Wednesday, May 21, 2008

இறை இல்லம்

வெற்றிகளும் தோல்விகளும் சேர்ந்த இந்த வாழ்க்கையில் மாபெரும் வெற்றிக்கு முன் வநதுவிடும் சில தோல்விகளின் ரேகைகளைக் கண்டுதுமே மனமுடைந்து போய் சிலர் இப்போதெல்லாம் திடீரென்று ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுகிறார்கள்.

அது ஒரு நல்ல தீர்மானம் தான்!

என்ன அது ?

அனாதை இல்லம் அல்லது முதியோர் இல்லம் (அ/மு இல்லம்) ஒன்றை ஆரம்பிப்பிது என்பதே அது.

இதுபோன்ற நல்ல சில சிந்தனைகள் கவலைகளிலிருந்து வெளிவர ஓரளவிற்கு பலருக்கும் உதவி செய்கிறது என்பது உண்மை தான்!

தூரத்தில் எங்கேயோ ஒரு வெளிச்சம் தெரிய, அந்த நம்பிக்கையால், தற்போதைய இருளான வாழ்க்கையைக் கண்டு பயந்து போகாமல், அந்த தூரத்து வெளிச்சம் நோக்கி, தங்களின் வாழ்க்கையை அழிக்காமல், ஒரு இனிய பயணத்திற்கு இது போன்ற நல்ல சிந்தனைகள் பலருக்கும் வாழவேண்டும் என்ற ஓரு ஆசையின் பாதையை இடத்தான் செய்கிறது.

ஆனால் மு/அ - இல்லங்கள் ஆரம்பிகக்வேண்டும் என்ற எடுத்த தீர்மானங்களை நிறைவேற்ற செல்லும்போது தான் அங்கிருக்கும் பிரச்சனைகள் பலவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.

உதாரணமாக முதியோர் இல்லத்தில் எந்நேரமும் நடக்க இருக்கும் அந்த முதியோர்களின் மரணமும் அதனால் அந்த இல்லம் ஆரம்பித்த நல்லவர்கள் சந்திக்ககூடும் பிரச்சனைகளும் கொடுமையானது.

முதியவர் ஒருவர் இறந்து போனதும் அவருடைய சில சொந்த பந்தங்கள் எங்கிருந்தோ திடீரென்று வந்து அதன் நிர்வாகிகள் மீது கொலைக்குற்றம் சுமத்தி அந்த (பல) நல்லவர்களுடைய வாழ்க்கையை காலத்திற்கும் நீதிமன்றத்திலேயே அநீதியாக்கப்படுகிறதைப் பற்றி என்னத்த சொல்ல!

குழந்தைகளுக்கு இல்லங்கள் ஆரம்பிக்க அதிக வேலை ஆட்கள் தேவை. அதிகமான பொருளாதாரமும் தேவை. பிள்ளைகள் வளர்ந்ததும் ஆண் பிள்ளைகளுக்கு/பெண் பிள்ளைகளுக்கு என தனித் தனியாக தங்கும் வசதிகள் செய்தாக வேண்டும். அதிகமும் பலர் இதை ஆரம்பத்திலேயே சிந்திக்காமல் செய்லபடத்துவங்கி திடீரென்று ஐயோ இனி என்ன செய்வது என்று மண்டையைப் போட்டுக் குடைவார்கள். பாவம் இவர்கள் மண்டைகள் தான் என்ன செய்ய முடியும்:-)

இப்படியாக மு/அ -இல்லங்கள் ஆரம்பிக்க/ஆரம்பித்தால், தொல்லைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஒரு திட்டத்தின் செலவுகள் பொதுவாக அதைவிட அதிகமாவது இயற்கை. ஆனால் நிர்பந்தமாக உதவ வந்தவர்களில் பலர் வெறும் பத்தே பத்து இந்திய ரூபாய்கள் கொடுத்துவிட்டு பத்தாயிரம் கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்டுச் செல்ல, இதை ஆரம்பித்தவர்களின் நிலை யாருக்கும் யூகிக்கக் கூடும்.

இதனால் தான் பல மு/அ இல்லங்களும் ஆரம்பித்த சில நாட்களிலேயே மூடப்பட்டு விடுகின்றன!

புண்ணியம் கிடைக்க வேண்டும், சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைக்க வேண்டும், மனதிற்கு ஒரு திருப்தி கிடைக்க வேண்டும் என்றெல்லாம் சுயநலம் மட்டும் மனதின் முன் வரிசையில் நிற்க, அற்பணிப்பு மனோபாவாம் அதிகமும் இல்லாமல், இது போன்ற நற்பணிகள் செய்ய முன் வருவோருக்கு ஏமாற்றத்தைத் தவிற வேறென்ன கிடைக்கக் கூடும்?

வாழ்க்கையில் இப்போது தோல்வியில் இருப்பவர்கள் அந்த தோல்வியிலிருந்து அடுத்த மாபெரும் வெற்றிக்கு செல்வது எப்படி என்று யோசிக்க வேண்டுமே தவிற அந்த சிந்தனையை ஓர் மு/அ - இல்லம் ஆரம்பிக்க வேண்டுமென்ற ஒரு சிமிழுக்குள் மட்டும் அடைப்பது நிச்சயமாக கவலையைத் தவிற வேறென்ன தரக்கூடும்? இருப்பினும், உறுதியாக இருப்பவர்களுக்கு அவர்கள் வெற்றி பெற என் இனிய வாழ்த்துக்கள்!

பிள்ளைகள் பிறப்பதற்கு அவர்கள் காரணமா?

பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு செலவுகள் செய்வதெல்லாம் அவர்கள் மீது எறிகின்ற எதிர்பார்ப்பின் முதலீடுகள் என்பதால் தான் அதிகமும் இப்போதுள்ள முதியோர்களுக்கு இந்த நிலை என்பது மறுக்கமுடியாத உண்மை என்றாலும் தங்களுக்கும் வயதாகும் என்ற உணர்வோ, பெற்றெடுத்த தெய்வங்களை இப்படி அநாதைகளாக விட்டு விடுவது தவறென்ற புரிதலோ இந்த காலத்தில் பலருக்கும் இல்லை என்பது மிக மிக வருத்தமானதோர் உண்மைச் செய்தி.

முதியோர்களை மு-இல்லத்தில் விட்டு வீடு திரும்ப, இதில் பல மருமகன்களுக்கும் மருமகள்களுக்கும் அப்படி ஒரு சந்தோஷம், என்பது தான் வயிற்றெரிச்சலாக உள்ளது! அடப்பாவிகளா, உங்களை இறைவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். திருந்திவிட காலம் இனியும் உண்டு. விரைவில் உங்கள் வீட்டு தெய்வங்கள் இனிமேலும் அநாதைகள் அல்ல என்ற உண்மையை மனதிற்கொள்ளுங்கள் என்ற நமது கருத்தை அந்த அறிவுஜீவிகளிடம் எப்படி சொல்ல முடியும். மனம் ஆதமா எல்லாம் மறுத்துப்போன இதுகளுக்கு காது மட்டும் கேட்குமா என்ன?

மகன்கள்=மகள்கள் இவர்களின் நிலையும் இது தன்!

அநாதை என்றால் நாதியற்றவன் என்று பொருள், இன்னொரு மனிதன் உயிரோடு இருக்கையில் எப்படி ஒருவன் அநாதை ஆக முடியும்?
அதனால் அனாதை இல்லங்களுக்கு "இறைவனின் இல்லம்" என்று பெயரிடலாம் என்று தோன்றுகிறது.

லண்டன், ஜப்பான் போன்ற நாடுகளில் அரசே அ/மு இல்லங்களை நடத்தி சிறப்பான சேவைகளை செய்து வருகிறது என்று கேள்விப்பட்டேன். இந்தியாவில் இருக்கும் 110 கோடி மக்களுக்கு இந்த திட்டமென்றால் சிதம்பரம்-அங்கிள் (சினாதானா ஐயா) எப்படியெல்லாம் அடுத்த பட்ஜட்டில் குழப்புவார் என்று யோசிக்கக் கூட முடியவில்லை:-).

பிள்ளைகளை நேசித்து வளர்க்கும் பெற்றோர்கள், தங்களின் வருமானத்தின் ஒரு பகுதியை சேமித்து வைத்து வயதாகும் காலத்தில் எப்படி வாழ்வது என்று திட்டமிட்டால், எதிர்பார்ப்புகள் இல்லாமல் தங்களின் மனநிலையை மாற்றி அமைத்தால், வருங்காலத்தில் முதியோர் இல்லத்து வாசல்களை மிதிக்க வேண்டின கொடுமையை தவிற்கலாம்.

வருமானமே இல்லை, என்ன செய்ய ? - எனும் ஏழை மக்களுக்கு "இந்திய நிஜமாகவே ஒரு நாள் ஒளிரும்" என்ற நம்பிக்கையைக் கொடுத்து ஏமாற்றுவதைத் தவிற இப்போது நானும் நீங்களும் என்ன சொல்ல முடியும்?

வைரங்களை கொட்ட இன்னொரு குப்பைத்தொட்டி ஏன்!

முதியோர்/குழந்தைகள் இல்லங்கள் சமூகத்திற்கு மாபெரும் அசிங்கமே!

இருக்கும் முதியோர் இல்லங்களை ஒழுங்காக நடத்த, எல்லோரும் முன்வந்து உதவுங்கள், வாழ்த்துக்கள். அங்கிருக்கும் தங்களின் தாயையும் தகப்பனையும் வீட்டிற்கு கொண்டுபோய் அன்போடு சில காலம் சேவை செய்யுங்கள். ( கவலைப்படவே வேண்டாம்! அந்த முதியோர்கள் வாழ்ந்த காலங்கள் இனி வாழப்போவதில்லை! ) புதிய முதியோர் இல்லங்கள் வருவதை தடுக்க குடும்ப தெய்வங்களை வீட்டிலேயே வைத்து சேவை செய்யும் நல்ல உள்ளம் எல்லோருக்கும் மலரட்டும் என்று இணயதளம் வழியே நாம் எல்லோரும் பரப்புரை செய்வோம், அதன்படி நாமும் நடந்துகொள்வோம், அதற்காக வாழ்த்துவோம், பிரார்த்தனைகள் செய்வோம்!

சரி... இன்னும் 15-20 வருட காலத்திற்கு பின்னர் நானும் எனது மனைவியும் முதியோர் இல்லத்திற்கு சென்று தான் ஆகவேண்டும்!
ஏனெனில் எங்களுக்கு பிள்ளைகள் இல்லயே!

ததும்பும் தோழமையுடன் என் சுரேஷ்

14 comments:

சாம் தாத்தா said...

அன்பு சுரேஷ்!

உங்களின் பதிவுகளிலேயே என்னை மிகக் கவர்ந்த, மனதைத் தொட்ட பதிவு இதுதான்.

//சரி... இன்னும் 15-20 வருட காலத்திற்கு பின்னர் நானும் எனது மனைவியும் முதியோர் இல்லத்திற்கு சென்று தான் ஆகவேண்டும்!
ஏனெனில் எங்களுக்கு பிள்ளைகள் இல்லயே!//

இந்த வரிகள் எனக்குக் கண்ணீரை வரவழைத்த வரிகள்.

உங்களுக்காவது உங்களுடன் உடன் வர மனைவி என்றொரு உயர் ஆத்மா உண்டு.

என்னைப் போன்ற தனிக் கட்டைகளின் நிலையை எண்ணும்போது, கண்ணீர் அதிகமாகிறது.

அத்தனை உயிர்களும் அவன் ஒருவனை நம்பி மட்டுமே.

அந்தத் தெம்பில்தான் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியுள்ளது.

N Suresh said...

அன்புள்ள சாம் தாத்தா,

உங்களுக்கென்ன கவலை? உங்களுக்கு நாங்கள் இருக்கிறோமே!

பாசமுடன்
உங்கள் பிள்ளைகள்
நானும் என் மனைவியும்
மகனும் மருமகளும்

அன்புடன் அருணா said...

//சரி... இன்னும் 15-20 வருட காலத்திற்கு பின்னர் நானும் எனது மனைவியும் முதியோர் இல்லத்திற்கு சென்று தான் ஆகவேண்டும்!
ஏனெனில் எங்களுக்கு பிள்ளைகள் இல்லயே!//

பிள்ளைகள் இல்லாதவர்கள்தான் முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள் என்றா நினைக்கிறீர்கள்????அட அப்படி இல்லைங்க...நீங்கள் ஏன் முதியோர் இல்லம் செல்ல வேண்டும்?..நீங்களே ஒரு இறை இல்லம் நடத்தினால்....???நீங்கள் ஆயிரம் பேருக்கு அப்பா அம்மா......
சாம் தத்தா...இந்த உலகில் யாருமே தனிக் கட்டை கிடையாது....உங்களுக்கே தெரியாது நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் மனித மனங்களை பற்றி.....அவை உங்களுடன் வரும்...
அன்புடன் அருணா

Anonymous said...

ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் என்றெல்லாம் ஆரம்பிக்கும் முன்பாக
பலமுறை யோசித்து செயல்படவேண்டும்.

துவங்குவது எளிது. தொடர்ந்து செயல்படுத்துவது
கடினம்.


புதிய இல்லங்களைத்தொடங்குவதைவிட ஏற்கனவே நல்லமுறையில் இயங்கிவரும்
இல்லங்களுடன் தொடர்புகொண்டு, அவை மேன்மேலும் சிறப்பாக இயங்க வழிவகை
செய்வது சிறப்பானது.


ஒரு குதிரையை தூக்கிக்கொண்டு ஓடுவதைவிட
ஏறகனவே ஓடிக்கொண்டிருக்கும் குதிரைமேல் ஏறிப்போவது நல்லது தானே!


அன்புடன்
மு.குருமூர்த்தி

Anonymous said...

அன்புத்தம்பி சுரேஷ்,

அருமையான, சமுதாயத்தில் ஆழப்பதிந்துள்ள, ஒரு விடயத்தை விதைத்துள்ளீர்கள்,
விளைச்சல் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.


மற்றும் நண்பர் குருமூர்த்தி, நட்சத்திரா, தமிழ்த்தேனி ஆகியோரின்
அற்றலுடன் கூடிய அனுபவ மொழிகள் நிச்சயம் இக்கருத்துக்கப்பலை நன்கு
செலுத்தும் என்பது நிச்சயம்.


அன்புடன்
சக்தி

Anonymous said...

> சரி... இன்னும் 15-20 வருட காலத்திற்கு பின்னர் நானும் எனது மனைவியும்
> முதியோர் இல்லத்திற்கு சென்று தான் ஆகவேண்டும்!
> ஏனெனில் எங்களுக்கு பிள்ளைகள் இல்லயே!



அண்ணா என்ன இது?..

மற்றபடி கட்டுரை அருமை...நல்ல அறிவுறைகள்..


நானும் அப்படித்தான் நினைத்துள்ளேன் வயதான காலத்தில் முதியோர் இல்லம் சென்று
பொழுதுபோக்க...


, பிள்ளைகளுக்கு தொந்தரவு தராமல்..:-)))


சாந்தி
--

Anonymous said...

இது ஒரு நல்ல முடிவுதான் என்றாலும் என் போன்ற பிள்ளைகள் தங்கள் பெற்றோரைக்
கடைசிக் காலம் வரை வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமுடையவர்களை
விட்டு நீங்களாக முதியோர் இல்லம் சென்று விடாதீர்கள்.


எனது எண்ணமெல்லாம் இதுதான்.


ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அதனுடைய வாலிபப் பருவம் வரும்வரை (0 - 25 வயது
வரை) பெற்றோர்கள் என்னென்ன செய்தார்களோ, அவற்றை அப்படியே பின்வரிசை முறையில்
குழந்தைகள் பெற்றோருக்கு (50 - ... வயது வரை) செய்ய வேண்டும். சிந்தனை
செய்தீர்களானால் இதன் உண்மை விளங்கும், நான் என்னென்ன எனது பெற்றோர்களிடம்
செய்தேனோ அதே போல் எல்லாமே எனது பெற்றோர்கள் என்னிடம் செய்வார்கள், என்ன ஒன்று
தலைகீழாக இருக்கும். நான் சாப்பாடு வேண்டாம் என்று அடம் பிடித்தது போல கடைசி
காலத்தில அவர்கள். நான் இந்த இடத்தில்தான் இருப்பேன், இவளைத்தான் காதலிக்கிறேன்
என்று அடம் பிடிப்பது போல கிட்டதிட்ட ஒரு 55 வயதிலிருந்து 65 வயது வரை நான்
இங்கேதான் இருப்பேன், நான் முதியோர் இல்லம் செல்வேன் என்று அடம்பிடிப்பார்கள்.
இவற்றையெல்லாம் பிள்ளைகள் பொறுத்துக் கொள்ளதான் வேண்டும். ஏனெனில் இவையாவும்
நாம் அவர்களிடம் செய்ததுதான்.





-

Anonymous said...

இது ஒரு நல்ல முடிவுதான் என்றாலும் என் போன்ற பிள்ளைகள் தங்கள் பெற்றோரைக்
கடைசிக் காலம் வரை வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமுடையவர்களை
விட்டு நீங்களாக முதியோர் இல்லம் சென்று விடாதீர்கள்.


எனது எண்ணமெல்லாம் இதுதான்.


ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அதனுடைய வாலிபப் பருவம் வரும்வரை (0 - 25 வயது
வரை) பெற்றோர்கள் என்னென்ன செய்தார்களோ, அவற்றை அப்படியே பின்வரிசை முறையில்
குழந்தைகள் பெற்றோருக்கு (50 - ... வயது வரை) செய்ய வேண்டும். சிந்தனை
செய்தீர்களானால் இதன் உண்மை விளங்கும், நான் என்னென்ன எனது பெற்றோர்களிடம்
செய்தேனோ அதே போல் எல்லாமே எனது பெற்றோர்கள் என்னிடம் செய்வார்கள், என்ன ஒன்று
தலைகீழாக இருக்கும். நான் சாப்பாடு வேண்டாம் என்று அடம் பிடித்தது போல கடைசி
காலத்தில அவர்கள். நான் இந்த இடத்தில்தான் இருப்பேன், இவளைத்தான் காதலிக்கிறேன்
என்று அடம் பிடிப்பது போல கிட்டதிட்ட ஒரு 55 வயதிலிருந்து 65 வயது வரை நான்
இங்கேதான் இருப்பேன், நான் முதியோர் இல்லம் செல்வேன் என்று அடம்பிடிப்பார்கள்.
இவற்றையெல்லாம் பிள்ளைகள் பொறுத்துக் கொள்ளதான் வேண்டும். ஏனெனில் இவையாவும்
நாம் அவர்களிடம் செய்ததுதான்.

அன்புடன்,
பாஸ்கர் (எ) ஒளியவன்.

Anonymous said...

அன்பினிய பாஸ்கர்,


கடைசி வரைக்கும் உங்களுடைய தாய், தந்தை இந்த இருவருக்கும் அன்பை
செலுத்துவீர்கள் என்று அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். வயதானால்
தாய் தந்தையரின் மனநிலைக்கேற்ற படி நடந்து கொள்வேன் என்ற உங்களின் புரிதலும்
பாரட்டிற்குறியது.


எல்லோரும் பாஸ்கரைப் போல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று
தோன்றுகிறது.


ஒன்று சொல்ல விரும்புகிறேன். மு-இல்லத்திற்கு செல்லாமல், அடிமையாக கொடுமைகள்
அனுபவித்து வெளியே புன்னகை செய்யும் பல முதியோர்களை உலகமெங்கும் பார்க்கலாம்.
அவர்களுக்கு முதியோர் இல்லமே மேல் !


பாஸ்கரைப் போன்றே எல்லோரும் தங்களுடைய தாய், தந்தை என்ற கண்கண்ட தெயவங்களை
கடைசி வரைக்கும் அன்போடு நேசிப்போம் என்ற உறுது மொழி எடுக்க எனது
பிரார்த்தனைகள்.


பாசமுடன் என் சுரேஷ்

Anonymous said...

அன்புள்ள நண்பர் சுரேஷ் ஐயா,


பல முறை யோசித்துத்தான் எழுதியிருப்பீர்கள் என் நினைக்கிறேன். மிக அருமையான
எண்ணங்கள். கடைசி வரிகள் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.


உங்களுக்கென்று பிள்ளைகள் இல்லாததை நினைத்து வருத்தப்படாதீர்கள். "எது
நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது" என்னும் கீதாசாரம் போல்,
எல்லாம் வல்லவன் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கிறான்.
இன்றைய மேம்பட்ட மருத்துவ-விஞ்ஞான உலகில் எல்லாவிதமான முயற்சிகளும்
செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.


ஒருவேளை உங்களைப்போன்ற நல்ல உள்ளம் படைத்த ஒருவரால் வளர்க்கப்படவேண்டும்
என்பதற்காக எங்கோ ஓர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் போலும்.


இறுதி நாட்களில் மு. இல்லம் செல்வதற்கு பதிலாக, கடைசி வரை
உங்களை ஆதரிக்கும் படியாக மேற்சொன்ன உயிரைத் தேடுங்கள்.
உங்கள் பிள்ளையாக வளருங்கள்.


இது அறிவுரை இல்லை ஐயா. உங்கள் மேல் உள்ள நட்பும் பரிவும் தான் என்னை இந்த
பினூட்டம் இட தூண்டியது. தவறானால் இந்த மடலை நீக்கிவிட்டு மன்னித்து விடுங்கள்.


(ஜப்பார் ஐயா, பாலன் ஐயாவுடன் இணைந்து எங்கோ இருக்கும் ஒரு உடலூனமுற்ற ஒரு
உயிருக்குப் பரிந்து பரிந்து சேவை செய்த உங்களை இறைவன் இறுதிக்காலத்தில்
நன்றாகவே வைத்திருப்பான்.)


அன்புடன்,
குமார்(சிங்கை)

Anonymous said...

நன்றி சுரேஷ் அண்ணா. உங்களது வாழ்த்துகள் என்னை இன்னும் வலிமையானவனாக்குகிறது.


எனக்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்கும் எனது பெற்றோர் என்னிடம் எப்படிப் பட்ட
பெண் வேண்டும் எனக் கேட்டதற்கு ஒன்றே ஒன்றுதான் கூறினேன். என்னைப் பார்த்துக்
கொள்ளாவிட்டாலும் உங்களைக் கடைசி வரை தனது பெற்றோரைப் போல் கவனித்துக் கொள்ளும்
பெண்ணைப் பாருங்கள், அப்படியே அந்த பெண்ணிடம், உனது தாய், தந்தையரை எனது மகனும்
இறுதி வரை நன்றாக பார்த்துக் கொள்ளுவான் என்று வாக்களியுங்கள் என்றேன்.
ஏனென்றால் வந்து சேர்கின்ற மனைவி சரியில்லையெனில் வாழ்க்கை நரகமாகிவிடும். இந்த
தத்தளிப்பில் பல பேர் பெற்றோரை ஒதுக்கி இருக்கிறார்கள். பல பேர் தனது சுயநலம்
ஒன்றிற்காகவே ஒதுக்கி இருக்கிறார்கள். எனக்குத் தேவையெல்லாம் என்னை வளர்த்தது
போல் எனது குழந்தைகளையும் எனது பெற்றோர்கள் சிந்தனை உள்ளவர்களாக வளர்க்க
வேண்டும், நான் அவர்களுக்கு அனைத்துப் பணிவிடைகளும் செய்ய வேண்டும். என்னை
எப்படி எப்படியெல்லாமோ நல்ல முறையில் வளர்த்துவிட்ட அந்த தெய்வங்களுக்கு எனது
மரியாதை இதுவாகத்தான் இருக்கக் கூடும்.


அன்புடன்
பாஸ்கர்

Anonymous said...

விரைவில் உங்கள் திருமணம் நடந்தேறப் போவதை அறிந்து மகிழ்கிறேன். அட்வான்ஸ்
வாழ்த்துக்கள், தம்பி.


நாம் பேசி வந்ததிலிருந்து கொஞ்சம் திசை திரும்புகிறது இனி நான் எழுதும் மடல்.
அன்புத் தம்பி,


தாய் தகப்பனை நன்றாக பார்க்கும் ஒரு மருமகள் கண்டிப்பாக ஒரு குடும்பத்திற்கு
தேவை தான்.
ஆனால் இதை மட்டும் முன்நிலை படுத்துவதில் கொஞ்சம் மென்மையை கடை பிடிக்க வேண்டி
உள்ளது.


எல்லா சொந்தங்களையும் (அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள், தாத்தா பாட்டி, அத்தை
மாமா, நண்பர்கள்) என எல்லோரையும் விட்டு உங்களை மட்டும் மனதிற்கொண்டு
வரப்போகும் மனைவியின் மனநிலையிலிருந்து கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.


அவர்களுடைய உணர்வுகளுக்கு நிச்சயம் உயர்ந்த மரியாதையை கொடுக்க வேண்டும்;
கொடுத்துத் தான் ஆக வேண்டும்.


தாய் தந்தையரையும் மனைவியையும் சேர்த்து ஒன்றாக ஒரு குடும்பமாக அமைத்து
வாழ்க்கைத் தொடர நிறைய பொறுமை வேண்டும். இளம் வயது முதல் தியானம் போன்ற
பயிற்சிகளை செய்தல் இதற்கு மிகவும் உதவும்.


எல்லாவற்றிற்கும் மேல் மனைவி என்பவள் ஒரு கணவனின் தாய் தந்தையருக்கோ அல்லது
குடும்பத்தாருக்கோ சேவை செய்ய வருபவளாக மட்டும் பார்க்காமல் அவர்கள் எல்லோருடைய
அன்பைத் தேடி வந்தவர்களாக உணர்ந்து அபரிமிதமான அனபைப் பொழிந்த பின்னர்
பாருங்கள் அன்பே சிவம், இறைவன் அன்பாகவே இருக்கிறார் என்று உணர்வீர்கள். அன்பை
பெற கட்டளைகளே வேண்டாம் அதற்கு வெற்றியின் காலம் சிறிதே. அன்பை தொடர்ந்து பெற,
நாம் அளவில்லாமல் தன்னலமின்றி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.


அன்புத் தம்பி பாஸ்கரிடம் அன்பு அளவின்றி இருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!


உங்களுடைய திருமணத்தைக் கண்டு ஆசீர்வதிக்கும் கூட்டதில் ஒருவனாக நானும்
இருப்பேன், தம்பி


சந்தோஷமுடன் / பாசமுடன்
என் சுரேஷ் அண்ணன்

Anonymous said...

நேற்று என்பது இல்லை. நாளை என்பது கனவு. இன்றைய தினத்தை
எப்படி பயானுள்ளதாக ஆக்குவது - அனுபவிப்பது என்று மட்டும்
எண்ணுங்கள். எல்லா முடிவுகளையும் நீங்கள் எடுக்காதீர்கள்;
இறைவனுக்கும் கொஞ்சம் விட்டு வையுங்கள். அன்புடன் சட்.அப்.ஜப்.

Anonymous said...

அன்பு நண்பர் சுரேஷ்,


உங்கள் மடலைக் கண்டவுடன் என் கண்களிலும் கண்ணீர் துளித்தது. இப்படிபட்ட நல்ல
உள்ளம் உடைய உங்களுக்கு இறையருளால் எல்லாமே நன்றாக நடக்கும்.


பிகு. எனது பெயர் :K.R.குமார் (Krishnamurthy Ram Kumar) .
அடியேன் சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக வசிப்பதால் மடல்களில்
குமார்(சிங்கை) என் கையெழுத்து இடுவேன்.


அன்புடன்,
குமார்(சிங்கை)

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments