Monday, April 28, 2008

இதில் உங்கள் கருத்தென்ன????????

தம்பியின் வீடு செல்ல காத்திருக்கும் ஏழை அக்கா!

மகளோடு சேர்ந்து மகனின் இல்லம் செல்ல காத்திருக்கும் வயதான ஏழைத்தாய்!

வருடத்தில் என்றாவது தம்பி வீடு சென்று எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டு வீடு திரும்ப ஆசைப்படும் மாமா மற்றும் கல்லூரியில் படிக்கும் இரண்டு மருமகள்கள்.

ஊரிலிருந்து தூரத்து உறவொன்று தம்பியின் வீட்டில் வந்திருக்கிறார்கள்.

இறந்து போன தந்தையின் உருவத்திலும் பாசத்திலும் அமைந்த அந்த பாச உறவை தங்கள் வீட்டில் சில நொடிகள் மட்டுமே பார்த்துப் பேசினது போதாது என்ற ஆசையில் தம்பியின் வீடு சென்று அவர்களையும் பார்த்து வர காத்திருக்கும் இந்த ஐந்து ஏழை மக்களின் நான்கு நாள் ஆசை, அடுத்த நாள் விடியலுக்கு காத்திருக்கும் நேரத்தில்....

தம்பியின் மனைவி, வீட்டிற்கு வந்திருக்கும் சொந்தங்களை காலையிலேயே கோவிலுக்கு அழைத்துச் செல்ல திடீரென்ற அடம் பிடித்தல்!

காலையில் வீடு வர காத்திருக்கும் ஏழைமக்களை மதியம் வந்தால் போதுமென்று சொல்லுங்கள் என்ற கட்டளை!

அந்த ஏழைகளின் வீட்டிற்கு சென்று பலவருடங்களாக அடிக்கடி சென்று உண்டு, தங்கி வந்ததை வசதியோடு தம்பியின் மனைவி மறந்து விட்ட கொடுமை!

உறவுகளுக்கு முன் ஏன் அழுக்கான சண்டைகள் என்ற அறிவின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வண்ணம் மன்னிப்பதில் சந்தோஷம் கண்டு மனைவியின் ஆசைப்படி வீடு வந்த உறவுகளள மனைவியோடு கோவிலுக்கு அனுப்புகிறான் தம்பி!

உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்துக்கொண்டு, தம்பி அந்த ஏழை சொந்தங்களிடம்
"வரவேண்டாம்" என்று சொல்லும் கொடுமையான நிர்பந்தத்தை கண்ணீரின்றி அழுது நிறைவேற்றினாலும், அந்த ஏழைகள் அவர்களுடைய கவலையின் மௌன உச்சத்தை கண்ணீரில் அல்லாமல் எப்படி தீர்த்துக்கொள்ள முடியும்?

இது தானா பக்தி என்று இறைவன் சிரிக்கலாம்!

இதை மாபெரும் முட்டாள்த்தனம் என்று நாத்திக சகோதரர்கள் சொல்லக்கூடும்!

என்ன செய்ய என்ற மனநிலையில் ஊரிலிருந்து வந்த சொந்தங்கள்!

சில கஷ்ட்டங்களை அனுபவத்துத் தான் ஆகவேண்டுமென்று அந்த தம்பி!

நான் சொல்வதும் எனது பக்தியும் தான் சரி என்கிறாள், தம்பியின் மனைவி!

இப்படியுமா ஒருவள் என்று அந்த ஏழைகளின் கண்ணீர்!

இதில் உங்கள் கருத்தென்ன????????

Wednesday, April 16, 2008

மின்னல்கள்

வானம் அழுதுகொண்டிருக்க
ஆறுதல் தரும் மேகக்கரங்களின்
வெள்ளி ரேகைகளைப் பார்த்து
வருங்கால அறுவடைப் பற்றின
ஜோதிடம் பார்க்கிறது
ஈரமான மண்வாசனையின்
உபதேசத்தை எதிர்த்து
ஆங்காங்கே காணும்
ஜோதிட நிலைய
பெயர்ப்பலகைகள்!

மெரிநா

இரண்டு தமிழ் முதலவர்களின்
ஞாபகத் தென்றல்

வருங்காலத்தைப் பற்றின
பதற்றத்தால்
ஓயாத மன அலைகளோடு அலையும்
தனிமனித ஊர்வலங்கள்

காதலர்களின் பொய்கள் பதிந்த
காதுகளோடு
சுண்டல் விற்கும்
ஏழைச் சிறுவர்கள்

கவலைகளறியா குழந்தைகளின்
திக்கு தெரியா ஓட்டம்
புன்னகையுடன்

பொம்மைகள் போல்
தூரத்தில் கப்பல்கள்

காரிலிருந்து அலைகளை ரசித்து
சுண்டல் விற்பவனன
கிண்டல் செய்யும்
ஒரு தாத்தா
அவரைச் சுற்றி
அவரின் பேரப்பிள்ளைகள்

கவலையை மறந்து விடு
கவலை ஒரு மேகத்தின் பயணம்
என்ற
செய்தியைச் சொல்லும்
கலங்கரை விளக்கம்!

சிறைவாசம்

தலைவர்களை
புத்தக
ஆசிரியர்களாக்கிறது

தோழர்களை
நோயாளியாக்கிறது

கோடீஸ்வரனுக்கு
ஓயவுகாலமாகிறது

நிரபராதிக்கு?

இருளும் ஒளியும்

இதற்குமேல்
தோற்க மனமில்லை

இருளை அகற்ற - இனி
முயற்சிக்க மாட்டேன்

வெற்றி பெற
ஒரே ஒரு வழியை
புரிந்து கொண்டேன்

இனி
வெளிச்சத்தை
வரவைத்து
வரவேற்பேன்!

இறுதி விருப்பம்

இறந்துபோன துணைவிக்கு
கடைசியாக முத்தமொன்றை கொடுக்க
கணவனின் இறுதி விருப்பத்தை
மதகுருக்கள் மறுத்திட
மதவெறி மாறி
பாசம் நிறைந்திட
வேண்டுமென்பதே
இறுதிப்பயணத்திலிருக்கும்
அவளின்ஆத்மாவின்
இறுதி விருப்பம்!

கண்ணீர்

உணர்ச்சிப்
பிழம்புகளின் ஊற்று

மனதின்
ரேகைகள்

மௌனத்தின் உச்சம்
பேசும் மொழி

ஆனந்தத்தில்
தித்திக்கும் தேனருவி

கண்களின் குளியல்
கன்னங்களில் மழை

கவலைகளுக்கு
ஆறுதல்

நல்லோர்களை
ஏமாற்ற
சில மனித முதலைகள்
சுரக்கும்
இரசாயனம்!

அந்தியின் சிவப்பு

வெயிலில் உருகின
வானத்தின் கண்கள்
சிவந்து விட்டன

வெளிச்சத்தின் உழைப்பை
இருள் அபகரிக்கும் முன்னமே
எச்சரிப்பு

செல்வச்செழிப்பு இல்லாதோர்
கனவு காண
வானம்
சிறிது நேரம்
அன்பளிப்பாய் தரும்
முகக்கண்ணாடி

சூரியனுக்கு வழியனுப்பி
சந்திரனுக்கு வரவேற்பு

சந்தியா வந்தனத்திற்கும்
ஜபத்திற்கும்
தொழுகைக்கும்
நேரமாகிறதே என
ஞாபகப்படுத்தும்
வானத்தின் மொழி

முரண்பாடுகள்

வறுமை ஒழிப்பு
அதிகாரிக்கு
கொழுப்பு குறைக்க
மாத்திரைகள்
உடனடி தேவை

நாடாளூம் தலைவரை
வீட்டிற்கனுப்ப
அஞ்ஞானிக்கு
திடீர் ஞானம்

வாங்க பழகலாம்
பிடிக்கலன்ன விலகலாம்
என
வசனம் பேசவைத்து
தமிழ்மரபை
சாணி பூசின
திரைப்படத்திற்கு
அமோக வசூல்

முரண்பாடுகள்
முரண்பாடுகளை உருவாக்குகிறது
அவைகளால் அவர்களின்
சுயநலம் மகிழ!

Tuesday, April 8, 2008

உண்மையாகவே இந்தியா ஒளிரும்

மதுவிலக்கு இலாததால் ஏற்படும் பண்பாட்டு சீரழிவு உடல்நலக்கேடு, வறுமை போன்றவற்றைக் கணக்கிட்டால், நமது நாடு முழுவதுமே உடனடி மதுவிலக்கு வந்து விடாதா என்ற ஏக்கம் மாறி, உடனடியாக முழு மதுவிலக்கைச் செயல்படுத்த வேண்டுமென்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் எழுச்சி அலையாய் வீசும்.

முழு மதுவிலக்கு கொண்டு வருவதில் ஏன் தாமதம்?

கள்ளச்சாராயச் சாவுகளும் மதுக் கடத்தலும் கொடிகட்டிப் பறக்குமோ என்ற சிந்தனையாலா?

மதுவிற்பனையால் இப்போது கிடைத்து வரும் வருமானம் போய் விடுமோ என்ற வினாவினாலா?

வணிகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நமது நாட்டில் வெளிநாட்டோர்கள் பலர் இங்கு வந்து போகும் நிலையில், முழு மதுவிலக்கைக் கொண்டுவந்தால் வணிகம் பாதிக்குமோ என்ற ஐயத்தாலா?

சிக்கலிருக்கும் இடத்தில் தீர்வு இல்லாமல் போகாது!

நமது நாட்டின் காவல் துறையினருக்குக் கள்ளச் சாராயத்தை வேரோடு அழித்துவிட்டு அதை அறவே வளராமல் கண்காணிப்பதற்கான திறமைகளுண்டு. மதுவிற்கு அடிமையானவர்களுக்குச் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் விடுதலை கொடுக்கலாம்

மதுவின் கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை நாடெங்கும் ஏற்படுத்தலாம்.

மதுவை விற்று கிடைக்கும் வருமானத்தில் தான் அரசை நடத்தமுடியும் என்ற நிலை இந்தியாவிற்கு இல்லை.

அன்றும் இன்றும் என்றும் முழு மதுவிலக்கு என்ற கொள்கையைக் கொண்ட சவுதி அரேபிய அரசின் கருத்துக்களை கேட்டு, இந்த நல்ல விலக்கால் வணிகம் பாதிக்காமல் காப்போம். சவுதி அரேபிய நாட்டிடம் கேட்க வேண்டாமென்றால், நமது நாட்டிலேயே உள்ள அறிஞர் பெருமக்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக அமைத்து அவர்களின் பரிந்துரைகளை ஏற்று முழு மதுவிலக்கை வெற்றி பெறச் செய்யலாம்.

மதுவால் போதை வெறி கொண்டிருந்தால், அது மக்களின் அறியாமையை பலமடங்கு பெருக்கி விடும்; சிந்திக்கும் திறன் தொலைந்து விடும்; முழு மதுவிலக்கைக் கொண்டு வரவில்லையென்றால் ஒவ்வொரு நாளும் பல உயிர்களை இழக்க நேரிடும்.

அடுத்த தேர்தல் வாக்குகளின் எண்ணிக்கையை மட்டும் மனதிற்கொண்டு தீர்மானங்களை எடுக்கும் ஓர் அரசால் எந்த நாட்டிற்கும் ஆபத்து தான் என்பதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.

மக்களுக்கு எதெல்லாம விருப்பமோ அவற்றையெல்லாம் கொடுக்காமல், மக்கள் எதை விரும்ப வேண்டுமோ அவற்றைக் கொடுப்பதே சிறப்பு என்ற கருத்திற்கிணங்க முழு மதுவிலக்கைச் செயல்படுத்த அரசு உடனடியாக ஆய்வு செய்யுமென்று நம்புவோம்

“கள்ளுண்ணாமை” யை வலியுறுத்தும் வள்ளுவரை மக்கள் மறந்து விடலாமா?

மகாத்மா காந்தி எதிர்த்த மதுவை அவரின் படம் போட்டு அச்சடிக்கப்பட்ட பணம் செலுத்தி மது வாங்கும்போது யாருக்கும் மனம் வலிக்கவில்லையா?

மது வேண்டாமென்று உபதேசம் செய்த தந்தை பெரியார், ஐயா காமராஜர், பேரறிஞர் அண்ணாதுரை ஐயா ஆகியோரை மறக்க முடியுமா?

1970க்கு முன்பாகத் தமிழகத்தில் முழு மதுவிலக்கு இருந்திருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்திலும் மகாத்மா காந்தி பிறந்த குஜராத்திலும் மட்டுமே மதுவிலக்கு அக்காலத்தில் இருந்திருக்கிறது.

மகாத்மா பிறந்த மண்ணில் இன்னமும் மதுவிலக்கு தொடர்கிறது.

“இந்தியா முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வந்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியமாகும்” என்று பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் கூறினார்.

இந்திய மக்கள் எல்லோரும் கட்சி பாகுபாடின்றி ஒன்று கூடி, வெற்றி பெரும் வரை போராடும் கொள்கையைக் கடைபிடித்துத் தீவிரமாய் உழைத்தால் உண்மையாகவே இந்தியா ஒளிரும்!

தோழமையுடன்
என் சுரேஷ்

Sunday, April 6, 2008

வாழ்த்துகள்!!!


அன்பு உள்ளங்களே

வணக்கம்!

தமிழ்மணத்தில் நட்சத்திரமாக கடந்த ஒரு வார காலம் என்னை அறிமுகப்படுத்தின தமிழ்மணத்தின் அன்புள்ளம் கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் பின்னூட்டங்களிட்டு வாழ்த்தின பதிவர்களின் பாசம் நிறைந்த உள்ளங்களுக்கும் மற்றும் வாசகர்கள் எல்லோருக்கும் எனது நன்றிகளை மிகவும் சந்தோஷத்தோடு சமர்ப்பிக்கிறேன்!

இந்த வலைப்பூவை கடந்த ஒருவார காலம் பாதுகாத்து உதவின என் அன்புத் தம்பிகள் பா. விஸ்வநாதன் & அந்தோணி மற்றும் என் அன்புத் தோழி திருமதி அருணா அவர்களுக்கும் எனது நன்றிகளை அன்போடு சமர்ப்பிக்கிறேன்!

எனது வாழ்வில் இந்த ஒரு வாரம் மிகவும் மகிழ்ச்சியான காலம்!

வாழ்க்கை என்பது மலரும் நினைவுகளை சேகரிப்பது என்று உணர்ந்திருந்தேன், ஆனால் ஒரே வாரத்தில் ஒரு யுகம் முழுக்க சேமிக்கக் கூடிய மகிழ்ச்சியின் நினைவுகள், இந்த நட்சத்திரப் பதிவு காலத்தில் கிடைத்திட, அதீத சந்தோஷத்தில் நான்!

தமிழ்மணத்தில் என்னை நட்சத்திரமாக்கி ஊக்கம் செய்தது, 2005 முதல் நான் எழுதி வந்ததற்கு இறைவன் தந்த அங்கீகாரமாக எனது உள்ளம் மகிழ்கிறது!

தொடர்ந்து எழுத இந்த ஊக்கம் நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்!

வாழ்த்தினவர்களின் அன்பு, என்னை தொலைபேசியிலும் தனிமடலிலும் தொடர்பு கொண்டு பாராட்டினவர்களின் மகிழ்ச்சி, கவிஞர் சக்தி சக்திதாசன் மற்றும் மாமனிதர் திரு வி.கே.டி. பாலன் போன்றோரைப் பற்றி எழுதக் கிடைத்த பாக்கியம், சமுதாயத்தைப் பற்றி இந்த சிறுவன் எனக்கு தோன்றின உண்மைகளைச் சொல்லக் கிடைத்த சுதந்திரம், ஏழை எளிய மக்கள், அனாதை இல்லத்து மழலைச் செல்வங்கள் இவர்களுக்காக எழுத முடிந்ததில் எனக்கு கிடைத்த அகமகிழ்ச்சி, பல புதிய நண்பர்கள் கிடைத்த சந்தோஷம் என எத்தனை உணர்வுகளால் நான் மகிழ்ந்தேன்!

இறைவனுக்கு கோடானு கோடி நன்றிகளை சந்தோஷத்துடன் சமர்ப்பிக்கிறேன்!

தமிழ்மணத்தின் சேவைகள் தொடர வாழ்த்துகிறேன்!

பதிவர்கள் எல்லோரும் தங்களுடைய எழுத்துக்களால் இந்த சமுதாயத்தை, அன்பும் அமைதியும் நிறைந்த ஒன்றாக மாற்ற என் இனிய வாழ்த்துகள்!

தோழமையுடன்
என் சுரேஷ்

Friday, April 4, 2008

கவிஞர் சக்தி சக்திதாசன்


இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்ற இவர் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். ஈழத்தில் பிறந்த இவர் இந்தியாவில், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் தனது வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டவர். இவர்களின் ஒரே மகன் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். தமிழில் வெளியாகும் பல இணைய இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் எதிர்கால சந்ததியினரிடம் தமிழார்வத்தை வளர்க்க இணையத்தின் பங்கு மிக முக்கியமாகி வருகிறது என்று கூறும் இவர் தன் கை விரல்களுக்கு வலுவிருக்கும் வரை இணைய தளங்களுக்குத் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருப்பேன் இதுதான் என் லட்சியம் என்கிறார்.

இதுவரை வெளிவந்த இவரது நூல்கள்:
தமிழ்ப்பூங்காவில் வண்ணமலர்கள் ( பல்சுவைத் தொகுப்பு),
உறவெனும் விலங்கு ( சிறுகதைத் தொகுப்பு ),
"தமிழே நதியாய் ! கவிதை வழியாய்!" (கவிதைத் தொகுப்பு )

விரைவில் ... கண்ணதாசன் ஒரு காவியம் ( அச்சிலுள்ளது )

பதிப்பாளர், திரு ரவி தமிழ்வாணன் அவர்கள் இவரைப் பற்றி இப்படி கூறுகிறார்.

"மிதமிஞ்சிய தமிழ்ப்பற்று; அனைவருடனும் அன்போடு பழகும் உயரிய குணம்; அடுத்தவர்களைப் பற்றி குறை சொல்லாத பண்பு; தன்னை வருத்திக்கொண்டு அடுத்தவர்களுக்கு உதவும் உள்ளம்; செல்வப் பின்னணி இருந்தும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத எளிமை; கணினியில் பேராற்றல்; அன்பான மனைவியுடனும், அருமையான மகன் டாக்டர் கார்த்திக்குடனும் எடுத்துக்காட்டான இனிய இல்லறம்; சொல்லுக்கும் செயலுக்கும் நேரிடியான தொடர்பு இருக்கும்படியான பாசாங்கு இல்லாத நேர்மை; பெரிய நட்பு வட்டம். இந்த அற்புதமான மனிதரைப் பற்றி என்னால் விரிவான கட்டுரையே எழுத முடியும்".

"தமிழே நதியாய்! கவிதை வழியாய்" என்ற, கவிஞர் சக்தி அவரகளின் கவிதைத் தொகுப்பை விமர்சனம் செய்யும் அளவிற்கு நான் வளரவில்லை என்ற அறிவு எனக்குத் தந்த இறைவனைப் போற்றுகிறேன்.

அதனால் இந்த கவிதைத் தொகுப்பை வாசிக்கும்போது நான் ரசித்த சில வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், நண்பர்களே!

இப்படி ஒரு நல்ல திறமையான கவிஞரை தமிழ்மணம் வழியாக பலருக்கு அறிமுகப்படுத்தும் பாக்கியத்தை எனக்கு கிடைத்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்.

இவர் கவிதை எழுத வேண்டுமென்று ஒரு பச்சை நிழலில், சௌகரியமாக எல்லா வசதிக்ளோடும் உட்கார்ந்து கொண்டு இந்த கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளை ஒன்று கூட எழுதவில்லை. இயந்திர வாழ்க்கையின் இடையே அவ்வப்போது கிடைக்கின்ற கொஞ்சம் நேரத்தில் தனது மனதிலுள்ள பல்வேறு விஷயங்களைப் பற்றின தனது சிந்தனைகளை பதிவு செய்துள்ளார்.

வாருங்கள், நாம் இந்த கவிதைச் சோலைக்குள் செல்வோம்!

கவிஞர் சக்தி சக்திதாசன் அவரகளின் “தமிழே நதியாய் கவிதை வழியாய்” என்ற இந்த கவிதைத்தொகுப்பை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள்.

என்னிதயத்தின் ஞான குருவாக வீற்றிருந்து
கவிதையெனும் விளக்கை அணையாமல் காத்திருக்கும்
அன்புக் கவியரசர் அமரர் கண்ணதாசன் அவர்களின்
பாதங்களின் இந்நூல் சமர்ப்பணம்..
என்று இவர் கவியரசரின் ஆத்மாவிற்கு அஞ்சலி செலுத்துகையில் என் முன்னே கவியரசரின் புன்னகை வந்து போனது!.

திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் இந்த கவிதைத் தொகுப்பிற்கு நல்லதொரு அணிந்துரை வழங்கி வாழ்த்தியுள்ளார்.

அன்பின் திருவருவே! அடைக்கலம் தந்தவனே
அவனியின் அடித்தளமே அண்ணாமலையானே
இன்று நாம் சமர்ப்பிக்கும் கவிதைத் தொகுப்பிது
இதயங்களைச் சென்றடைய இறைவன் நீயருள்வாயே!


என்ற முதல் கவிதையின் வரிகளை வாசிக்க, இறைவனின் அருள் இவருக்கு நிச்சயம் என்று உறுதிபடுத்துகிறது, அழகிய இவரது தமிழ்ச்சொற்கள்!

அடுத்து வரும் கவிதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு புதிய கருத்துக்களையும் அழகாக வாசகர்களுக்குத் தருகிறார்.

நட்பு பற்றி சொல்கையில்

எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி
எரியும் விளக்கில் எண்ணையாக
மெழுகுதிரியின் மெழுகாக
தன்னை உருக்கி தானே வளர்க்கும்
அன்புப் பூ
அது தானே நட்பு... என்கிறார்.


பாரதியிடம்

பாரதி, "மறக்கவில்லை மூத்த தமிழ் மைந்தனே.. "மறந்தால் தானே நினைப்பதற்கு" என்று சொல்லும் கவிதையின் முடிவில்..

பாரதி என்ற எங்கள் உயிர்மூச்சு
பார் அதிரப் பாடிய செந்தமிழ்ப்புலவன்
பாராண்ட தமிழன் மூத்த மைந்தன்
பணிந்தேன் உன்னை நினைவுநாளில் ..
என்று பாடி, அஞ்சலி செலுத்துகிறார்.


ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தை காட்டு
மந்தைக் கூட்டம் மனிதரில் சிலர்
மடைத்தனம் என்றே சிரிப்பர்
மாண்புமிகு வார்த்தைகளின்
மாபெரும் கருத்தறியாதொரு
மந்தை ஆடுகள் தாமிவரென்பேன்

அன்புக்கு வளைந்து கொடு
அருள்மிகு தேவமைந்தன்
ஆற்றிய அறிவுரைகள்
அனைத்தும் எமை உய்விக்கும்
அறிவோம் அவனை! அடைவோம் உயர்வே!

என்று “அன்பின் மறு உருவம் இயேசு நாதரை” போற்றுகிறார்.


தனது எண்ணத் தடாகத்தை இப்படி பார்க்கிறார், கவிஞர்

சிந்தனைப் பூக்களில் சிந்திய தேனதை
சிதறாமல் பருகிய சர்க்கரை வண்டு
நேரான கோடுகள் தானாக வளைந்ததால்
வாழ்க்கைத் தாளிலே வடிந்த ஓவியம்


தனது தந்தையின் எட்டாம் நினைவு நாளன்று


நெஞ்சில் உன் நினைவுகள்
உறவில் உன் உணர்வுகள்
உதிருமோ அவை உலகினில்!

எத்தனை எத்தனை கருத்துகள்
எப்படி எப்படி இயம்பினாய்
அப்போது புரியாத பெருமைகள்
இப்போது நினைத்தால் கனவுகள்!


என எழுதி வாசகர்களின் கண்களோரம் கண்ணீர் வரவைக்கிறார்.

கவிஞரின் மனைவி உறங்குவதைக் கண்டு “ கண்மூடி நீ தூங்க..” என்ற ஒரு கவிதை! அதில் மனைவி மீதுள்ள பாசத்தை, நன்றிகளோடு எப்படி வெளிப்படுத்துகிறார், பாருங்கள்!

வாழ்க்கை பாதையிலே குழிகளைக் கண்டும்
தாண்டுவேன் என
வீம்புடன் பாய்ந்து விழுந்த போதெல்லாம்
தாங்கிப் பிடித்த தாரிகை நீ
இன்று.. உன் நேரம் பெண்ணே
கொஞ்சம் ஓய்வாக கண்ணயர்ந்து கொள்
இதைக் கூடப் புரிந்து கொள்ளாதவன் எபப்டி?
நான்
உன் உயிர்த்தோழனாக, உள்ளக்காவலனாக...


என்றெழுதி அதன் கடைசி பத்தியில்

கண்மூடி நீ தூங்க
கண்ணயரா வேளையில்
கவிதையொன்று நான் புனைந்தேன்
கண்மணியே
கண்ணயர்வாய்..


என்று அந்த கவிதையை அவருடைய ஞான குருவான கவியரசர் கண்ணதாசனின் பாணியில் எழுதியுள்ளார்.

கவியரசர் கண்ணதாசனைப் பற்றி இவர் போல் வேறு யார் இவ்வளவு எழுதியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு கவிதையில்

நிரந்தரமானவன் அழிவதில்லை
நிச்சயமாய்ச் சொன்னவன் நீ
காலக்கவி நீ எனக் கடிந்துரைத்து சொன்னவன் நீ
வருடங்கள் பறக்கலாம்
மனிதர்கள் இறக்கலாம்
மகாகவிஞன் உனக்கு இறப்பில்லை
.. என்று பாராட்டி மகிழ்கிறார்.

தூங்காத மனதிற்கு கொஞ்சம் நிம்மதி தேவையென்று கவிஞருக்குத் தோன்றினதும்

அறியாத வயதினிலே அரைநிமிட நேரத்திலே
அணைத்துக் கொண்ட தூக்கமே
அந்தஸ்தின் முன்றலில் அவசரமாய் வாழும்போது
அருகினிலே கூட வர ஏன் தானோ
அஞ்சி நீயும் ஓடுகிறாய் ..


என்று தனது தூக்கத்திடம் துக்கத்தோடு இப்படி கேள்வி கேட்கிறார்.

வாழ்வெல்லாம் ஓடிப்பிடித்து
வசதியான வாழ்வென முடித்து
வேடிக்கை தெரியுமோ நண்பரே!
வாடிக்கையான வேதனைதான் மீண்டுமே


என்ற இவரது இந்த வரிகள், கவியரசர் கண்ணதாசனே இவருடைய கைபிடித்து எழுதியது போல் தோன்றின. வாழ்க்கையின் விலாசத்தை நான்கே வரிகளில் எவ்வளவு அழகாய் சொல்லியிருக்கிறார் இந்த சக்திக் கவிஞன்!

கிடைத்தவை எல்லாம் கேட்டா வந்தவை?
பிரிந்தவை எல்லாம் சொல்லியா சென்றவை?
இருப்பதை இழப்பதும் இழந்ததை பெறுவதும்
இயற்கையின் நியதி
மனமே நீ இன்று அமைதி கொள்வாய்


"மயக்கமா கலக்கமா.." என்ற பாடலும் "பாலும் பழமும் கைகளிலேந்தி..." என்ற பாடலும் சேர்ந்திட அதன் சாற்றைப் பிழிந்தது போல் தோன்றும் அழகிய கவிதை வரிகள்! கவியரசர் கண்ணதாசனின் தாசன் இவர் தானென்று கவிஞர் நிரூபிக்கிறார், தனது ஒவ்வொரு கவிதை வரிகளிலும்!

புதிய வருடம் வந்து கொண்டிருக்கிறது, அதைப் பார்த்து இப்படி பாடுகிறார்

நீயென்ன சொன்ன போதும்
நானென்ன செய்த போதும்
யாரென்ன முயற்சித்தாலும்
உலகம் உருள்வது உருள்வது தான்


நிஜத்திலே விளைந்த பொய்கள் - என்ற தலைப்பில் ஒரு கவிதை, அதில்:

கண்டதும் வதனத்தில் புன்னகை
சென்றதும் வாயாலே நிந்தனை
உள்ளத்திலே ஏனோ இத்தனை
கோலங்கள் இங்கே நர்த்தனம்

கணத்திலே ஓடும் இவ்வாழ்க்கை
கடந்தபின் வௌந்துவது மடமையே
நிஜத்திலே விளைந்த பொய்களை
நிறுத்திடும் தைரியம் உமக்குண்டோ?


என்ற கேள்வியோடு முடிக்கையில், வாசகர்களின் மனதில் ஆயிரம் பாடங்களை பதிவு செய்கிறார், கவிஞர்.

பொங்கல் நாளை கவிஞர் எப்படி வணங்குகிறார் என்று பாருங்கள்!

நாளெல்லாம் ஏரோட்டி
நலிந்து தன் வீட்டில் கண்ணீரூற்றி
நாட்டுக்கே உழைப்பால் சோறூட்டி
நலமில்லா வாழ்க்கையைத் தான் பெற்றிடும்
நல்லவன் உழவுத் தோழனுக்கு
நன்றி சொல்லி இந்நாளில்
நாம் வணங்குவோம்!


தாய் தந்தையரை நினைத்து இப்படி உருகுகிறார்

ஆயிரம் சொல்லவேண்டும்
அவரருமை பேசவேண்டும்
ஆனாலும் இன்றிங்கே
அன்னை தந்தை யாருமில்லை!


தாய் தந்தையரின் பாசம் பற்றி நினைத்தால் யாருக்கும் கண்ணீர் முந்தும் என்றால் கவிஞருக்கு எப்படியிருக்குமென்று இந்த அன்னை தந்தையரைப் பற்றின கவிதையில் காணலாம். அருமை!

கனவுதானா...? என்றொரு கவிதையில்

பசி..
என்றொரு சொல்லை
எங்கோ கேட்டதும்
அகராதியைப் புரட்டும்
அற்புதமான உலகம்


வேண்டுமென்று பாடுகிறார். "இறைவா இந்த கனவு நிஜமாக வேண்டும்" என்று உடனடி பிரார்த்தனை செய்தேன், நண்பர்களே!

இன்றெனக்கு ஓய்வு தேவை என்றொரு கவிதையில் ஒரு நிஜத்தை படம் பிடித்துக் காட்டுகிறார்.

நிழல்தேடி ஓடுகின்றான்
மரங்களில் இலைகளில்லை
தாகத்தில் தவிக்கின்றான்
கண்களில் கானல் நீர்

வாழ்வெல்லாம் ஓடி விட்டு
வந்ததையெல்லாம் தாங்கி விட்டு
எனக்கின்று ஓய்வு தேவை
எண்ணும் போது அவன்
ஏனோ தூங்குகிறான்
கல்லறையில்.


நான் கல்லறைக்குள் நித்திய உறக்கத்தில் இருக்குமென் அந்த நாள், என் மனதின் கண்களுக்கு முன்னே இதை வாசிக்கும்போதே வந்து சென்றது! ஆக! எப்படி இந்த கவிஞருக்கு இப்படியெல்லாம் எழுத முடிகிறது என்று வியந்து போகிறேன்!

பாடாத கவிதை என்ற தலைப்பில் மனதைத் தொடும் பல எழுதியுள்ளார், அதில்

வரதட்சனை எனும்
வறுகும் தட்சணையைப் பற்றி
அறியாப்பருவத்தில்
அடுத்தவீட்டுப் பெண்ணுடன்
மணல்வீடு கட்டி விளையாடும்
ஆசைத்தங்கை

மாலையில் அறும் செருப்பை
காலையில் திரும்பவும் தைத்துக்கொண்டு
மீண்டும் தெருவிலே ஓடும்
அப்ப்பாவுக்கு புதுச்செருப்பு
கிடைத்திருக்கும்


என்ற இந்த இரண்டு கவிதைகளும் வேலை தேடி ஓடும் இளைஞனின் மனதில் எழும் எண்ணங்களை உருக்கமாக பதிவு செய்கிறார்.

அப்பாவின் செருப்பைப் பற்றி இவர் எழுதியதை வாசிக்கையில், வறுமை கடந்து வந்தோர் யாவருக்கும், இன்றும் வறுமையில் தவிக்கும் எல்லோருக்கும், அது தரும் மனவலியை சில கண்ணீர்த்துளிகளின் வரவு ஆறுதல் படுத்தலாம்!

பூவினும் மென்மையான இந்த கவிஞரின் அன்பு உள்ளம், பூவிடம் பேசுகையில்

உன்னை என்
உள்ளத்தில் குடி கொண்ட
ஊர்வசிக்கு ஒப்பாக்கினேன்
உண்மை அதுவல்லவே!

அவளை அணைத்த போது
அவள் உன்னைப்போல்
கசங்கவில்லை!
மலர்ந்தாளே!..


என்று சொன்ன பிறகு

அதே பூவிடம் இப்படி கேட்கிறார் கவிஞர்.

ஏந்தானோ!
ஏழையெந்தன் வாழ்க்கையிலே
ஏக்கம் மட்டும்
உண்மையாச்சு?


பூக்களிடம் தனது வியப்பையும் கவ்லைகளையும் கவிஞர் அழகாக பகிர்ந்து கொள்கிறார். "ஏழைக்கு ஏக்கம் மட்டும் மிச்சம்" என்ற நிஜம் எப்படி தவிக்கிறது பாருங்கள்!

ஆண்டவன் அனுப்பிய கரமொன்று
ஆம்
ஏழ்மையிலும் காதல் கண்டு
எழுபிறப்பும் கூடவரும்
சொந்தம் கண்டு
என்னைக் காதலித்துக் கரம் பிடிக்க
கன்னியவள் வந்த பின் தான்
அழுகையின் மடியில்
ஆறுதல் கிடைத்தது...


என்று தனது மனைவியை மீண்டும் பாராட்டுகிறார்.

உணர்ச்சித் துடிப்பில் இப்படிக் கதறுகிறார், கவிஞர்

தோள்களில் கைகளும்
முதுகினில் கத்தியும்
கொண்டவர்கள்
நட்பெனும் புனிதத்தை
நாசப்படுத்தியதால்
பிறந்த இசையிது



இதுதான் உலகமென்றால்
இவர்தான் மனிதரென்றால்
இனியொரு பிறப்பு
இறைவா
அவசியந்தானா?


இறைவனிடமே கேள்வி கேட்க இந்த சக்திக் கவிஞருக்கு சக்தி இருக்கிறதே என்று அதிசயத்துப் போனேன்!!!

துனிசியா நாட்டிற்கு சென்ற பதிவின் முடிவில் இப்படி எழுதுகிறார்

இதயமெங்கும் இன்பமாய்
இன்று நான் எடுத்துப்போவது
பாலைவனத்தின்
பசுமையான நினைவுகளே!

நன்றி
ஓ துனிசியா!


வறுமையைப் பார்த்து கலங்கும் கவிஞர்

பெரியதாகியது
நடைபாதையோரங்கள்
அங்கே வாழும் மனிதர்கள்
அதிகமாகியதால்.


என்று கவிதை வடிக்கிறார். அதில் கோபமும் கவலையும்ம் ஒளிந்திருக்கிறது!

"அர்த்தமும் இல்லாமல் ஆசையுமில்லாமல்" என்ற தலைப்பிலெழுதிய ஒரு கவிதையின் முதல் பத்தியின் நான்கே வரிகளில் ஒரு வியப்பைப் படம் பிடித்து தருகிறார்.

ஆலையம் சென்றேன்
அடைத்து விட்டார்
என்னிடம்
கற்பூரமில்லை!


இந்த கவிதை வரிகளை வாசித்ததும், இதை, கவிஞர் அறிவுமதி அவர்களுக்கு அனுப்ப நான் நினைத்தேன். அண்ணன் திரு அறிவுமதி அவர்கள் நல்ல கவிஞர் என்பதை விட மிக நல்ல ரசிகர் என்பதால் எனக்கு அப்படித் தோன்றினது.

விளக்கேற்றும் கைகளைப் பார்த்து மென்மையாக கவிஞர் கேட்கிறார்

வெளிச்சமின்மையால்
முகங்கள் இருண்டனவா? அன்றி
இருண்ட முகங்களினால்
வெளிச்சம் அற்றுப்போயிற்றா?


இந்த நான்கே வரிகளை புரிந்துகொண்டால், நமது இயக்குனர்கள் எத்தனையோ நல்ல திரைப்படங்கள் எடுப்பார்களே என்று சந்தோஷப்பட்டேன்!

இலங்கையைப் பற்றி எழுதும்போதெல்லாம் அவர்களின் கண்ணிர் அளவின்று கொட்டுகிறது...
வெள்ளையர்களிடமிருந்து இலங்கை சுதந்திரமானால் போதுமா என்ற கேள்வியை மனதில் வைத்துக் கொண்டு இப்படி எழுதுகிறார் கவிஞர்

என் தாய் மண்ணே
என் நினைவுகள்
சுதந்திரமடைந்து
நான் சுவாசிக்கும் காற்று
சுதந்திரமாகும் போது தான்
உனக்கு உண்மையான
சுதந்திரம் என்பேன்


நியாயமான கோபமும், வீரமும் கவலையும் நிறைந்த அவரின் மனதின் விலாசத்தை இங்கே காணலாம்

பெண்ணைப் பெற்றவர் என்றொரு தனிவர்க்கம்
தமக்கெனப் பணத்தை விளைச்சல் செய்தே
வைத்திருப்பார் என எண்ணும்
முட்டாள் மூளைகளின் பெயர்
மாப்பிள்ளையாம்


இங்கே சமுதாயத்தின் அவல நிலைகளில் முக்கியமான ஒன்றை சாடுகிறார்.

தோழனே தேடல்களை மூடி விடு
உன் இதயத்தை திறந்து வை
இருட்டில் இருந்து கொண்டே
விளக்கை அணைக்காதே
உண்மையை உன்னில் கண்டு கொள்
விடியல் தானாகவே உன்
வானத்தைத் தேடி வரும்


என்ற ஆழமான ஒரு கருத்தைச் சொல்லி இந்த கவிதைத் தொகுப்பு இங்கே நிறைவாகிறது.

56 கவிதைப் பூக்களால் அலங்கரித்த கவிதை மாலையிது என்றும் வாடாது என்பது நிச்சயம்! எனது பார்வையில் பட்ட சில பூக்களின் சில இதழ்களின் மென்மையை மட்டும், தூரத்திலிருந்து கடலைப் பார்த்து வியந்து போன ஒரு சிறுவனைப் போல், இங்கே பணிவோடு பதிவு செய்துள்ளேன், அவ்வளவு தான்!

அன்பர்களே! உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த புத்தகத்தை மணிமேகலை பிரசுரத்தின் வழியோ அல்லது மற்ற தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் கடைகள் மூலமாகவோ வாங்கி வாசிக்க அன்போடு பரிந்துரை செய்கிறேன். மணிமேகலை பிரசுரத்தின் விலாசம்:

மணிமேகலை பிரசுரம்
7 தணிகாச்சலம் சாலை
தியாகராய நகர், சென்னை 17

இந்த அழகிய புத்தகத்தின் விலை வெறும் 50 ரூபாய்! - என்று பார்க்கையில், இவ்வளவு சிந்தனைகளின் விலைமதிப்பு, வெறும் 50 ரூபாய்க்குள் அடங்கி விடுகிறதே என்று தோன்றினாலும் இந்த கவிதைத் தொகுப்பு எல்லோரிடமும் சென்றடைய இதன் குறைந்த விலை உதவட்டுமே என்ற சிந்தனை என்னைத் தேற்றியது.

இந்த திறமையான கவிஞரை வாழ்த்துவோம்!

இவரை பாராட்ட, தொடர்பு கொள்ள: sakthisakthithasan@googlemail.com

இந்த மாபெரும் கவிஞரின் சில புதிய கவிதைகள் மற்றும் படைப்புகளை அவரின் வலைப்பூவில் வாசிக்க: http://www.thamilpoonga.com/

கவிஞர் சக்தி சக்தி தாசன் அவர்களின் கவிதையொன்று அவரின் வலைப்பூவில் நம்மை வரவேற்கிறது.

அந்தக் கவிதை:

ஆதவனாகிய நான் ….

யுகம் யுகமாய் ……
எரிந்து கொண்டேயிருக்கின்றேன்

வெளிச்சத்தின் இருட்டில்
வேஷம் போடுமிந்த மானிடர் மந்தை
கண்கேட்டுப் போயினும் ஏனிந்த …..
சூரியநமஸ்காரம் எனக்கு

மேகத்தைக் கலைத்துக் கலைத்து
களைத்துப் போயே, மனிதன் மீது வெறுப்புக் கொண்டே
அந்தியில் நானும் அசந்து போய்
ஆழியில் விழுவேன்……

ஆயினும் ஏனோ
மலர்களின் ஏக்கம், இயற்கையின் வாட்டம்
என்னையும் மாற்றும், உள்ளம் உருகி மீண்டும்
கிழக்கிலிருந்து புதிதாய் முளைப்பேன்….

விழுவதும் எழுவதும் ஆதவன் எனக்கு
வாழ்க்கையின் கணக்கு
இடையினில் நடக்கும் நாடகம் அனைத்தும்
இதயத்தில் பதிக்கும் தடங்கள் வலிக்கும்

இருட்டினைத் துரத்தி உலகிற்கு
வெளிச்சத்தைக் கொடுப்பேன் …..
ஆனால் மனிதன் மட்டும் ….
இதயத்தில் உறைந்த இருளில்
இறுதிவரை அமிழ்ந்தே சாகிறான் …..

கிடைப்பதைச் சுருட்டி வறுமையைப் பெருக்கி
தன்னலச் சேற்றினுள் தானும் புதைந்து
தன்கையைக் கொண்டு தன் கண்ணைக் குத்தி
காட்சி தெரியவில்லையென்று ஏன் தான்
வீண் கோஷமிடுகின்றான்

யுகம் … யுகமாய் …. நானும்
எரிந்து கொண்டேயிருக்கின்றேன்
ஓருண்மை உனக்கு எடுத்துச் சொல்வேன்
உலகத்தின் இருப்பை உனதாய் எடுத்து
இயற்கையைக் கற்பழித்து நீ மட்டும் வாழ்ந்தால் ….

அதோ என்மீது காதல் கொண்டு
தன்னைக் குடித்துவிடக் கேட்கும் அந்தப்பனித்துளி …..
அதைக் கொண்டே ………………….
என்னை அணைத்துக் கொள்ளச் சொல்வேன்…

அப்போது ………………………

உலகம் இருண்டு விடும்
உனக்கு விளங்கிவிடும்….. ஆம் மனிதா
இந்த உலகம் உனக்கு மட்டும்
சொந்தமானதல்ல …..
ஆதவனாகிய நானும் எப்போதும்
அழியாமல் இருக்க மாட்டேன்….

ஏனென்றால் ….. நான்
யுகம் யுகமாய் எரிந்து கொண்டே …………….



"கவிஞர் சக்தி தாசன் அவர்களின் படைப்புகள் பல தொடர்ந்து தமிழ்மக்களைத் தேடி வெளிவர வேண்டும். இந்த கவிஞர் வாழும் காலத்திலேயே அவர் உன்னதமாய் போற்றப்பட வேண்டும்" என்று இறைவனிடம் அன்போடு பிரார்த்திக்கிறேன்.

நண்பர்களே, உங்கள் வாழ்த்துகள் இந்த சிறந்த கவிஞரை நிச்சயமாக ஊக்கப்படுத்தும் என்ற நம்பிக்கையில்...

தோழமையுடன்
என் சுரேஷ்

பெண்களே!

1989-90-இல் தமிழ்நாடு சட்டப்பேரவை, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை பெறும் சட்டத்தை நிறைவேற்றி வெற்றி கண்டது.

சொத்தில் சம உரிமையான ஐம்பது விழுக்காடு, சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் என்று வரும்போது ஏன் முப்பத்தி மூன்று விழுக்காடாகக் குறைந்து போகிறது? முப்பத்து மூன்றிர்கே வழியில்லை; இனியெங்கே ஐம்பதைக் கேட்க - என்பதா பொறுப்பில் உள்ளோர்களின் விடை?

சொத்தில் சம உரிமைச் சட்டம் தமிழ்நாட்டில் பெரிய வெற்றியைத் தந்துள்ளது. ஆனால்
சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றதிலும் இந்த இட ஒதுக்கீடு பெண்களில் பலரை வெறும் பொம்மைகளாக்கி அவர்களின் கணவர்களோ, சகோதரர்களோ அதிகாரத்தைத் தவறாகச் செய்து விடுவார்களோ என்று சாதாரண மக்கள் குழப்பமடைவது மட்டுமின்றிப் பயப்படவும் செய்கிறார்கள்.

பெண் உறுப்பினர்கள் சிலரின் கணவர்கள் மற்றும் சகோதரர்கள் அந்த பதவியின் அதிகாரத்தை அனுபவித்து வெறும் பொம்மைகளாகப் பெண் உறுப்பினர்களை உபயோகப்படுத்துகின்ற நிலை அறவேயில்லை என்றோ இனி வரவே வராது என்றோ சொல்ல முடியுமா?

வங்கியொன்றில் கணவரும், மனைவியும் சேர்ந்து தொடங்கும் சேமிப்புக் கணக்கில் காசோலை புத்தகம் கிடைத்ததும், அதன் நிறைவு செய்யாத எல்லா பக்கத்திலும் மனைவியிடம் கையெழுத்தை முன்னதாகவே வாங்கி வைத்துவிடும் கணவர்கள் பலர் இருக்கும் நம் நாட்டில், பெண்களை அரசியலில் வெறும் பொம்மை வேடமிடவிட்டு, அதிகாரத்தைத் தவறாக, அவர்களின் கணவர்களோ அல்லது சகோதரர்களோ செய்து விடுவார்களோ என்ற பயம் பொதுவாக வாக்காளர்களில் பலரிடமும் உள்ளது.

ஆக இந்தச் சிக்கல் ஒரு கட்சியின் தனிப்பட்ட சிக்கலல்ல; சமூகத்தின் பொதுச் சிக்கல்!

சரி, இந்தச் சிக்கல் சரி செய்ய வழியென்ன? ஐக்கிய முன்னணிக் கூட்டணியின் இந்த ஆட்சி, கண்டிப்பாகப் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வாங்கித் தரும் என்பதில் பெரிய அளவிற்கு ஐயமில்லை என்று தான் தெரிகிறது.

ஆனால் இந்த வெற்றி கிடைத்ததும் பெண்களுக்காக வெளியிடும் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் தீர்க்கமான ஆய்வுகள் நடத்திய பின்னரே வெளியிட வேண்டும். பல ஆண்டுகளாகக் கட்சியில் தொண்டாற்றியவரின் மனைவி அல்லது மகள் என்ற ஒரே ஒரு தகுதி மட்டும் போதாது. தேவைக்கேற்ப படிப்பு, கட்சியில் ஈடுபாடு, தன்னலமற்ற சேவை மனப்பான்மை, நாட்டுப்பற்று, நாட்டின் நலன் கருதி தானாகத் தீர்மானம் எடுக்கும் அறிவாற்றல் போன்ற எல்லாத் தகுதிகளையும் கொண்ட பெண்களையே ஒவ்வொரு கட்சியும் தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கட்சியும் சாதி, மதம், இவை மறந்து தமிழ்நாட்டு மக்கள் எல்லோரையும் சமமாகப் பாவித்துச் செயல்படத் தொடங்கினால் நல்ல கொள்கைகள் கொண்ட கட்சிகளுக்கு இருக்கும் சாதிக் கட்சியென்ற அவதூறு கண்டிப்பாக மறைந்து போகும்.

பெண்களுக்கான முப்பத்து மூன்று அல்லது ஐம்பது விழுக்காடு என்ற கணக்கை நிரப்பி விட்டால் போதுமென்ற எண்ணமில்லாமல் - கட்சிக்காக, நாட்டிற்காக, நல்ல கொள்கைகளுக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்ய முன்வரும் பெண்களைத் தேர்வு செய்தால் பெண்கள் இட-ஒதுக்கீடு கோரிப் போராடிக் கிடைத்த வெற்றி, உண்மை வெற்றியாக மலர்ந்து மகிழும்.

தோழமையுடன்
என் சுரேஷ்

Thursday, April 3, 2008

உணர்வுகள் தொடரும்...

ஓவ்வொரு நாளும் எத்தனையோ உறவுகள் ஒரு கடைசி கையெழுத்திட்டதும் முடிவிற்கு வந்து விடுகிறது. இதில் முக்கியமானதொன்று மணமுறிவு (விவாகரத்து).

தங்களின் அப்பாவும் அம்மாவும் இனி மேலும் கணவன் - மனைவி அல்ல என்று அறிந்ததும் வியந்துபோய் நிற்கும் குழந்தைகளின் கண்களை கூர்ந்து கவனித்தால் அவை பல உண்மைகளை நமக்குச் சொல்லும். யார் மனமும் உருகும்!

நமது சட்டம் அவ்வளவு எளிதில் யாருக்கும் மணமுறிவு கொடுப்பதில்லை. கடைசிவரை மனுதாரர்களை சேர்த்து வைக்கத்தான் நீதியரசர்கள் முயல்கிறார்கள். ஆனால் மணமுறிவு கோரும் கணவன் - மனைவி இருவரின் மனங்களும் மன்னிக்கும் நற்குணத்தை முழுவதுமாய் மறந்து, பகையில் நிலைத்து, பிரிந்தாக வேண்டுமென்ற பிடிவாதத்தில் வேரூன்றி நிற்கும்போது தான் வேறெந்த வழியுமின்றி மணமுறிவை நமது நீதியரசர்கள் கவலையோடு வழங்குகிறார்கள்.

கார்டியன் & வார்டு சட்டம் 1890இன் படி சில கலந்தாய்வுகள் செய்த பின்னர்க் குழந்தைகளை யாரிடம் ஒப்படைப்பதென்றும், தாயோ, தந்தையோ எப்போதெல்லாம் குழந்தைகளைச் சந்தித்து கொள்ளலாமென்றும், வாழ்நாள் (ஜீவனாம்சத்) தொகை எவ்வளவு கொடுக்க வேண்டுமென்றெல்லாம் நீதியரசர்கள் உபதேசிக்க அதன்படி நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் கண்டு வேதனைப்பட்டுக் குழந்தைகளின் நிலை மிகவும் கவலைக்குள்ளாகிறது.

சாவதை விட வாழ்வதே மேல்! புழுங்கிக் கசங்கி வாழ முடியாமல் ஒவ்வொரு நொடியும் கொடுமையில் வாழ்வதை விட மனைவியோ, கணவனோ மணமுறிவுகோரி விண்ணப்பிப்பதில் தவறேயில்லை. ஆனால் திருமணத்திற்கு முன்னமே ஒருவருக்கொருவர் தங்களின் பொய் முகத்திரையைக் கிழித்து இது தான் நானென்ற உண்மையைச் சொல்லியும், இது தான் நீயென்ற புரிதலோடும் திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடங்கினால் மணமுறிவை ஓரளவிற்குத் தவிற்க்க முடியும். சின்னச் சின்ன விஷயங்களுக்காக பொய்யான குற்றச்சாற்றுகளைக் கோர்த்து
மணமுறிவை கோரி வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.

சில காலங்களுக்கு முன் மணமுறிவு வழக்குகள் நமது நாட்டில் மிகக் குறைவாக இருந்தன. ஆனால் இன்று மணமுறிவு வழக்குகள் அதிகமாக காணப்படுவதால் இந்தியாவில் கணவன், மனைவி சண்டைகள் அதிகரித்தது என்று ஒருபோதும் அர்த்தமாகாது. கல்வி அறிவால் தங்களின் உரிமைகளை மக்கள் எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
இது ஒரு நல்ல விஷயமென்றாலும் மணமுறிவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலை மிகவும் கவலைக்குள்ளாகிறது.

மணமுறிவினாலும், தற்கொலைகளாலும் தாய் - தந்தையரைப் பிரிந்து வாழும் பிள்ளைகளின் நிலை மிகவும் கடினம். கல்விக்கூடங்கள் மற்றும் நண்பர்களின் இல்லங்களில், இந்தக் குழந்தைகளிடம் அவர்களின் தாயைப் பற்றியோ, தந்தையைப் பற்றியோ யாராவது கேட்க, தங்களின் பாதிப்பை வெளியே சொல்ல முடியாமலும் மனதில் எழும் கவலைத் தீயின் வேதனையைத் தாங்க முடியாமலும் திடீரென்று அழத்தொடங்கும் இந்தப் பிஞ்சு மனங்களை யார் தேற்ற முடியும்!

இதுபோன்ற பாதிப்பிற்குள்ளாகும் குழந்தைகளுக்குப் புதிய மாற்றங்களைப் பற்றின ஒரு பயம் வந்துவிடுகிறது. தாங்கள் கைவிடப் பட்டோமே என்ற கவலை மனதிலெங்கும் நிறைகிறது. எதிலும் ஒரு ஈடுபாடின்றித் தவிக்கத் தொடங்குகிறார்கள். அப்பாவை இழந்தவர்கள் அம்மாவின் கோபத்தையும், மற்றவர்கள் அப்பாவின் கோபத்தையும் தொடக்க காலங்களில் சகிக்க முடியாமல் கதறுகிறார்கள்.

இந்த நிலையிலிருக்கும் குழந்தைகளுக்குத் தேர்ச்சி பெற்ற மனநல மருத்துவர்களின் உபதேசங்களும், வழிநடத்துதலும் கண்டிப்பாக தேவை.

கணவனும் மனைவியும் மணமுறிவால் பிரிந்தாலும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்கும் நாகரீகம் வழக்கத்தில் இருந்தால் தான், இந்த பிள்ளைகளின் மனதில் எந்த விதமான பகையோ, வெறுப்புணர்ச்சியோ இல்லாமல் வளர்ந்து முன்னேறுவார்கள்.

இதுபோல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளைப் பெரிய அளவிற்குப் பாசம் காட்ட இந்தச் சமூகம் முன்வரவில்லை என்றாலும் பரவாயில்லை. இவர்களின் மனதைக் காயப்படுத்தும் விதமான வினாக்களை மட்டும் கேட்காமலிருந்தாலே போதுமானது.

இன்று, புகழ்பெற்றவர்களின் பிள்ளைகள் மட்டுமின்றி சாதாரணமானவர்களின் பிள்ளைகளும் இதுபோன்ற பிரிவின் கொடுமையால் வாடுகிறார்கள். என்றாவது தங்களின் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து வாழமாட்டார்களா என்ற ஏக்கத்தோடு இவர்களின் பிரார்த்தனைகள் தொடர்கிறது. மணமுறிவு வாங்கின பலர், சில காலங்களுக்குப் பிறகு தங்களின் தவறான தீர்மானங்களை நினைத்து குற்ற உணர்ச்சிகளால் இரகசியமாய் தங்களுக்குள்ளேயே குமுறுகிறார்கள் என்பது யாரிடமும் சொல்ல முடியாத ஓர் உண்மை!

தோழமையுடன்
என் சுரேஷ்

Wednesday, April 2, 2008

அன்பென்ற மழையிலே...



அன்பென்ற மழையிலே...

புத்தகத் தலைப்பே இதமாய் வருடிகிறது. வறண்டு போன நிலத்திலிருந்து புறப்படும் வெள்ளி நீரூற்றுபோல் வருகிறது கவிதை. கற்பனை, மொழிபலம் ஆகிய தளங்களில் நின்று கவிதைக் கோபுரம் கட்ட எத்தனிக்காமல் தன் ஆழமான ஆத்ம தரிசனங்களையும் அத்தரிசனங்களின் விகசிப்புகளையும் கவிதையாக்கியுள்ளார் என்பதே என்.சுரேஷ் அவர்களது இப்படைப்பின் தனிச்சிறப்பாகக் காண்கிறேன்.

காதலும் வாழ்வின் ஏமாற்றங்களுமே கவிதையின் ஒட்டுமொத்த பாடுபொருட்களாய் நிற்கும் இக்காலத்தில், காலத்தை வென்ற இறைமகன் இயேசுவை கவிதையின் தலைவனாக்கியுள்ளார் என். சுரேஷ்.

மீட்பின் கவிதையாய் மனுவுருவெடுத்த அவரை தன் ஆத்ம வீணையால் மீட்டியுள்ளார். அந்த மீட்டல்களில் தன்னுள் சுருங்கிப் போகும் ஆன்மீகம் இல்லாமல் தன்னைச் சுற்றின சமூகம் - மக்கள்
மீதான அக்கறையும் அன்பும் வெளிப்படுகின்றதென்பது சிறப்பு.

"நான் இந்த பூமியில் வாழும் காலம்
உப்பாகவும்
வெளிச்சமாகவும் இருக்க
உமது கிருபை தாரும்"

என்ற வேண்டுதலில் அந்த அக்கரையின் நேர்மை தெரிகிறது.

இறைநம்பிக்கையாளர் எதிர்கொள்ளும் இயல்பான முரண்பாடுகளையும் அக உளைச்சலால் தரும் கேள்விகளையும் தத்துவத் தெறிப்போடும் நெகிழ்வோடும் கையாளுகிறார் சுரேஷ்.

சூரிய வெளிச்சமும்
நிலாக்குளிரும்
எல்லோருக்கும் இருக்கையில்
உமது அன்பு மட்டும்
ஒரு கூட்டத்தினருக்கே
ஒருபோதும்
ஒதுக்கப்படுவதில்லையே"

என்பதில் கேள்வியை விட ஆழமான ஒரு பதிலையே பார்க்கிறேன்.

இறைவன் தன்னை நேசிப்பதை நெஞ்சார உணர்ந்த நாளை, தன் வாழ்வின் அழகிய நாளாய் அறிவிக்கிறார் கவிஞர். பழைய ஏற்பாட்டு சங்கீதக்காரனின் உணர்வு நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிற சுரேஷ் இன்னும் நிறைய எழுதவேண்டும் - இறை அன்பை இன்தமிழில்
பலருக்கும் அறிவிக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்

Rev.Fr.ஜெகத் கஸ்பர் ராஜ்

காதலாகவே காதல்!



நம் கவிஞர் என் சுரேஷ் அவர்கள் அவரது புகழுக்கு அணிசேர்க்கும் வகையில் பல நூல்களுக்கு தாயானவர். அவரது முந்தைய நூல்களிலெல்லாம் தனிமனித பார்வையில் அன்பு, பாசம், கருணை, பரிவு, இறக்கம் போன்ற குணங்களைப் பற்றியும், சமூக பார்வையில் நியாயம், தர்மம், வறுமை, அமைதி, மானுடம், அகிம்சை, வன்செயல் போன்றவைகள் பற்றியே அதிகமாக எழுதியிருந்தாலும், தற்போது புதுமுயற்சியாக காதலைப் பற்றியும் எழுதியுள்ளார்.

காதலைப் பாடாத கவிஞனே இல்லை. காதலில்லாத உலகுமில்லை; உயிருமில்லை. காதல் வேண்டாத பொருளென்பதுமில்லை. நாமும் பாடிப்பார்த்து விடுவோமென்று துணிந்து விட்ட கவிஞர் என். சுரேஷ், காதலுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், சிற்றின்ப இச்சை கலவாமல் கொச்சையாகவே காதல் என்பதை திருத்தி " காதலாகவே காதல்..." எனும் இந்நூலை வடித்துள்ளார்.

ஓர் ஆண்மகனுக்கு காதல் எவ்வாறு ஊக்கமளித்து, உற்சாகப்படுத்தி, உறுதுணையாக இருக்கிறதென்பதையும், பிறருக்காய் தம்மை அற்பணித்துக் கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சியையும் பரிபூரண காதலால் ஏற்படும் மன அமைதியையும் - அதன் இனிமையையும் தானே உணர்ந்தவாறு எழுதியுள்ளார் கவிஞர் என்.சுரேஷ்.

வாலிபர்களும், வாலிபத்தைத் தாண்டி குதித்தவர்களும் மட்டுமே படிக்க வேண்டிய நூல் என்று இல்லாமல், அன்பின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் கண்ணுற வேண்டிய நூல் இது.

கவிஞர் என்.சுரேஷ் தனது முயற்சியில் சிறப்படையவும் அவரது பேனாநுனி சுடர் விடவும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

கே. இராஜேந்திரன்
சென்னை

ஓவியம் வரைந்த கவிதைகள்!




என் சுரேஷ்

இனியவர்
இதயம் முழுவதும்
அறமே நிறைந்தவர்

ஈரத்தாலயே உருவான இதயம்
அதில் சொட்டுவதெல்லாம்
மனிதம் வாழ வாழ்த்தும் துளிகள்

சொல்லழகு இரண்டாம் பட்சம்
கருத்தழகே கவிதையென்று
கவிதை உணர்வுகளை
கதையாய் சொல்லிப் போகும்
எளிய நடையை
எளிதாய் பெற்றவர்

இதயம் முழுவதும் கவிதையா
கவிதை முழுவதும் இதயமா
என்று இவரின் அறிமுகத்தில்
ஐயம் வரும்

உணர்வுகளின் கம்பத்தில்
எப்போதும் இவர் உயிர்
துடித்துப் பறந்துகொண்டே இருப்பதைக்
காணும் கண்களுக்குள்
நெகிழ்ச்சி நிகழ்வது நிச்சயம்

அன்புடன்
கவிஞர் புகாரி
கனடா

என் இனிய கவிதைகளே...


விமர்சனம்

என் இனிய கவிதைகளே" என்று தலைப்பை தேடி அலுத்துப் போகாமல் கவிதையையே தலைப்பாக வைத்திருக்கின்றார் கவிஞர் சுரேஷ்.

கவிதைப் புத்தகத்தை சமர்ப்பிக்கின்றோம் என்று பெற்றோர்கள் பெயரையோ அல்லது தமிழ் ஆசிரியர்கள் பெயரையோ அல்லது தனக்கு உதவி செய்தோர்கள் பெயரையோ அல்லது இறைவனின் பெயரையோ குறிப்பிடுவார்கள்.

பாசமுள்ள எனது தாய்மாமன் திரு பாலகிருஷ்ணன் அவர்களே
தாயின் வயிற்றில் நான் ஆறு மாதம்
அப்பொழுது உன் மரணம்

ஆனால் இவரோ சமர்பணத்தில் தான் தாயின் வயிற்றில் இருக்கும்பொழுதே மறைந்து போன தனது மாமா திரு. பாலகிருஷ்ணனை குறிப்பிட்டிருப்பது வித்தியாசமாகவும் இவர் தனது மாமாவின் மீது வைத்த அளவுக்கதிகமான பாசத்தையும் காட்டுகின்றது.

தாயையே மதிக்காத இந்தக் காலத்தில் தாய்மாமாவை மதிக்கின்ற சுரேஷ் எனக்கு வித்தியாசமாய் தோன்றுகின்றார். இவர் தாய்மாமாவின் மீது வைத்த பற்றில் அவர் தாயின் மதிப்பு உயர்ந்தே நிற்கின்றது.

இலக்கண விதிமுறைகள் கடைப்பிடிக்காத தற்போதைய பெருன்பான்மையான கவிஞர்களைப் போலவே தானும் இலக்கணக்கட்டுப்பாடு என்னும் கடிவாளத்தை என்னாலும் பயன்படுத்தமுடியவில்லை எனவும் தமிழ் வாசிக்கத் தெரிந்த எவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக இருக்கும் எனவும் அவரே கூறிவிடுவதால் கவிதைகளில் இலக்கணத்தை ஆராயத் தேவையில்லை. சாதாரண நடையில் யாவரும் வாசிக்கும்படி இருக்கின்றது.

ஆரம்பக்கவிதையே தமிழ்ப்பற்றில்தான் ஆரம்பிக்கின்றது. "அதிசயம் ஆனால் உண்மை" என்ற கவிதையில் ஓர் தமிழ்க்கவிஞனுக்கு சுதந்திரம் கொடுத்துப் பார்த்தால்

எல்லாப் போர்களும் நின்றுவிட
ஆயதங்களோ கண்காட்சி மாளிகைகளில்

சிறைச்சாலைகளெல்லாம்
மனநல மருத்துவமனைகளாய் பரிணாமங்கள்

கவிதைக்கு ஓர் பல்கலைக்கழகம்

அட ஒரு தமிழ்க்கவிஞனுக்கு சுதந்திரம் கொடுத்தால் கூட உலகச்சமாதானம் கொண்டு வந்துவிடுவானோ? இது அதிகப்படியான சிந்தனையே என்றாலும் இதில் அவருடைய அதீத தமிழ்ப்பற்று தெரிகின்றது.

தனது தமிழ்ப்பற்றிற்கான சான்றுகளை வெவ்வேறு கவிதைகளில் விவரிக்கின்றார் "ஏழைச்சிறுமியும் ரோஜாச்செடியும்" என்ற கவிதையில் ரோஜாச்செடி ஒன்றினை வளர்த்து

செடியே
உனது முதல் ரோஜாச்செடி
நம் இருவருக்குமல்ல
பிறகு?
என் தமிழ்தெய்வம்
எனதன்பு
தமிழ் ஆசிரியருக்கு.

அது தருகின்ற முதற்பூவை தமிழ் ஆசிரியருக்குக்தான் கொடுப்பேன் என்று அடம் பிடிக்கின்றார்
குழந்தைக்கு தாய் பாடுகின்ற சாதாரண தாலாட்டுக்களை கண்டிருப்போம். ஆனால்


உந்தன்
தந்தை பாவம் செய்ததாலே
இந்த
எய்ட்ஸ்தாயின் தாலாட்டு

என்று "தாலாட்டு" என்ற கவிதையில் எய்ட்ஸ் தாய் தாலாட்டு பாடுவதாக சோகத்தையும் வித்தியாசமான பார்வையில் சொல்லியிருக்கின்றார்.

"பிரிவின் உணர்ச்சிகள்" என்ற கவிதையில் மனைவியைப் பிரிந்த பிரிவின் உணர்ச்சியை சொல்லி புலம்பி இறுதியில்

உனை நான் கண்டதும்
கேட்பது முத்தமல்ல
உனது
காலில் விழுந்து மன்னிப்பு

என்று முடித்திருக்கிறார்.

வாழுகின்ற காலங்களில் பெற்றோரின் நிழலில் அவர்களைச் சார்ந்து இருந்துவிட்டு அவர்களின் வயதான காலங்களில் அவர்களை மதிக்கத் தவறும் இன்றைய சமுகத்திற்காக ஒரு தாயின் பார்வையில் "அம்மா" என்ற கவிதை பெற்றோர்களை நேசிக்கும் மகன்களின் மனதில் ஈரத்தை வரவழைக்கின்றது.

நிழல் கிடைக்க
நான் உன்னை வளர்க்க
நீ எனைத்தள்ளிவைத்து
அழகு காணும்
கொடுமையிது காண
நான் எத்தனை காலம்தான்
வாழ்வேனோ?

என்று மகனால் ஒதுக்கப்பட்ட தாய் கண்கலங்கி கூறி இறுதியாக

தலையணை கீழ் கொஞ்சம்
பணம் வைத்துள்ளேன்
எனது சவப்பெட்டி வாங்க
அது உதவும் கலங்காதே!

ஒரே ஒரு விண்ணப்பம்
எனது பிறந்தநாளைப்போல
என் மரணநாளையும்
தயவாக மறந்து விடு

என்று புலம்புவது வீட்டுத்திண்ணையில் அல்லது முதியோர் இல்லங்களில் பெற்றோர்களை ஒதுக்கி வைக்கின்ற மகன்களுக்கெல்லாம் ஒரு சாட்டையடி. தாயைப்பற்றி சமாதானம் என்ற கவிதையிலும் குறிப்பிட்டிருக்கின்றார்.

தாய் மட்டும்தான் மகன் குற்றம் செய்தாலும் அவனை மன்னிக்கும் குணம் படைத்தவள் என்பதை

உலகில் எல்லாம்
மன்னித்து மறக்கும்
ஒரே ஒரு
மனித நீதிமன்றம்
தாய் மனது என்ற இடத்தில்
மட்டும்தான்
அதில் எத்தனை புனிதம்

தாயின் மறுபெயர் சமாதானம்

என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

அதுபோல தந்தைக்கு எழுதுகின்ற ஒரு கவிதையில் மரணித்திற்கு வருகின்ற
மனிதர்களின் எண்ணிக்கைதான் ஒரு மனிதனின் நடத்தையை தீர்மானிக்கும் என்பதை

வீட்டைப் பூச்சந்தையாக்கி
வீதியெல்லாம்
பூமழை பொழிய உன்
இறுதி பயணத்தின்
அளவில்லாக் கூட்டம் சொன்னது
உந்தன் மனிதநேயம்

என்று சொல்லி தந்தையின் மீது அளவில்லா பாசத்தை தெளிவு படுத்தியிருக்கின்றார்.


மனைவியின் கனவாக வந்த "செய்தி" என்ற கவிதையில்

ஒரே ஒரு விண்ணப்பம்
எனது ஆத்மா
சாந்தி அடைய
தயவாக ஒரு
நல்லவரை மறுமணம் செய்

என்று கணவன் மனைவிக்கு எழுதி வைத்ததாக சொல்லும் அவரது மன ஓட்டத்தில் ஓர் மனிதநேயமுள்ள கணவனாக தெரிகின்றார்

மனைவியின் பிரிவில் கணவனும் கணவனை நினைத்து மனைவியும் என்று சில கவிதைகளில் அவரது எண்ணங்களின் தூய்மை பளிச்சிடுகின்றது

மீன்கள் என்றவுடன் சிலருக்கு எச்சில் ஊறும். இவருக்கோ கற்பனை ஊறியிருக்கின்றது.

சுனாமி உங்களைத்தாக்க அதை
எதிர்த்து கரைக்கு வந்து
தற்கொலை தவறென்று தெரிந்தும்
உங்கள் மீது பாசம் காட்டின
எங்கள் மீது
ஆதங்கமும் இல்லையா?

என்று கேட்டிருப்பது வித்தியாசமான சிந்தனை. இத்தனை கோடி மக்களுக்காக நாங்கள் உணவாக மாறுவதில் பெருமைப்படுகிறோம் என்று மீன்களின் மனிதநேயத்தைக் கூறி

அதோ அங்கே வலையிடும்
சத்தம் கேட்கிறது
முத்தம் தேடி ஓடுகிறேன் - வணக்கம்

கவலை வேண்டாம்
நாளை உங்கள் வீட்டு குழம்பில்
நானும் இருப்பேன்

என்று அழகாய் முடித்திருக்கின்றார் .


இவருடய கவிதையின் ஒவ்வொரு முடிவுகளும் ரஜினி படத்தின் பஞ்ச் டயலாக் எதிர்பார்க்கும் ரசிகனைப்போல எதிர்பார்க்க வைத்திருக்கின்றார்.

வானத்தோடு பேசுகின்ற கவிஞர் . அதில் கூட

வானமே நீ
கனவு காண்பாயா?
உலக சமாதானம் வரட்டும்
பிறகு
அதாவது நிஜமாகட்டும்

என்று உலக சமாதானத்திற்காக ஆசைப்படுகின்றார்.. வானத்திற்கும் உலக சமாதானத்திற்கும் என்ன சம்பந்தம்?. வானத்தின் கீழ் நாம் இருக்கின்றதால் வானத்திடம் முறையிடுகின்றாரோ..? தனது வித்தியாசமான பார்வையை வெளிப்படுத்துகின்றார்

இப்பொழுதுள்ள அரசியல் வாழ்க்கையின் கசப்புணர்வில் எல்லாருமே அரசியல் ஒரு சாக்கடை என்றும் அரசியல்வாதிகளின் மீது வெறுப்புணர்வுமே கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர் "அவர்களும் மனிதர்களே" என்ற கவிதையில் அவர்களுக்கு ஆதரவாய் குரல் கொடுக்கின்றார்

பாவம் அரசியல் வாதிகள் என்று அவர்கள் மீது இரக்கப்பட்டு மக்கள் மட்டும் என்ன நியாயமாகவா நடக்கின்றார்கள் என்று ஆதங்கப்பட்டு நம்மை முதலில் திருத்திக் கொள்வோம்.

அதுவரையிலாவது
அரசியல்வாதிகளைத் திட்டாதீர்கள்
அவர்களும் மனிதர்களே

என்று முடித்திருக்கின்றார்.

சமுதாயத்தில் தான் காணுகின்ற நிகழ்வுகளைக் கண்டு மனம் வருந்துகின்றார். சாலையில் காணுகின்ற ஆட்டோக்காரனை நினைத்துக் கூட மனம் வருந்தி கவிதை ஒன்றை எழுதுகின்றார். தனது "ஆட்டோக்காரன்" என்ற கவிதையில்

ஆறுமணி நேரம்
ஆட்டோ ஓட்டினாலே
நீங்களும் பெண்களின்
பிரசவ வலியை அறிவீர்கள்

என்று ஆட்டோ ஓட்டுதலில் உள்ள சோகங்களையும் ஒரு ஆட்டோக்காரனின் பார்வையில் இலேசான நகைச்சுவைத் தொனியில் சொல்லியிருக்கின்றார்.

நமக்கெல்லாம் சவாரியின் போது மீட்டருக்கு மேல் கேட்கின்ற ஆட்டோக்காரன் இவரின் இதயத்தின் மீது அதிவேகமாய் சவாரி செய்திருக்கின்றான். பாருங்களேன்..இறுதியாய் முடிக்கும்பொழுது

இன்று பிறந்தவன்
என்றும் ஒரு ஆட்டோக்காரன்
ஆக வேண்டாமென்று
இரகசியமாய் பிரார்த்திப்பேன்
இது சத்தியம்

என்று ஓர் ஆட்டோக்காரனாய் நிலைமாறி அவர்களுடைய உச்சக்கட்ட வேதனைகளை வடித்திருக்கின்றார்.

தலைவலி வந்தால் நாமெல்லாம் என்ன செய்வோம்..? அனாசின் எடுத்துக்கொள்ளுவோம் ஆனால் இவரோ கவிதையை கையில் எடுத்திருக்கின்றார் .

தலைவலி வருகின்ற காரணங்களை பட்டியலிட்டு பிறகு அதனை வராமல் தடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்

தலைவலி என்றால் என்ன
என்று
வரும் காலம்
கேள்விக் கேட்கப்புரட்சி செய்வோம்

என்று முடித்திருக்கின்றார். தலைவலியை ஒழிப்பதற்கு புரட்சி செய்யும் முதல் கவிஞர் இவர்தான். கொஞ்சம் விட்டால் "தலைவலி ஒழிக! தலைவலி ஒழிக" என்று மக்களை தூண்டி விட்டு போராட வைத்துவிடுவார் போல இருக்கின்றது.

"ஒரு பெண்ணின் கதை" என்ற கவிதையில் கணவனை விபத்தில் இழந்த இளம்பெண் ஒருத்தி தன் கண்களுக்கு முன்னால் குடும்பம் சகிதமாய் செல்லுகின்ற தோழிகள் மற்றும் கணவனோடு கைகோர்த்துக் கொண்டு செல்லுபவர்கள் எல்லாவற்றையும் கண்டு ஏங்கும் உணர்ச்சியினை வடித்திருக்கின்றார். தனது சோகம் என்றுதான் தீருமோ என்பதை

அன்றும் எனது கண்ணீர்
நான் உறங்கியதும் உறங்கியது.
மறுநாள்
நான் விழித்ததும் விழிக்க

என்று முடித்து தனக்கு என்றுமே சோகம்தான் மிச்சம் என்று அப்பெண்ணின் ஏக்கத்தை வடித்திருக்கின்றார்..

கண்களுக்கு கூட மனிதநேயக் கண்கள் கொண்டு கவிதை வடித்திருக்கின்றார்

எங்கள் பக்கத்து வீட்டக்காரர்
திரு. மூக்கின் வீட்டிலிருந்து
உதவியாளர் என்ற பெயரில்
வேலை செய்யும்
திரு. கண்ணாடிக்குக் கொடுக்கும்
மரியாதை கூட
எங்களுக்கு இல்லையா?

என்று கண்ணாடி - மூக்கிற்குக் கூட திரு. சுரேஷ் அவர்கள் திரு போட்டு அழைத்திருப்பது கவிதைக்கு புதியதாய் இருக்கின்றது. கண்களை பாதுகாக்கச் சொல்லிவிட்டு

மனிதா! நீ மரணப்பட்டாலும்
நாங்கள் உடனே இறப்பதில்லை
நாங்கள் இறப்பதற்குள்
உனது மரணத்தை
நாலுபேர் எடுப்பதற்குள்
கண்ணிழந்த ஒருவருக்கு
நாங்கள் வாழ உயில் எழுது

என்று கண் தானம் செய்வதை வலியுறுத்துகின்றார். தான் இறந்த பிறகு கூட தனது கண்கள் இந்த உலகத்தை யார் மூலமாவது பார்த்துக்கொண்டிருக்கட்டும் என்று இரக்கப்படும் கவிஞர் இவர்.

மனைவிக்கு பிறந்த நாளில் விருப்பத்தோடு சேலை வாங்கிக் கொடுத்து அவள் அதனை பிடிக்கவில்லை என்று ஒதுக்கும்பொழுது மனம் வேதனைப்பட்டு, அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளன் என்று சொல்லி கிண்டலடிக்கப்பட்டதால் கமல் மனம் நொந்து ஒரு சோகப்பாட்டு படிப்பதைப் போல இவரும் நொந்து வானத்தை நோக்கி தனது குறைகளை சொல்லி புலம்புகின்றார்.

அதனைக் கேட்ட வானம் இரவு முழுவதும் மழை பொழிந்ததது தன் சோகத்தில் பங்கு எடுத்துக் கொள்ளத்தான் என்பதை

தனக்காக இரவு முழுவதும் அழுத
வானமும் பூமியும்
அவனது நல்ல ஸ்நேகிதர்கள்
என்று மனம் குளிர்ந்தான்

என்று சொல்லியிருக்கின்றார். அட இது போன்ற சூழ்நிலைகளை எல்லாம் கவிதைக்கென்று எப்படி தேர்ந்தெடுக்கின்றாரோ தெரியவில்லை. இவருக்குள் சூழ்நிலைகளை தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு கதா ஆசிரியரே ஒளிந்திருக்கின்றார்

பெரிய மனுஷத்தனமாய் பல சிந்திக்க வைக்கும் கேள்விகளை "சிறுவனின் கேள்விகள்" என்ற கவிதையில் குறிப்பிடுகின்றார். அதில் என்னைக் கவர்ந்தவை

மரணித்தபிறகும்
வாழ்க்கை உண்டு என்ற
நம்பிக்கை பொய் என்றால்
பக்தர்களில் எத்தனைபேர்
அட்டகாசத்திற்கு அடிமையாவார்கள்

பாதிக்கப்பட்டவன் எதிர்த்தால்
அவன் பெயர்
தீவிரவாதியா எப்படி?

என்று நடுநிலைவாதிகளுக்கு எழும்புகின்ற கேள்விகளை கவிதைப்படுத்தியிருக்கின்றார்.

"காலம் நமது தோழன்" என்ற கவிதையில் காலம் நல்ல மருந்து என்பதை வித்தியாசமாய் சொல்லியிருக்கின்றார். "காலப்போக்கில் காயங்கள். மறைந்து விடும் மாயங்கள் "என்று ஆட்டோகிராப் படத்தின் ஒவ்வொரு பூக்களுமே பாடலை ஞாபகப்படுத்துகின்றார்.

அவரவர்களுக்கு வருகின்ற மனவலிக்கெல்லாம் காலம்தான் தீர்வு என்பதை

இத்தனை மனவலிகளிலிருந்து
வேண்டுமா விடுதலை?
இந்தக்கவிதையை அடுத்தமாதம்
இதே நாளில் படித்துப் பாருங்கள்

காலம் நல்ல மருந்து

என்று காயங்களுக்கு காலத்தின் ஆறுதலை கவிதையில் தந்திருக்கின்றார். பார்ப்போம் அடுத்த மாதம் இதே கவிதையை இதே சூழ்நிலையினில் படிக்க முடிகின்றதா என்று?

அரசியலால் நாட்டைக் வளர்க்கின்றார்களோ இல்லையோ தனது வீட்டை வளர்க்கின்ற அரசியல் வாதிகளுக்கு மத்தியில் சுயநலமின்றி மக்களுக்காய் உழைத்து மறைந்த தனக்குப் பிடித்த தலைவரான காமராசர் பற்றிய கவிதையில் குறிப்பிடுகின்றார்

நீ முதலமைச்சர் ஆனபோது
உனது ஊர் கிராமத்தில்
முதல் ஏழை
உன் ஆத்தாதான்

இந்த கவிதை வரிகளில் நான் உட்கார்ந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மனதில் ஒரு சோகம் அப்பிக்கொள்ள வைக்கும் வரிகள் இது.

மறைந்த பிறகுதான் கவிஞர்களும் அவர்களது கவிதைகளும் மதிக்கப்படுகின்றன என்பதை "எழுத்துக்கள்" என்ற கவிதையில்

இறுதிப்படுக்கை மூடியதும்
மண்களால் எனக்கு பூ மழை
அன்று முதல்
கவிஞன் எந்தன் எழுத்துக்கள்
கண்டிப்பாய் பிரபலமாகும்

என்று கூறி கவிதையை முடிக்கின்றார். அவருடைய எழுத்துக்கள் அவர் மண்களால் மூடப்படுவதற்கு முன்பே அவரை மாலைகளால் மூடட்டும் என்று வாழ்த்துகின்றேன்.

சமாதானம் - தாய்பாசம் - உலக அமைதி - பிறருக்காய் இரங்கும் மனம்- தொழிலாளிகளின் வேதனை - மனைவியின் மீது பிரியம் - ஆறுதல் - அறிவுரை என்று எல்லாவற்றைப் பற்றியும் அலசுகின்றார்

கவிதைகளின் வார்த்தைகளில் முற்றிலுமாய் தனது கருத்துக்களை தெரிவித்து விடவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியிருக்கின்றார்.

சமூகத்தை தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் மற்றும் பாதிப்புகள் கண்டு ஒவ்வொரு மனிதநேயமுள்ள மனிதனும் உணர்ச்சிவசப்படுகின்றான். அந்த மனிதனின் உணர்ச்சிகள் ஒவ்வொரு விதங்களில் வெளிப்படுகின்றது.

பாடல்கள் மூலமாக - நடனங்கள் மூலமாக - ஓவியம் மூலமாக - எழுத்துக்கள் மூலமாக இப்படி வெவ்வேறு பரிணாமங்களில மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான். அதுபோல் நண்பர் சுரேஷ் கவிதைகள் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்.

நிறைய எழுத வேண்டும் என்றும் காணுகின்ற எல்லா நிகழ்வுகளையும் கவிதையாக்கவேண்டும் - தனது சோகங்களையும் - மகிழ்ச்சிகளையும் கவிதைகள் மூலமாகவே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியாக நண்பர் சுரேஷ்க்கு இருக்கின்றது. அவரது ஆர்வத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

கவிதைப்புத்தகத்தை மூடிய பிறகும் ஆட்டோக்காரன் - மனைவியின் பிரிவு - தாயின் தனிமை - தந்தையின் மரணம் -போன்ற சோகங்களை தடவுகின்ற சில கவிதைகள் இதயத்தைச் சுற்றி பட்டாம்பூச்சிகளாய் வலம் வந்து கொண்டிருக்கின்றன. என் கவிதைகளே என்று தலைப்பு வைத்திருந்தாலும் படித்தபிறகு அவைகள் நம் கவிதைகளாகி விடுகின்றன.

கவிதைப்புத்தகம் கிடைக்குமிடம்

திருமகள் நிலையம்
55 - ( புதிய எண் 16) வெங்கட் நாராயணா சாலை
தி.நகர் - சென்னை - 600 017

தொலைபேசி : 91 - 44 - 24342899 24327696
தொலைநகல் : 91 - 44 - 24341559


கவிஞரின் முகவரி :

என். சுரேஷ்
nsureshchennai@gmail.com

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

எண்ணங்களின் ஊர்வலம்...



எண்ணங்கள் சில போதில் புயலாய், பூவாய், புனலாய், புதிராக வடிவெடுக்கக் கூடும் என்பதற்கு இந்நூல் சாட்சி. இந்நூலாசிரியர் திரு என் சுரேஷ் தன் எண்ணங்களை ஐம்பது பிம்பங்களாக வடித்துக்கிறார். பெயர் சூட்டப் படாத எண்ணக் குழுந்தைக்கு பெயர் சூட்டும் பொறுப்பு எனக்கு இவர் தன் எண்ணங்களை ஆழ்ந்து நோக்கிய போது, சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளைக் கண்டு மனத்தில் தோன்றிய எண்ணங்கள் ஊர்வலம் செல்கின்றன. எனவே,

"எண்ணங்களின் ஊர்வலம்" என்பதையே இந்நூலுக்கு பெயராகச் சூட்டியிருக்கிறேன்.

இந்நூலுள், மனிதநேயம் காட்சியளிக்கிறது. இயல்பாகவே இளகிய மனங்கொண்ட திரு என். சுரேஷ், தாம் செல்லுமிடங்களில்லாம் தம் மனதை பாதித்த காட்சிகளை தமது எண்ணங்களில் பதிய வைக்கிறார். பல இடங்களில் இவருக்கு ஏற்படும். வருத்தம் நம்மை நெகிழ வைக்கிறது.

நாகரீகத்தால் மேன்மையுற்ற பலர் முதியோர் இல்லங்க்களில், தங்க்களுக்கு வேண்டிய கல்வி, செல்வம், பிள்ளை, உற்றார், உறவினர் ஆகிய எல்லாம் இருந்தும் அனாதைகள்

எங்களுக்கு ஒன்றும் வேண்டாம் !
எங்களை மறக்காமல்
எப்போழுதாவது
எங்களை பார்க்க வா!

என்று, முதியோர் இல்லத்தில் அன்பிற்காக ஏங்கிடும் அனாதைகள்.

இயந்திரங்களோடு போட்டி போட்டுக் கொண்டு இயந்திரமாகவே மாறிவிட்ட மனித வாழ்க்கைக்குத் தேவை அன்பு. அந்த அன்பு இல்லாமல் மானுடம் செத்து விட்டதே!

மானுடத்தின் கைகளில் விலங்க்கு !
விடுதலை சொல்ல வந்த
மானுடம் சிலுவையில்!

என்று, எண்ணங்களால் சிலிர்த்தெடுக்கிறார்.

மனித குணம் சில வேளைகளில் மிருகத்தனம் கொள்வதைக் காண்கிறோம். அவ்வாறாகும் மிருக மனதை கொல்ல வேண்டும்! அதற்கு ஒரே மருந்து அன்பு ! தீர்ப்பும் எழுதுகிறார்.

பட்டினி கிடந்தவன் உணவுண்டதும்
காத்திருக்கும்
அவனது
பத்து நாள் தூக்கம்

என்று, வறுமையைப் படம் பிடித்த ஆசிரியர்,

பட்டினியின் உச்சத்திலும்
தொட்டிலிட
கட்டிலில் ஆட்டம் போடும்
முட்டாள் காமத்தின் அசிங்கம்

என்று, பட்டினிச் சமூகத்தை சாடுகிறார். பசியால் தூங்குகிறது குழந்தை; பசியால் துள்ளுகிறது காமம், என்னும் கேள்விக் கணை இவரின் சாடல்.

விருந்தினர் சென்றதும்
கணவனுக்கும் மனைவிக்கும்
நடக்கும் இரகசியச்சண்டை

என்று, போலியான மனிதர்களை காட்சியாக்குகிறார்.

நன்றியில்லாப் பிள்ளைகளிடம்
பிச்சையெடுத்து உயிர் வாழும்
முதியோர்களின்
கண்ணீர்த் துளிகள்

என்று, பிள்ளைகளால் புறந்தள்ளப்பட்ட பெற்றோர்களின் அவல நிலையைக் கண்டு அழவைக்கின்றார்.

'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் சொல்எனுஞ் சொல்'

என்னும் குறல் கூறும் மகன்களைக் காண விரும்புவது தெரிகிறது.

சில வேளைகளில் சிலரின் கருத்துக்கள் சமூகத்துக்கு தேவைப்படும் மருந்தாக இருக்கு. ஆனால்
மருந்து தருகின்றவனையே நோயுற்ற சமூகம் அழிக்க நினைப்பதுண்டு. அத்தகைய செயலையும்
இந்நூலாசிரியர் விட்டுவைக்கவில்லை.

எழுத்தாளனை
மொத்தமாக எரித்த பிறகும்
அணைக்க முடியா
அவனின்
நெருப்பு எழுத்துகள்

நெருப்பை நெருப்பால் அணைக்க முடியுமா? என்னும் நெருப்பு வரிகளையும் காண முடிகிறது.
'யான் குற்றமுடையோனாயின் தீச்செவா என்னைச் சுடுதி' என்று, தீக்குள் பாய்ந்த சீதையைக் கூறும்கம்பன், "தீய்ந்தது அவ்எரி, அவள் கற்பின் தீயினால்" கற்புத் தீயினால், அக்கினி வெந்து தீய்ந்தது! என்பதைநினைவுபடுத்துவதாக அமைகிறது.

நல்ல கருத்துக்கள் என்றும் நிலத்திருக்கும். அதற்கு அழிவில்லை என்பதாக இவரின்
எண்ணங்களின் ஊர்வலம் புறப்படக் காண்கிறேன்

இவர் தம் எண்ணங்க்கள் எல்லோர் மனத்தையும் சென்றடைய வேண்டுமென்று விரும்புகிறேன். மேன்மேலும்அரிய எண்ணங்களைப் பதிவு செய்து பல புதிய நூல்களைப் படைத்திட வாழ்த்துகிறேன்

அன்புடன்
முனைவர் இர. வாசுதேவன்
=========================================================
(இந்த புத்தகத்தின் விற்பனையாளர்கள்)
திருமகள் நிலையம்
55 (புதிய எண் 16)
வெஙகட் நாராயணா சாலை
தி நகர்,சென்னை 600 017
தொலைபேசி: 24342899 / 24327696
தொலைநகல்:24341559

உன்னையே தேடும் கவிதைகள்...


தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... என்றார், பாரதியின் பாசறையில் பயின்ற பாவேந்தர்! அந்த தமிழ், இன்பத்தமிழ், நம் தமிழாக வாய்த்தது நாமனைவரும் பெற்ற பேறு! ஒரு காலத்தில் ஒரு சிறுநிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த மொழி, இன்று உலகளாவிய மொழியாக மலர்ந்துள்ளதை
நாம் கணும்போது, நமது உள்ளம் பூத்துபோகிறது!

கவிஞன் என்பவன் தான் வாழும் சமுதாயத்தின் தாக்கம் உள்ளவன். வேதனையின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் எழுச்சி, தோல்வியின் பொசுங்கலில் உயிர்த்தெழும் பறவையைப்போல, சேரிகளில் மணக்கும் சந்தனத்தையும்,உப்பரிகையில் எடுக்கும் முடைநாற்றங்க்களையும், மதம், பணம் கடந்து வாழும் காதலையும், மனிதநேயம் வெளிப்பட வேண்டியநேரத்தில் மௌனமாயிருப்போரையும், சமூக அக்கரையோடு ஆர்ப்பரித்து உரத்து உலகிற்குச்சொல்லி சிந்தனை விதையை எவன் விதைக்கிறானோ, அவனே கவிஞனாக முகம்காட்ட முடியும்.

அந்த வகையில் சகோதரர் கவிஞர் சுரேஷ் உணர்ச்சிகயை உயிராகக் கொண்ட கவிஞராக வலம் வருகிறார்.

வெளிநாடுவாழ் தமிழர்கள், தாயகத்தமிழர்களுக்கு உதவவேண்டும் என்று அன்பு எச்சரிக்கை விடுகிறார் கவிஞர். தமிழின்பால் ஈர்க்கப்பட்டு தமிழில் கவிதைகள், கட்டுரைகள் எழுதுகின்ற இவர் படைப்புகள் தலைப்பில் உண்மை பேசும் போது இவர் கவிதா ஆர்வாலர்கள் மனதில் குன்றென உயர்கிறார்!

தாய்மை, தோழமை, கூடா நட்பு, வேண்டுகோள், பெரிய பெரிய ஆசை என்று ஏராளமாய் பிறருக்காய், உணர்வாய்ச்சுரந்த இவரின் கவிதைகளை கவிதை தாகமுள்ளோர் பருகி ஆனந்திக்கலாம்!

கவிதை என்றாலே கற்பனை என்ற எண்ணம் கவிழ்ந்து உண்மையை நிமிர வைத்திருப்பதை உணரலாம். சமூகத்தின் அவலங்களுக்கு செவி சாய்ந்து காகிதத்தில் வடித்தெடுக்கும் புதுமைச்சிற்பி என்றால் அது மிகையில்லை!

பிச்சைக்காரியைக் கூட சகோதரியாக ஏற்றுக்கொள்கின்ற மனம் எல்லோருக்கும் வாய்த்து விடாது; கவிஞர் சுரேஷ் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது; எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்னேறிய நாடுகளில் சிலவற்றைப் பட்டியலிட்டு, இப்படி ஒரு கலவையாக இந்தியா புதுவார்ப்பாய் மாறவேண்டும் என்று புதியவை தேடுதல் கவிதையில் அதிபர் அப்துல்கலாம் கனவை கவிதையாய் வடித்துள்ளார்.

இலட்சாதிபதிகள் கோடீசுவரர்களாகவும், கோடீசுவரர்கள் மேன்மேலும் கோடிகளைக் குவிப்பதும் சினிமாவும் அரசியலும் ஏழைகளை மூலதனமாய் வைத்து தங்கள் வெற்றிப் படிகளைக் கட்டுவது ஒருபுறமும் ஏழைகள் நிலையில் எந்த மாற்றமுமில்லாமல் ஏழைமக்கள் பட்டினியால் மரித்துக்கொண்டிருப்பது ஒருபுறாமிருந்தாலும் இந்தியா முன்னேறுகிறது என்று சொல்வதை கேட்டு நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் என்ற பாரதியின் முகத்தை நம்முன் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்!

பிறந்த வீட்டை மறந்து புகுந்தவீட்டை பிறந்த வீடாகக்கருதி தன்னை, அன்னையாக, மனைவியாக அக்காள், தங்க்கை, அண்ணி, சித்தி, பெரியம்மா என்று பல்வேறு முகங்காட்டி, தன்னை இணைத்துக்கொண்ட குடும்பத்திற்காய் சேவகியாய் வலம் வரும் அண்ணி!

இந்த மூன்றெழுத்தில் குடுமபமே உயிரின் உயிராய் உறைந்து கிடப்பதையும் ஒருநாள் அந்த அன்பு ஜீவன் கொடிய நோயின் தாக்குதலில் மருத்துவமனையில் அடைக்கலமாகி விட்டதை நெஞ்சுருகச் சொல்லும்போது... அடடே... பாசத்தின் நேசங்களில் கசியும் இரத்தக்கண்ணீரில் வாசிக்கும் எல்லோரையும் கரைய வைக்கிறார் கவிஞர் சுரேஷ்!

கரடுமுரடான நிலத்தைக்கூட தன் உழைப்பால் சீர்திருத்தி நந்தவனமாக்கும் அதிசயமும், வறட்சியால் நில உதடு வெடித்து தாகத்துக்கு ஏங்கும் கிணற்றை ஆழப்படுத்தியோ, புதிய கிணறு ஒன்றையோ தோண்டிச்சுரந்த நீர்பாய்ச்சி நில மகளைக்குளிர்வித்து அவள் பூக்கும் புன்னகை என்ற கம்பீர விளைச்சல் கூட விவசாயியின் வியர்வைக்கண்ணீர்த் துளியால் என்பதை கவிஞர் சுரேஷ் ஆச்சரியித்து அதிசயக்கிறார்.

என்னதான் அதிசயம் கண்டாலும், காடுவெள்ஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்கிற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் இன்னொரு முகத்தையே அதிசயம் கவிதையில் பார்க்கிறேன்.

சில கவிதைகளை இதுவெல்லாம் கவிதையா? என்று சிலர் முகஞ்சுளிக்கலாம்; ஆனாலும் அக்கவிதியின் ஆதாரசுருதியிலே அகந்தோய்ந்து அவரின் எண்ண அதிர்வுகள் எழுச்சியோடு சிறகு விரித்ததாகத் தான் நான் கருதுகிறேன்.

தமிழின்பால் கொண்ட காதலால் தமிழுக்காக தமிழருக்காய் தமிழுணர்வோடு எழுதுகிற
சகோத்ரர் கவிஞர் சுரேஷ் அவர்களுக்கு தமிழர்களான நாம் ஊக்கமும் உற்சாகமும் அளிக்காவிட்டால் பின் யார்?

இந்தச்சமுதாய அமைப்பை தலைகீழாக மாற்றி அமைக்க முயலும் இவரின் உள்ளுணர்வுகளின் வழியிலே... இது இவரது இரண்டாவது புத்த்கமாகும்!

காலமறிந்து கூவும் சேவல்! காலம் உருவாக்கிய கவிஞர் இவர், ஆனாலும் காலத்தின் பிடர்பிடித்து உந்திப் பெரும் புரட்சி செய்யவிருக்கின்ற கவிஞர் என்பதால் படித்து இன்புறுங்க்கள்!


சி.எஸ். ஆல்பர்ட் பெர்னாண்டோ
அமெரிக்கா
--------------------------------------------------------------------------

விற்பனையாளர்
திருமகள் நிலையம்
#55 (புதிய எண் 16)
வெஙகட் நாராயணா சாலைதி நகர்,
சென்னை 600 017
தொலைபேசி: 24342899 / 24327696
தொலைநகல்:24341559

இளங்காற்று வீசுதே...



"வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் அன்று!
வாடிய உள்ளங்களைக் கண்டு வாடும் வள்ளலார் இன்று!!

இளங்காற்று வீசுதே...
என்ற என்.சுரேஷின் படைப்புகளில் இருக்கும் உணர்வுகள்....
உணர்வா? உணவா?
ஆம்...செவிக்குணவு....!
உறவா? பிரிவா? இன்பமா? துன்பமா? இயற்கையா? செயற்கையா?ஊடலா? கூடலா?இரவா? பகலா?பிறப்பா? இறப்பா? அடுக்கடுக்காய் அலையலையாய் எதிர்நீச்சல் போடும் வினாக்களே!

விடை பகருகிறதில் சொப்பன உண்மையுண்டு!!

விதை முளைவிடும்போதே விருட்சமாகும் வீரியத்தோடுதான் பூமியைத் துளைத்து வெளிக்கிளம்புகிறது!

முளைவிட்டு கிளைவிட்டு செடியாகி மரமாகி கனி தருவதற்குள் அது எத்தனை இடர்பாடுகளைச் சந்திக்க நேர்கிறது?

தாகத்தோடு வாடி வதங்கிய நாட்கள் எத்தனை? விளையாட்டாக, விறகாக அதன் கிளை விரல்கள் ஒடிக்கப்பட்டபோது அது வடித்த கண்ணீர் யாரறிவார்?

அதன் தோல்பட்டைகள் துகிலுரியப்பட்டபோது வடிந்தது கோந்து என்பார்! பிசின் என்பார்!ஆனால், அது வடித்த இரத்தக் கண்ணீர் என்பதை யாரறிவார்?
சுரேஷ் போன்ற உணர்ச்சிக் கவிஞர்களால் மட்டுமே உணரமுடிந்த உண்மை அது!

பத்துமாதம் பதற்றமாய்ச் சுமந்து, பெத்து, வளர்த்து கண்ணின் கருமணியாய்க் காத்த தாயுள்ளத்தின் தவிப்பை நேற்றுப் பிறந்த உறவுக்காய் ஒதுக்கிவிட்டு ஓடும் பிள்ளை அறிந்தும் அறியாத பொழுதாய் நகர்கிற நத்தையாய் உணர்வுகளை உதறுகிறார், உறவா பிரிவா? - வில் உணர்ச்சிக் கவிஞர்!

காதலா? பாசமா?
வென்றது மூடநம்பிக்கை மூர்க்கமாக முடமானது காதல்! என்பதை "பொன் முகம்" தனில் பொய்யுரைக்காமல் மெய்யுரைக்கிறார் நம் உணர்ச்சிக் கவிஞர்!

மனைவியா? தாயா? பாசமா? பகையா? நீளும் இந்தப் பட்டியலில் நாளும் வளரும் பாழும் விடயங்களை சொல்லமுடியாமல் இவர்,சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் உணர்ச்சிக் கவிஞர் உள்ளம் குமுறுகிறார்,"என்ன சொல்ல?" என்று!

பெண்ணுக்குத்தான் எத்தனை கதாபாத்திரங்கள்? என்று ஏக்கமாய் "மனைவி"யில் உணர்ச்சிக் கவிஞர் அடுக்குகிறார்.

ஆணுக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் இருக்கிறது தாய்மைப்பேறு தவிர என்பதை "மெய்மறந்து" வாழ்த்திப் போற்றிப் பாடியதோடு எங்கள் சமுதாயத்தில் வாழ்ந்து எங்களை வாழவையுங்கள்; எங்களை அனாதையாக்காதீர்கள்...உங்கள் பாதங்களில் வீழ்ந்து கதறி விண்ணப்பிக்கிறேன் எனும்போது வேண்டாம் தம்பதியருக்குள்கருத்து வேறுபாடு! சண்டை வேண்டாம்! தற்கொலை வேண்டாம்!விவாகரத்து வேண்டாம் என்று உரத்துச் சொல்லாமலே உணர்ச்சிகளூடாய் உணர்த்தி நம்மை உறையவைக்கிறார்!

தமிழகத்தில் தவழ்ந்தால், தமிழ்ப்பெண்ணை மணந்தால் பிறவிப்பயனை அடைவாய் என்று தன் உள் மன ஓசையை ஓராயிரம் காரணங்களோடு ஒப்பிட்டு தமிழகத்தை தலைநிமிரவைத்த மகனே......உனக்குதமிழகமே............. தலைதாழ்த்தி வணக்கம் சொல்லும்!

சுனாமிக்கே மன்னிப்பு வழங்கி, திருந்திவிடு என்று தீர்ப்பும் சொல்லி மன்னிப்பது மனிதநேயம் என்று தனித்துவத்தை - தம் தனித்துவத்தை தரணிக்குணர்த்துகிறார் நம் உணர்ச்சிக்கவிஞர்!

உந்தன் நூறு குறைகளை மறைவில் உறங்கவைத்துவிட்டு ஒருவரின் ஒருதவறை நீயேன் பேசுகிறாய்? என்பதில் எவ்வளவு பொருள்பொதிந்து கிடக்கிறது? "உன் முதுகைக் காணையலாதவன், அடுத்தவனின் முன்புறத்தை குறைகூறிப்பேசத் தகுதியில்லாதவன்" என்று போதித்த இறைமகன் இயேசுவின் இறை வசனத்தின் மறுபிறப்பை "ஊர் பேச்சில்" உள்ளம் திறக்கிறார் இவர்!

ஊனம் ஒரு குறையல்ல என்று இரு கைவிரல் இல்லாரைச் சுட்டி அவர்தம் சாதனையைச் சொல்லி ஒரு நிறையாளராய் உலகிற்கு உணர்த்தி, ஊனமுற்றோருக்கு "விரல்களில்" உற்சாகமூட்டி நம்பிக்கை விதை தூவும் இந்த நல்மனதாளர், ஊனம் உடம்பில் தான், உள்ளத்தில் அல்ல என்பதை எவ்வளவு பக்குவமாய் போதித்திருக்கிறார்; இனியொரு இனிய உலகம் காண இவர்களுக்கு இனியவர் கவிதை வெளிச்சப்பூக்களை "விரல்களில்" உயர்த்திக் காட்டியுள்ளார்!

பாசத்தின் உண்மையை முதியோர் இல்லத்தில் முகிழ்ப்பதைப் பார்க்கலாம்!
நடைபாதை நாயகியாய் முகம் காட்டும் முத்தம்மா! நீயே கோபுர முத்....தம்மா! முகவரி இல்லையென்றாலும் அகவரி அகலமாய் முத்தம்மாவுக்கு! மாடிவீடுகளுக்கு இல்லா மனவிலாசம் மொத்தமாய் நடைபாதைகளுக்கு நகர்ந்துவிட்டதை கருப்புமுத்து நம் இதயச் சுரங்கத்துக்குள் இதமாய் அமர்ந்து கொண்டு எழ மறுக்கிறது!!

அரசே பத்து விழுக்காடு ஊதியத்தை பிள்ளைகளிடமிருந்து பெற்று பெற்றோருக்களிக்க யுத்தமொன்று முதியோருக்காய் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்!

பிச்சை எடுப்பவர்களைக்கூட சகோதரனாக, சகோதரியாகஏற்றுக் கொள்கிற பக்குவம் இவருக்கு வாய்த்திருப்பதை ஏழைகளின் ஏழைகளில் வெள்ளைக்காரர்களிடம் வெள்ளையப்பனைக் கொடுத்து ஏழைகள் வெள்ளையரிலும் இருக்கிறார்கள் என்று ஏகாந்தமாய்ச் சொல்லும் மிடுக்கு இருக்கிறதே அதுதான் கவிஞனின் கர்வம்! அந்தக் கர்வம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டிய கர்வம்! அந்தக் கர்வம் காட்டி தமிழர் மானம் காக்கிறார், கவிஞர்!

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்று போதித்தார் அன்று!
இன்றோகவிஞர் ஆடை கிழித்தவனுக்கு ஆடை கொடு! நன்றி மறந்தாலும் உதவுங்கள்! உங்கள் சோற்றில் மண்போட்டாலும் அவனுக்குச் சோறிடுங்கள் என்று இதயசுத்தியோடு மன்னியுங்கள் என்று இறைத் தத்துவம் உதிர்க்கிறார் "நேசம்" கவிதையில்....!

மரியாதையாக பூங்காற்று பாடலைச் சொல்லி ஆறாயிரம் குளிர் நிலவுகள் வந்து அந்தரங்கங்களில் சிலிர்க்க வெயில் அதனின் உடைமாற்றியது என்ற சூழலை இயக்குனர் பாரதிராஜாவாக மாறி கவிஞர் கம்பீரம் காட்டுகிறார். ஒருவனொக்கொருத்தி என்ற இந்திய சம்பிரதாயமுறை மரணப்படாமலிருக்க மனைவியரே நீங்கள் கணவரை நேசிப்பதை வெளிப்படுத்தத் தவறாதீர் என்று சொல்லும்போது ஒரு முதிர்ச்சி பெற்ற கவிஞனாக நம்மை மகுடம்சூட்ட வைக்கிறார்.

நண்பனும் சினேகிதியும் உரைநடையை உள்ளம்கிள்ள, எண்ணம் இனிக்க, எண்ணியதை திண்ணமாய் "மனைவியிடம், உண்மை சொல்லுகிறேன் என்று தங்கள் முன்னால் காதலை சொல்ல வேண்டாம்; நிஜங்கள், நிஜங்களாக ஏற்கப்படாதவரை, என்கிறார்.

சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்லத்தான்துடிக்கிறேன்; ஆனால் தொண்டைவரை வந்தாலும் அதற்கு மேல் சொல்ல ஆனந்தன் மனைவி போல் மனைவியர்களும் ஜெயஸ்ரீ போன்ற சினேகிதிகளும்.

சிறைச்சாலை எப்படி இருக்கவேண்டும்? என்பதற்கு இவரது கற்பனைக் கடிதம்....இது ஆட்சியாளர்களுக்கான சிந்தனைத்தூவல்கள்! இவரின் எண்ணக் குவியல்கள்! நாளையச் சட்டமாகவேண்டும்! ஏழைக்குழந்தைகளுக்கான பள்ளிகளாகவும் முதியோர் இல்லங்களாகவும் பேருக்கு ஒரு சிறைச்சாலை; அதுவும் சிறையாக இல்லாமல் மனநிலை திருத்தகம் என்ற பெயரில் அமையட்டும் என்று புரட்சிச் சிந்தனைகளோடு தன் மனச்சிறையை திறந்துகாட்டும் இவர் இந்திய உள்துறை அமைச்சராகட்டும் என்று இதைப்படிக்கும் ஒவ்வொருவரும் வாழ்த்துப்பூக்களை வாரி இறையுங்கள் என்று என் உள்மனம் கோரிக்கையொன்றையும் உரத்து வைக்கத் தோன்றுகிறது!

கவிப்பேரரசு ஆகவேண்டும், இப்போதைய தாயும் மனைவியும்,கூடவே செல்லமகளாக மட்டும் "தங்கமணி" அக்காவே எனக்குப் பிறக்க வேண்டும் என்ற இவரது மூன்று ஆசைகள்! அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் இது நிறைவேறவேண்டும் என்பது இவரது தாளாத ஆசை! எனக்கு ஒரு வரம் கொடுக்கும் வல்லமை இருந்தால் இந்தாபிடி என்று கொடுத்துவிடுவேன்! வரம் கொடுக்கும் வல்லமை இல்லை;சாபம் கொடுக்கிறேன்.....இதோ இந்தப் பிறவியில் நீயொரு கவிப்பேரரசு..மக்கள் மனம் கமழும் கவிப்பேரரசுவாக திகழக்கடவாய்!

பெரும்பாலானவர்களுக்கு அசாதாரணமாய் நடந்துவிடும் குற்றவுணர்வில் "டிரைவர் தம்பி"யில் கவிஞரும் சிக்கிக்கொள்கிறார்! அதற்காக அவருக்கு அவரே தண்டனை கொடுத்து, அது முடியும் முன்பே ஓட்டுனர் அங்கு தோன்றி பாவமன்னிப்பு வழங்குவது உண்மை அன்புக்கு பழச்சாறு கொடுத்து ஆசீர்வதித்த காட்சி அனுபவப் பட்டவர்களுக்குத்தான் இது தெரியும்!

கதைகளே பாடமாக இருப்பதைக் கவனமாய்ச் சொல்லும் இவரது கருத்துக்கள் வாழ்க்கைக் கதைக்கு ஒவ்வொருவரும் கவனமாய்க் கொள்ளவேண்டியது என்பதில் எள்முனையளவு கூட அய்யமில்லை!

தாமதங்கள் கூட சில நேரங்களில் நன்மைக்கே என்பதைச் சிறு சம்பவத்தால் சிலாகித்துச் சொல்லி தாமதங்களுக்காக வருந்தவேண்டாம் என்கிற இவரது சித்தாந்தம் அனேகர் வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகளாக நிழலாடும் நிசங்கள்தானே!

விருந்து கொடுத்துச் சரிந்தோர் இல்லை என்று விருந்து கொடுக்க வேகப்படுத்துகிறார்; யாருக்கு? எப்போது? எங்கு என்பதை அவருக்கே உரிய வள்ளல் உள்ளத்தோடு பட்டியலிடும் பாங்கைப்பார்க்கும் போது "பசியாறிட" வாங்க என்று முகமறியாதாரைக்கூட முகமலர்ச்சியோடு உபசரிக்கும் கிராம உபசரிப்புகளில் மூழ்கி எழவைத்தாலும், இவரோ வரவழைத்து விருந்து படைக்கும் வழக்கம்மாற்றி தேடிப்போய் விருந்து படையுங்கள் என்று "அனாதை இல்லம், முதியோர் இல்லம், ஏழைப்பள்ளிகள், சிறைச்சாலைகள், மருத்துவமனைகள் மஞ்சள் கயிறுகூட வாங்க வசதி இல்லாத மானமுள்ள சகோதரிகள்..."என்று பட்டியலிடும் வித்தியாச பட்டியலில் வெளிச்சமிடுகிறார்!

அடிக்கிற வெய்யிலில், கொஞ்சம் நிம்மதியா கண்ணயர முடியுதா? அதை விக்கிறேன், இதை விக்கிறேன் என்று தூக்கிகிட்டு வந்துடுறாங்க என்று நம்மில் பலர் வேகாத வெயிலையும் பொருட்படுத்தாமல்தலை, கை, தோள் சுமையாய் சுமந்து வருவோரை நொடியில் விமரிசித்துவிடுவோம். ஆனால் சுமை சுமந்து வருபவர்களின் வெளிச்சுமை தெரிந்த நமக்கு அவர்களின் உள்(ளச்)சுமை தெரியாது. இந்தக் சமுதாயத்தில் பலதரப்பட்ட வாழ்க்கை வாழ்வோரின் சூழல் நாம் அறிவதில்லை; அப்படி அறியும்போது அவர்களின் சோகங்கள், ஏக்கங்கள் தீர நம்மால் முடிந்த சிறு உதவையையாவது செய்யவேண்டும் என்று எண்ணுவோம்; அதைத்தான் கவிஞர் நோபல் பரிசில் தமக்கே உரிய நடையில் இதயம் பிழியச் சொல்லியிருக்கிறார்!

அன்ன விசாரம் அதுவேவிசாரம்! அதுவொழிந்தால் சொன்ன விசாரம் ! தொலையாவிசாரம் நற்றோகையரைப் பன்ன விசாரம் பலகால்விசாரம்! இப்பாவி நெஞ்சுக்கு என்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சியே கம்பனே என்று பட்டினத்தார் பாடியுள்ளார்.

துன்பமே எனக்கு இல்லை. நான் எவ்விதக் கவலையும் இன்றி மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்று யாராலும் கூறமுடியுமா? உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையில் துன்பம்; ஏதாவது ஒருவகையில் எல்லோருக்கும் வருகிறது; அவற்றை வென்று வாழ்வதுதானே வாழ்க்கை! வாழ்க்கையில் வாடி வதங்கி நிற்போருக்கு நம் உணர்ச்சிக்கவிஞர் உயிர் தருகிறார், தம் கவிதைகள்மூலம்!

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் எண்பது கோடி நினைந்து எண்ணுவன- கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்சாந்துணையும் சஞ்சலமே தான்-உண்பது நாழி- சாப்பிடுவது ஒரு பிடி சோறு, உடுப்பது நான்கு முழ ஆடை. ஆனால் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் இருக்கின்றனவே அவை கோடி. அத்தனை கோடி எண்ணங்களுடன் வாழும் மனிதனின் வாழ்க்கை துன்பமானதே என்கிறார் ஒளவைப்பிராட்டி!

இப்படி துன்பம் மிகுந்த வாழ்க்கையில் துன்பப்பட்டு நிற்போருக்கு துயரப்பட்டு நிற்போருக்கு தம் கவிதைகளால் மட்டுமல்லதாமே அவர்கள் வாழ்வில் பங்கெடுத்து ஆற்றுப்படுத்த முயல்கிறார்.

மலரினும் மெல்லிய உள்ளம் வாய்க்கப்பெற்றவர் இவர்! இவர் கவிதைகளை வாசிப்போர் அன்பிலார் எனினும் அன்பு கொள்வார்; அடுத்தவர் மீது இரக்கம் கொள்வார்;
வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் அன்று!- இன்றுவாடிய உள்ளங்களைக் கண்டபோதெல்லாம் வாடிப்போகும் வள்ளலாராய் இன்று...! இவரும் வாடிக் கவிதை வடிக்கும் இவர் நம்மோடு வாழும் வள்ளலார்!

இவர் மக்கள் மனங்கவரும் கவிப்பேரரசாக வலம்வரும் நாள் வெகுதூரமில்லை! எல்லோரும் இவர் கவிதையில் மூழ்கி யான் பெற்ற இன்பத்தை நுகர அழைக்கின்றேன்.

ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,அமெரிக்கா

----------------------------------------------------
விற்பனையாளர்
திருமகள் நிலையம்
#55 (புதிய எண் 16)
வெஙகட் நாராயணா சாலை தி நகர்,
சென்னை 600 017
தொலைபேசி: 24342899 / 24327696
தொலைநகல்:24341559

தோழமையுடன் ஆன்மீகம்!


உலகின் எல்லாப் போர்களும் இருவர்களின் சண்டையில் தான் உருவானது.
"நான் தான் சரி" என்ற இருவரின் ஆணவங்கள் மோதிக்கொண்ட சண்டை!

அதனால், உலகின் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் அன்பு நிறைந்திருக்க வேண்டுமென்றும்
இது தான் ஒரு சமாதான உலகை தர இயலும் என்றும் பெரியவர்கள் பலரும் நமக்கு போதித்திருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்டு தவிப்பவர்கள் பொதுவான நியாத்தை முன் வைத்து எதிர்க்கிறார்கள்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் நியாயங்களை பார்க்காமல், நாங்கள் தான் "அறிவளிகள்-உயர்ந்தவர்கள்" என்ற மனப்பான்மை இருப்பவர்கள், உயர்ந்த ஜாதியில் பிறந்து ஜாதி-மத வெறி பிடித்து அலைபவர்கள், அதிகாரம் இருப்போர்கள் மற்றும் கோடீஸ்வரர்களில் பலர், தங்களை விட எளிமையானவர்களை அடிமைப்படுத்துகிறார்கள்.

பிறகு அதில் மகிழ்வது போல் நடிக்கிறார்கள்.
தனது சொந்த மனசாட்சிகளின் எச்சரிக்கைகளையே ஏளனம் செய்கிறார்கள்!

உண்மையில், மனிதநேயமில்லாத ஒரு மனிதனும் உலகில் இல்லை!

ஒரு விபத்து கண்டால், ஒரு மரணம் கண்டால், ஒரு குழந்தையின் அழுகை போன்றவை கண்டால் ஏன் எல்லோருடைய உள்மனங்களும் அழுகிறது?

மிகக் கொடூரமான இதயங்களிலும் கண்ணீர் வராமல் இல்லை!
அவனின் கொடுமை உணர்வு அந்த கண்ணீரைத் துடைத்து அவனை அடிமைப்படுத்துகிறது!

நமக்கு பழக்கமே இல்லதவர்களின் பிரிவுகளும் ஆபத்துகளும் பற்றின செய்தி நமது காதில் கேட்டாலே நம்மால் அதை தாங்க முடியவில்லையே, ஏன்?

சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்களின் கவலைகள் நமக்குள் ஏன் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது?

இந்தியா சார்பில் ஒருவர் தங்கமடல் வென்றால், ஆப்ரிக்கா காட்டில் சிங்கத்திடத்திலிருந்து ஒரு நீக்ரோ-சகோதரன் தப்பித்து விட்டான் போன்ற செய்திகள் கேட்டால் ஏன் எல்லோருடைய மனங்களிலும் ஒரு சந்தோஷம் மலர்கிறது?

அடிப்படையில் மனிதனின் மனம் அடுத்த மனிதனோடு அன்போடு இணைக்கப் பட்டிருக்கிறது. அந்த அன்பின் இணைப்பை உணர்த்தப்பட்டு உறுதிசெய்வதே ஆன்மீகம் ! என்பது எனது தாழ்மையான கருத்து!

அன்புடன்
என் சுரேஷ்

Tuesday, April 1, 2008

ஐந்து பெற்ற அரசர்கள்!!!!



திருமணமாகி ஒரு மாதம் முடிவதற்குள் சமுதாயத்தின் முதல் கேள்வி "விசேஷமொன்றும் இல்லையா?" அல்லது பூச்சி, புழு ஒண்ணும் தங்கவில்லையா? பூச்சி என்று ஆணையும், புழு என்று பெண்ணையும் குறிப்பிடுகிறார்களா இவர்கள்!

முதல் குழந்தை பிறந்து ஒரு சில மாதங்கள் முடிந்ததும் "குழந்தைக்கு ஒரு துணை வேண்டாமா? அடுத்த குழந்தை எப்போது?" என்று சமுதாயத்தின் அடுத்த தேவையற்ற கேள்விகள் வீடு தேடி வரும்!

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ எழுபது விழுக்காடு மக்கள் கிராமத்தில் தான் வாழ்கிறார்கள். இந்த எழுபது விழுக்காடு மக்களில் அதிகமும் வறுமையின் கொடுமையில் தான் வாழ்ந்து கரைகிறார்கள்.

நகரத்தில் வாழும் மக்களிலும் கணினி, மருத்துவம் மற்றும் அதிக லாபம் தரும் விளம்பரம் போன்ற துறைகளில் இருப்பவர்களைத் தவிர்த்து பலரும் பொருளாதார ரீதியாக மிகவும் கவலைக்கிடமான சிக்கலில் தான் உள்ளனர் என்பதே நிதர்சனமான உணமை!

பட்டுச்சட்டை போல் ஆடையணிந்தவனின் பட்டினி வயிற்றை யாரறிவார்?

இலவசங்களை புறக்கணிக்கும் ஒரு மனிதனாவதுண்டா நமது ஏழை சமூகத்தில்? அடுத்த கேள்வி, அவர்களுக்கு அது சாத்தியமா? தாகத்தால் வறண்டு தவிப்பவனுக்கு ஒரு வாய் தண்ணீர் இலவசமாக கிடைத்தால் அவன் அதை குடிக்காமல் இருக்கத் தான் இயலுமா?

சரி.. இந்த வறுமைக்கு காரணம் தான் என்ன

- இன்னமும் ஏழை மக்கள் மீது மேல்க்குடி மக்கள் தொடரும் ஒடுக்குமுறை, பொறாமை....
- உயர்ந்த படிப்பு இல்லாததனால் கிடைக்கும் குறைந்தபட்ச சம்பளம்
- நேரத்தை வீணடிக்காமல் உயர்ந்த படிப்பு படித்து அதிக சம்பளம் வாங்க வேண்டுமென்ற
எண்ணமின்மை
- திரைப்பட நடிகர்களை / நடிகைகளை ஆராதனை செய்து நேரத்தை வீணடித்து, திரைப்படம்
பார்த்து, மீண்டும் மீண்டும் அதே ஆராதனையை தொடர்வது
- தங்களின் பொருளாதார பலவீன நிலையை சுத்தமாக மறந்து குழந்தைகளைப் பெற்றுக்
கொண்டே வருவது. அந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஏழை அவதாரம் கொடுப்பது.
- கடன் வாங்கி - மஞ்சள் நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், கல்யாணம் போன்ற செலவுகளைச்
செய்ய இந்த சமூகம் ஏழை மக்களை உளரீதியாக நிர்ப்பந்தப்படுத்துவது.
- மதுபானத்திற்கு அடிமையாவது

எனக் காரணங்களைப் பட்டியலிட்டுச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இதில் முக்கியமான தவறு என்பது தங்களின் பொருளாதார நிலையை மறந்து ஏழ்மையிலிருந்து மீண்டும் ஏழ்மைக்கு தங்களைத் தள்ளும் ஒரு தவறைத் திரும்பத் திரும்ப செய்வது தான். குடும்பக் கட்டுப்பாடின்றி தொடர்ந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தான் அந்தத் தவறு.

எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு தொடங்கியதன் பின்னர் குடும்பக் கட்டுப்பாடு பற்றின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்பு இருந்தது போல் இப்போதெல்லாம் ஏனோ காண முடிவதே இல்லை!

திருமணமானதும் கணவன் தான் ஒரு ஆணென்று நிரூபிக்கவும், மனைவி தான் ஒரு மலடியல்ல என்ற செய்தியை இந்தச் சமுதாயத்திற்குச் சொல்லவே குழந்தைப் பிறப்பு என்பதை ஒரு நிர்பந்தமாக்கி வைத்திருக்கிறார்கள்.

திருமணம் கண்டிப்பாய் எல்லோருக்கும் தேவை. திருமணத்திற்கு பிறகு மழலைச் செல்வங்களும் கண்டிப்பாய் தேவை. பொருளாதார அவல நிலையை மறந்து குழந்தைப் பெற்றுக்கொள்வதால் தான் இங்கே பிறந்து விழுந்ததும் "ஏழைக் குழந்தை" என்று முத்திரை இடப்படுகிறது. அந்தக் குழந்தை அங்கிருந்து அந்த முத்திரை அளிப்பதற்குள் படும் பாடுகள்...!
அதிகமும் ஏழையினம் அந்த முத்திரையோடே வளர்ந்து ஏழையாகவே வாழ்ந்து, இறந்துவிடுகிறார்கள்!

"ஐந்து பிள்ளை பெற்றால் அரசனும் ஆண்டியாவன்" என்றே கேட்டு பழகி வந்த நமது மக்கள் ஏன் இன்னமும் அதை உணர்ந்து கொள்ளவில்லை! இதற்கு தேவையான விழிப்புணர்வை இந்திய அரசு கொண்டு வந்து வெற்றி கண்டுள்ளாதா?

விஞ்ஞான வளர்ச்சி இவ்வளவாக வளர்ந்தும், இலவசமாய் அரசு மருத்துவமனைகள் கொடுத்தும், ஏன் ஆணுறை மற்றும் கர்ப்பத்தடை மாத்திரைகள் மக்கள் உபயோகப்படுத்துவதில்லை?

ஏன் பலரும் தேவைப்பட்டால் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை அதிகமாய் செய்ய முன் வருவதில்லை?

குடும்பக் கட்டுப்பாட்டின் விழிப்புணர்வை அரசு மட்டும் செய்தால் போதாது; நல்லெண்ணம் கொண்ட எல்லாத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் செய்ய வேண்டும்.

இந்திய நாடு வறுமையிலிருந்து வெளிவர வேண்டும்.

தோழமையுடன்
என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments