கி தற்போது ஓய்வூதியத்தால் தன்மானமாகவும் ஆனால் கவலையை மறைக்கத் தெரியாமலும் கலங்கி வாழும் ஒரு வாழ்க்கை-பல்கலைக்கழகம் அவர்.

பிறகு இரண்டு நண்பர்களை சந்திக்க வெளியே சென்றேன், அவ்வளவு தான்!

மற்றபடி எப்போதும் வீட்டில் தான் இருந்தேன். கல்யாண வீட்டிற்கு வந்த எல்லோருடனும் அன்போடு பேசினேன். தொடர்ந்து எனக்கு அசௌகரியம் இருந்ததால் அவ்வப்போது என் அறையிலேயே ஓய்வெடுத்து வந்தேன்.

4 ஆம் தேதி தாக்கின ஒற்றைத் தலைவலி என்னில் ஏற்பெடுத்தின பயத்தில் என்னுள் தான் எத்தனை கேள்விகள்??? நானே எனக்கு தைரியம் தர எத்தனை பதில்கள்!!!

ஐயோ எனது இடது பக்கம் அப்படியே செயலிழந்து போய்விடுமோ? கொஞ்சம் நடந்தாலே தலை சுற்றுகிறதே? இது அந்த நோயோ இந்த நோயோ? சர்க்கரையின் அளவு அதிகமாக குறைந்ததோ? ஏறினதோ? என் இதயம் இன்றே நின்று போய்விடுமோ? இனி நான் கணினி உபயோகிக்க இயலுமோ? இடது பக்கம் இப்படி ஏன் மறுத்துப்போகிறது? இடது கண்ணும் வலிக்கிறதே!!!!

பயமே நோய்.. ஒன்றுமில்லை எல்லாம் சரியாகிடும் என்று சொல்லி என்னை தேற்றி வந்தேன்.

அங்குள்ளோரிடம் எனது உடல்நிலை பற்றி சொன்னால் என்னை உடனே ஒரு மருத்துவமனையில் சேர்த்து லட்சங்கள் செலவு செய்வார்கள். கல்யாண வீட்டின் சந்தோஷங்கள் என்னால் ஏன் பாதிப்பிற்குள்ளாக வேண்டும் என்று நான் எனது அசௌகரியங்களை எனக்குள்ளேயே வைத்திருந்து எனது பிறந்த ஊர் சென்னைக்கு வந்து விட காத்திருந்தேன்.

12 ஆம் தேதி எனது அண்ணி (என் தாயை விட அதிகமாக பாசம் தரும் அதிசயம்)… "தம்பி… நாளைக்கு நீங்க ஊருக்கு போகவேண்டும். இன்றைக்கு நீங்க இங்கே ஒரு மருத்துவரை தயவாக பாருங்கள், எப்போதும் சந்தோஷமாக இருந்து, எங்களை சிரிக்கவைத்து வயிற்றுவலி தரும் உங்களை இப்போது இப்படி பார்க்க முடியவில்லை" என்று அழுது சொன்னதும்… சரி அண்ணி!!! மருத்துவரிடம் செல்கிறேன் என்றேன். அண்ணன் மகனோடு அந்த மருத்துவரைக் கண்டேன். தீவிர சோதனை! "ஒன்றும் பயப்படாதீர்கள். நீங்கள் தாராளமாக சென்னைக்கு பயணம் செய்யலாம்" என்று தைரியம் தந்தார்கள், அந்த மருத்துவர்.

அப்படி 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நகர்ந்தது.

14 ஆம் தேதி சென்னை வந்ததிலிர்ருந்து 22 ஆம் தேதி வரை… ஒன்பது நாட்கள் சர்க்கரை, ரத்த அழுத்தம், இஸிஜி, இ இ ஜி, என எல்லா சோதனைகளும் செய்து… முடிவில் வெர்டிகோ காரணம் தான் இந்த அசௌகரியம் என்று கண்டறிந்து அதற்கு ஒரு மாதத்திற்கு மருந்து தந்து மருத்துவர்கள் என்னை கொஞ்சம் ஓய்வெடுக்க சொன்னார்கள்… நேற்று 23 முதல் மீண்டும் பழைய என் சுரேஷாக இதோ முகநூலில் நான்!!!

இந்த அனுபவத்தை நான் ஏன் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்?

எனக்குத் தெரிந்தவர்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் அவர்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லி, அவர்களோடு பேசுகையில் எப்படியாவது எனது பேச்சில் அவர்களை சிரிக்க வைப்பது எனது வழக்கம். (நன்றி – பைபிள்)

பலர் என்னை பிறகு அழைத்து, “நீங்க வந்தாலே நம்ம உடம்பு சரியாகிடும்” என்பார்கள். அதை ஏதோ ஒரு அன்பின் வெளிப்படுத்தல் என்றே எண்ணி வந்தேன்.

ஆனால் நான் உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஒவ்வொரு முறையும் என்னை நேரடியாக சந்தித்து எனக்கு ஆறுதல் கூறிச் சென்ற இறைவனின் செல்வங்களின் முகங்கள் எனது கண்முன்னே வந்தன…. அவர்கள் மட்டும் எனை சந்திக்க வரவில்லை என்றால் நான் மீண்டும் எழும்ப ஒரு சக்தி ( காஸ்மிக் எனர்ஜி) எனக்கு வந்திருக்காது என்று மிக உறுதியாக உண்ர்கிறேன்.

கடந்த ஞாயிறு 20 ஆம் தேதி மதியம் என்னை சந்தித்து எனக்கு ஆறுதல் தந்து பிரார்த்தனை செய்து சென்ற சகோதரர் திரு இமேனுவேல் என்பவர் வந்த பிறகே நான் மீண்டும் நானானேன்! சகோதரர் திரு இமேனுவேல் அவர்களை ஆறுதல் தர எனக்களித்த இறைவனுக்கு நன்றி.

எனது அண்ணன்- சக்தி அவர்கள், அண்ணி, மற்றும் ஊரிலுள்ள சொந்தங்க்கள் இங்குள்ள சொந்தங்கள், பலமுறை தொலைபேசியில் பேசின/ குறுஞ்செய்தி அனுப்பின என்னுயிர் தோழர்கள், தோழிகள்… இவர்களை எல்லோரையும் நன்றியோடு நான் நினைவுகொருகிறேன்.

உங்களை எல்லோரையும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.

ஆக! உங்கள் சொந்த பந்தங்களுக்கோ நண்பர்களுக்கோ உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களை உடனே சந்தியுங்கள். உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால், அவர்களை தொடர்பு கொள்ள தயங்காதீர்கள்.

சென்னையில் உள்ளவர்களுக்கு சொந்தங்களோ நண்பர்களோ இல்லை எனில் என்னை தொடர்பு கொள்ளுங்கள்!

இன்னொரு மனிதன் உயிரோடு இருக்க யாரும் அனாதை அல்ல!

எல்லோருக்கும் தந்தை இறைவன்! இறைவன்! இறைவன்!

அன்பு நன்றி வணக்கம்
என் சுரேஷ்

Wednesday, January 5, 2011

சொர்க்கம் வேண்டுமா?

Friday, October 22, 2010

உருக்கம் - நடிகரின் மனதை மாற்றிய சின்னஞ்சிறுசுகள்...

Monday, September 20, 2010

நீ ஒரு காதல் சங்கீதம்...


//நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம் //

காதலை சங்கீதமென்றும் அவளின் வாய்மொழி தெய்வீகமென்றும் என்ன அழகான வர்ணனை!

//வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்...இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்//

இந்த வரிகளை வாசிக்கையில் அது மும்பையில் பறக்கும் ஜோடிப்புறாக்களை நமது கண்முன்னே கொண்டு வருகிறது ஆனால் இதை எழுதின வாலி அவர்கள் அதை ஊர்வலம் போவதாக எவ்வளவு அழகாக ரசிக்கிறார் பாருங்கள்!

இதயத்தில் காதல் உணர உணர அதன் கீதம் கேட்க, ஜீவன் நனைகிறதாம் ! அதை இரவும் பகலும் ரசித்திருக்க ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதை என்ன அழகாக பாடல் வரிகளில் சித்திரம் தீட்டியிருக்கிறார் பாருங்கள் இனிய கவிஞர்!

//பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன்
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?//

நாயகன் நாயகியின் கூந்தலில் முத்தமிடும் காட்சியை ஒரு கவிஞனின் பார்வையில் எப்படி மிளிர்கிறது பாருங்கள்.

உந்தன் கூந்தலில் நான் முத்தமிட அப்போது வெளிவரும் எந்தன் காதல் மூச்சே உனக்கு பூவாக ஏன் சூட்டுகிறாய் என்ற அருமையான ஒரு உணர்ச்சிக் கேள்வி இதை ரசிக்க முடிந்தவன் காதலில் ஞானி!

//தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?//

தேன் தரும் அதிசய நிலவு நான் அவ்வளவு தான், தற்போது என்னை விட்டு விடு என்று சொன்ன பின்னர் , " எந்தன் தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்" - என்ற பயம் கலந்த ஓர் சுகமான உளவியல் கேள்வியை நாயகியின் நிலை அறிந்து கேட்கிறார், கவிஞர்!

//கடற்கரைக் காற்றே...கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு
மணலலை யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே //

இனிய தென்றலே! நீ எந்தன் காதலி வருவதற்காக வழியை மட்டும் தந்தால் போதாது; நாங்கள் இருவரும் நடந்து வந்த பாதச்சுவடுகளை தயவாக நீ மறைக்காதே, ஏனெனில் அதில் எங்கள் காதல் பயணம் மீண்டும் தொடரட்டுமே என்று கவிஞர் தென்றலிடம் கெஞ்சிச் சொல்கையில் தென்றல் நம்மோடு வாழுகின்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் என்றே தோன்றுகிறது!

இதுபோல் இனிய பயணங்கள் எல்லோருக்கும் தொடரட்டுமே....!

அன்பு நன்றி வணக்கம்

என் சுரேஷ்

இன்னொரு மனிதன்


இன்னொரு மனிதன் உயிரோடு இருக்கும் வரையில் யாரும் அனாதையல்ல!

எனது வாழ்க்கையிலும் பல வேளைகளில் அயர்வு வருவதுண்டு. ஆனால் அவைகளையெல்லாம் எனது புன்னகை மறைத்து விடும்! இந்த சிரிப்பு மட்டும் என்னிடம் இல்லை என்றால் என் மீது அனுதாபத் தீமழை பொழிந்தே இவ்வுலகம் என்னை அழித்திருக்கக்கூடும்.

எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் நான் என்றோ இறந்துபோயிருப்பேன் என்று மகாத்மா காந்தி அடிகளார் என்றோ சொன்னது எனக்கு இன்றும் பொருந்தும்!

சோர்ந்து போகும் தருணத்தில் நமக்கு தூரத்தில் ஒரு சந்தோஷத்தின் வெளிச்சம் கிடைக்கும்போது அந்த வெளிச்சத்தை காணும் வரையுமாவது மனம் அதை நோக்கி வாழக்கூடும். இன்று இந்த பூமிப்பந்தில் வாழும் 900 கோடி மக்களுடைய வாழ்க்கையும் தொடர்வது இதன் அடிப்படையில் தான் என்றால் மிகையாகாது!

இன்று மாலை ஏழு மணிக்கு ஒரு நல்ல மனிதர் எங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக நேற்று செய்தி வந்தது. சிறுகுழந்தையின் நாளைய பிக்னிக் பரவசம் போல் மனம் சந்தோஷமடைகிறது அந்நொடி முதல்!

அவரிடம் பேசி முடிந்ததும் என்னுடைய நல்விரும்பிகளின் பட்டியலில் அவரும் சேர்வார் என்றும் இந்த ஓர் உற்சாகம் இதிலிருந்து இன்றொன்றை நோக்கிப் பயணிக்கும் என்றும் நான் இப்போதே அறிகிறேன்.


ஆனால் எனது பிரார்த்தனனகள் எல்லாம் இப்படி நல்லதொரு தருணங்கள் எனக்கும் எல்லோருக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதே! இவைகள் நம்மை வாழவைக்கட்டும்!

வாழ்க்கையின் பயணங்கள் அதுவாக தீரும் வரை தொடரட்டும்!

இறைவனின் படைப்பில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு கிடைத்த மிகச்சிறப்பான பரிசே!

பரிமாறிக்கொள்ள வேண்டிய மொழி - அன்பு


இதை வாசிக்கும் நீங்கள் எனக்கு இறைவன் தந்த பரிசு!

என் சுரேஷ் என்ற நான் உங்களுக்காக இறைவன் உங்களிடம் அளித்த பரிசு!

இந்த நாள் எல்லோருக்கும் ஓர் இனிய நாளக அமைய என் இனிய வாழ்த்துக்கள்!

அன்பு நன்றி வணக்கம்

என் சுரேஷ்

Thursday, September 9, 2010

சான்றிதழ்

தூங்காத கண்கள்...

ஆசை

Thursday, September 2, 2010

ELDER BROTHER...




Dear Friends,

In this Blog for the first time I am writing in English! Why? - The above note in English is from EB! You may ask Who is this EB? I affectionately and respectfully call him as EB. (EB - Elder Brother!)

There is a greatest pleasure in introducing a nice personality to everyone and for that, language should not be a problem, isn’t it?

His (EB’s) name is Mr. Ashuthosh Ojha, The Chief Executive – Domestic Formulations of a leading Pharmaceutical Company. He has worked hard and achieved high Qualifications in Pharmaceutical and Management Studies (BITS - Pilani) and gained very rich Experiences as he officiated in major Indian Pharmaceutical Companies but very humble in nature even to a common man like me, is every one's wonder!

I know him for the last many years but seen him only once!
We used to call over phone, one another and wish during our Birthdays!

He doesn't know Tamil at all.
My Poems are being published in Tamil but still he has read most of my poems and short stories with the help of those who know Tamil! Really Great! – We Tamilians have to appreciate him isn’t it?

He is a giver! He loves giving good presentations to his friends, relatives and colleagues to their exact likings!

The problem for him with me is (It is his correct presumption hence it is a clear factual), I will not accept any present as I used to say others that the monies someone plans to spend for me to purchase a present may please be diverted to an Orphanage / Old Age Home. He used to call this as “Suresh’s Philosophy” – with a smile!

During this year's vacation also he has gone to USA and many other countries in one month's time and the very second day of his return to Chennai he has sent me a beautiful pen (Very Costly)which was well packed with a beautiful note with his handwriting (You can read that above) which was highly unexpected but greatly appreciated!

He is interestingly a very different person! Suppose if he invites a person for a Lunch or Dinner then he has the great system of sending a simple questionnaire by email and that will make his House keeper easier to prepare all the items what the Guest loves to take! It is an excellent Questionnaire I never even heard about it!

I have seen my Mother or Wife either sharing the food with the Guest what they have already cooked or used to cook what is comfortable for them. I never seen my Wife or Mother even thinking of Guest’s likings while inviting for Lunch and Dinner. Kindly don’t ask anything about me on this as I am worst than my Mother and Wife!

Now a days, it is very difficult to get a frank answers from a person of this stature but he is different!

His life is an open Diary and he doesn't have any pains or even over excitement in sharing what and all he went through and his recent video recorded while his 50th Birthday function creatively informs who were all traveled with him in his life time! – This is in fact an Honour for those!

He has great respects for his Parents. His Father is a retired Teacher and like him he is also a voracious reader! If EB asks me “Suresh, you must right now tell me what you want” – Then I will humbly say, “Dear EB, after your life time, I need all your Books!” – but who knows God’s Calling time, is another question for which no one has any answer!

I heard that in Chennai Director K.Balachandar, Actor Kamala Hasan etc are having peak level knowledge about cinema but when I met EB for the first time and when I had heard his talks about cinema and while seeing his collections ( Both Books and DVD’s in thousands!) he made me to feel that experts in this cinema field at least in India are really missing him or unfortunately not known to him! His modesty may say that it is just his hobby but it is really great!

He knew that I am an addict to Gazals (Without Wine) and whenever he gets the opportunity he will send the best Gazal collections of my dear Gazal Singer Shri. Jagajit Singh!

If you ask me to say one word about him I can surely say that he is a "Perfectionist".

I cannot think about him without a feel of goodness, respects and great wishes for him!

Hope, I can personally introduce him to all of you soon!

May God bless him and all of you!

Affectionately yours
N Suresh

Sunday, August 29, 2010

வரப்போகும் தமிழகத் தேர்தல்..... இன்றைய பார்வையில்....!


ஒவ்வொரு கட்சியும் இப்போது கூட்டம் போட்டு ஓரு பேரலை வந்தது போல் மக்களுக்கு ஒரு தோற்றத்தைத் தறக்கூடும்!

ஆனால் அந்த பேரலை ஓட்டுகளாக மாறுமா என்ற சந்தேகம் கடலுகளக்கே தெரியாத ஒன்று!

திராவிட கட்சிகளோடு ஒன்று சேராமல் எந்த கட்சிக்கும் மாபெரும் வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்று கடந்த தேர்தல் நிரூபித்து விட்டது!

தற்போதைய அரசு, அடிப்படை ஏழை மக்களுக்கு இலவசங்களால் மனநிறைவு கொடுத்துள்ளது எல்லா விமர்சனங்களையும் தாண்டின ஓர் உண்மை!

ஏழை எளிய மக்கள் தான் அதிகமும் வெயிலில்/மழையில் வரிசைகளில் நின்று ஓட்டு போட முன் வருபவர்கள் என்பது நமக்கெல்லாம் நன்றாக தெரிந்த விஷயம்.

விமர்சன விரும்பிகளில் அதிகமும் NDTV 24 x7 - ஐ குளிர் அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்!

இலவசம் பெற்று மனநிறைவு பெற்றவர்களின் ஓட்டுகள் இந்த அரசிற்கு கிடைக்க வாய்புண்டு.

இந்த அரசு இந்த முறை சொன்னதை செய்தது! சொல்லாத பல புதிய திட்டங்களையும் செயல் படுத்தி உள்ளது!

நீண்ட பட்டியல்களை எல்லோரும் எங்கும் கேட்டிருக்ககூடும் என்பதால் நான் மீண்டு அதை இங்கே பதிவு செய்யவில்லை.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் என பல இலவசங்கள்... இதையெல்லாம் ஓட்டு வாங்க என்று சொன்னாலும் கலைஞர் காப்பீடு திட்டம் போன்றவைகள் மக்களிடம் பெருமளவு ஆதரவை தந்துள்ளது!

கலைஞர் ஐயாவின் வயது ஒரு மாற்றத்தை கொண்டு வர மக்கள் மனதில் எண்ணம் எழுந்தாலும் திரு ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் ஆதரவு சிறப்பாக உள்ளதாகத் தான் பொதுவாக சொல்லப்படுகிறது.

தனித்தனியாக கட்சிகள் களத்தில் இறங்கினால் ஓட்டுகள் சிதறி யாருக்கும் வெற்றியைத் தராது என்பதால் யார் யாரோடு இணைவார்கள் என்று தான் மக்களின் கவனம்.

மாற்றங்கள் மக்கள் விரும்பலாம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

ஓட்டு போட எல்லோரும் முன் வர வேண்டும்.

வெறும் 45 அல்லது 55 விழுக்காடு மட்டும் பதிவான ஓட்டுக்களை வைத்துக்கொண்டு வெற்றிகளை தீர்மானித்து ஒரு கட்சியிடம் அல்லது ஒரு கூட்டணியிடம் இதோ இந்த நாட்டை ஆண்டு கொள் என்று சொல்வது மிகவும் கவலைக்குறியது!

காங்கிரஸ் கட்சி, தமிழக ஆட்சியைப் பிடிக்க வரப்போகும் தேர்தலிலும் வாய்ப்பே இல்லை.

எந்த கட்சி/கூட்டணி தமிழகத்தை ஆண்டால் என்ன?

கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்கள் தந்த நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் காண என் போன்றோருக்கு ஆசை இல்லாமல் இல்லை!

எது நடக்க வேண்டுமோ
அது நன்றாகவே நடக்கட்டும்!

என் சுரேஷ்
யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்ற குழப்பத்தில் இருக்கும் உங்களில் ஒருவன்:-)

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments