Friday, May 30, 2008

பூமாலை



கடந்து போனவள்
உனை மறந்து
மகிழ்ச்சி வானத்தில்
பறந்துகொண்டிருக்கிறாள்!

சகபயணி என் தம்பி நீயோ
கவலைக்கடலில்
வானத்தைப் பார்த்தபடி!
இது சரியோ?

ஓடி ஓடிச் சென்றாய் நீ - ஆனால்
உனை விட்டுப் பறந்து சென்றது அந்த இரயில்!
இதனால் வேதனை ஏனோ இன்னும் உன்னில்?

கவலையை விடு!
அடுத்த இரயில்
உனக்காகவே வந்து கொண்டிருக்கிறது!

உனைத் தேடி வரும் இரயிலில் பயணிப்பது
தண்டவாளத்தில் தலைவைப்பதை விட மேல்!

எதையும் எப்போதும் எப்படியும்
சொல்லும் இந்த உலகம்
உன்னை ஒரு நாள் புத்தியுடன் வாழ்த்தும்
கொஞ்சம் பொறு என் கறுப்புத் தங்கமே
விரைவில் நீ ஓர் அழகிய ஆபரணமாகிவிடுவாய்!

உந்தன் கவிதையின் அழகை ரசிப்போர் சிலர் -ஆனால்
உந்தன் கவிதையின் கவலைகளில் கரைபவன் நான்!

நீ எழுதும் கவிதைகள் உனது கவலைகளை
வெளியேற்றுவதாய் சொல்கிறாய்
அது உந்தன் இதயத்திலிருந்து சுரக்கும்
இரத்தத்தால் எழுதப்படுகிறதென்று
ஏனோ அறியாமல்!

உந்தன் கவிதைகளுக்கும் நீ
புத்தாடையும் புத்துணர்வும் கொடு
புதிய மனிதனாய் நீ மீண்டும் இவ்வுலகைப் பார்!

காதலும் இரயிலும் ஒன்றா? - என்போரிடம்
"வாழ்க்கையே ஓர் இரயில் பயணம்" - என்று
புன்னகையோடு சொல்!

சித்தனென்று இவ்வுலகம்
உந்தன் காலில் விழும்
அந்த கூட்டத்தில் அவளும் இருப்பாள்
"மன்னிப்பு" என்ற பேராயுதத்தால்
அவளையும் அன்போடு தண்டித்து விடு!

அமைதி நிச்சயம்
என் தம்பி உனக்கு - அதனால்
மகிழ்ச்சி எனக்கும் நம் இல்லத்தாருக்கும்!

எந்தன் கண்ணீர் மட்டும்
உந்தன் மனக்காயத்திற்கெல்லாம்
மருந்தாக மாறியிருப்பின்
என்றோ தேறியிருப்பாய்
என் அன்புத் தம்பியே நீ!

அன்புடன் ஓர் செய்தி, என் தம்பி!
இதற்குமேலும் நீ மாறவில்லை எனில்
உனை மாற்ற நீ முயற்சிக்கவில்லை எனில்
உனை நினைத்தே உருகி உருகி உறங்குமென்னை
விரைவில் ஒரு பூமாலையோடு நீ சந்திக்ககூடும்!
நான் எங்கிருந்தாலும்
உந்தன் மகிழ்ச்சியை மட்டும்
காணத்துடிக்கும்
பாசமுடன் உன் அண்ணன்
என் சுரேஷ்

Thursday, May 29, 2008

விமர்சனம் - அன்புள்ள அம்மாவிற்கு....!!!!

vishalam raman: wrote:
//அன்பு சுரேஷ் எந்தப் புத்தகத்தைப் பற்றியும் சிறப்பு அம்சங்கள் கூறினால் அது விமர்சனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் ,விமர்சனம் என்றால் என்ன ? நான் அந்தச் சொல்லைக் குறிப்பிட்டது தவறானால் தயவு செய்து
மன்னிக்கவும்
அன்புடன் விசாலம்//


அன்புள்ள அம்மா,

தலையில் ஒரு அடி அடித்து "சொல்லுடா" என்றால் சொல்பவன் என்னிடம் (மன்னிக்கவும் போன்ற) பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்வதை கேட்க எனக்கு ரொம்ப சங்கடமாக இருக்கு.

விமர்சனம் - என்பதைப் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரியும். இருந்தாலும் தனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு பாடலை தன்னுடைய மகன் எப்படித் தான் புரிந்து வைத்திருக்கிறான் என்ற ஒரு தாயின் உணர்வை உங்களுடைய கேள்வியில் இருப்பதைக் கண்டு அதை மதிக்கிறேன். அதனால் இந்த சின்னப்ப்யலுக்கு தெரிந்தவைகளை எழுதுகிறேன். சிரிப்போடு கேளுங்கள்... :-)
தவறுகளிருப்பின் எனது மண்டையில் கொட்டுங்கள்:-)
அம்மா, விமர்சனம் என்பதைப் பற்றி நான் இப்படித் தான் புரிந்து கொண்டிருக்கிறேன்:
ஒரு சினிமா பார்த்து வந்து ஒருவன் தனது ஒரு வரி கருத்தை சொன்னால் அது ஒரு முழுமையான விமர்சனம் ஆகாது. ஏனென்றால் 18 வயதுள்ள ஒருவன் அதிலிருக்கும் சண்டைக் காட்சியை ரசித்த மயக்கத்தில், படம் "சூப்பர் போங்க" என்பான். இசை மீதிருக்கும் ஆர்வத்தில் ஒருவேளை அதில் நல்ல பாடல்கள் இருந்தால், "அம்மா அது நல்ல படம்" என்று நான் கூறக்குடும். சீரியலில் நடித்து வரும் எனது தம்பியை கேட்டால் அவனுக்கு பிடித்த நடிகரை பாராட்ட அந்த படம் ஆகா ஓகோ என்பான். கவலையில் இருக்கும் ஒருவன் ஒரு படம் பார்த்து அந்த படம் எப்படி இருந்தாலும் அதை "நாசமான பாடம்" எனக் கூற வாய்ப்புண்டு.

எதையும் திட்டுவோம் என்று சபதம் எடுத்து வாழ்பவர்கள், குற்றங்களை மட்டும் தங்கள் பார்வைகளில் பதித்துக் கொள்கிறவர்கள், மற்றும் அறிவாளிகள் என்று தங்களை நினைத்துக் கொண்டு உளருகிறவர்கள், குற்றம் கண்டு பிடித்தே புகழ்தேடும் பாவங்கள் மற்றும் ஒரு துறையிலும் தேவையான ஒரு தகுதியும் இல்லாதவர்கள், ஒன்றும் புரியாததால் சும்மா பாராட்டித்திரிபவர்கள், என்ற கூட்டத்தார் எல்லாம் சொல்லும் கருத்துக்கள் ஒரு விமர்சனமாக முழுமையடைவதில்லை.

விமர்சனத்தைப் பொறுத்த வரையில் இதே நிலை தான் புத்தங்களானாலும் சரி, மற்றும் இயல் இசை நாடகம், அரசியல், விளையாட்டு, சமூகம் என எதுவாக இருந்தாலும் சரி! வெறும் கருத்துக்கள் என்பது வேறு; விமர்சனம் என்பது வேறு. இரண்டிற்கும் அப்படி ஒரு அபார தூரம்!

விமர்சனம் எழுதுபவன் எந்த ஒரு முன் தீர்மானங்களின் கண்ணாடியையும் அணிந்து கொண்டு எழுத ஆரம்பிக்கக் கூடாது.

குறிப்பிட்ட துறையில் சிறந்த அல்லது அடிப்படையானவைகளில் ஓரளவிற்கு முன் அனுபவமும், அலசி ஆறாய்கின்ற அறிவும், தொலைநோக்குப் பார்வையும், சுயசிந்தனையில் சிறப்பும், தன்னுடைய விமர்சனத்தை எப்படியெல்லாம் மற்றவர்கள் விமர்சிப்பார்கள் என்ற யோசனையும், நல்ல ரசிப்புத்தன்மையும், சமூகப்பொறுப்பும் ...என நீண்ட பல தகுதிகள் இருப்பவராக ஒருவர் இருந்தால் தான் அவர் ஒரு நல்ல விமர்சனத்தை படைக்க முடியும். ஆம்! விமர்சனமும் ஒரு படைப்பு தான்! மிகவும் கஷ்டமான ஒரு படைப்பு!

உதாரணத்திற்கு: சலங்கை ஒலி என்ற படத்தில் " பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்" என்ற ஒரு பாடல் வரிக்கு காண்பித்த முக பாவனைகள், நர்த்தனம் இவை இரண்டும் எப்படியெல்லாம் தவறென்று அந்த படத்தில், சிறந்த ஒரு கலை விமர்சகனாக எழுதிக் கிழிப்பதோடு, ஆடியும் காட்டுவார், அதில் ஒரு கலை விமர்சக பத்திரிகை நிருபராக வரும் கமலஹாசன். (அதற்காக எல்லா நல்ல விமர்சகர்களும் அப்படியே செய்ய வேண்டுமென்று சொல்ல வரவில்லை:-) சன் டிவியில் டாப் டென் போன்ற நிகழ்ச்சிகளின் கொடுமையே தாங்க முடியல:-) இதில் அந்த நபர் நடித்து, நாட்டியமாடி, ஜோக்கடித்து நேயர்களை நோயாளிகளாக்கும் கொடுமைகள் வேண்டாம்:-)

அதே கலை விமர்சகர் ( கமலஹாசன்) அந்த நாட்டியம் ஆடியவள் தன்னுடைய பழைய காதலியின் மகள் என்று அறிந்ததும் பாசம் என்ற பாசியில் விழுந்து "விமர்சகர்" என்ற அந்தஸ்தை இழந்து, ஆகா! ஓகோ என்ற அந்த நாட்டியத்தை பாராட்டுவார். இந்த பாரட்டு விமர்சனமாகுமா? இது கருத்து, அதுவும் முட்டாள்த்தனமான கருத்து, பாசத்தின் வெளிப்பாட்டில் மலர்ந்த பொய்!

அம்மா, சங்கீதத்தில் நல்ல ஈடுபாடுள்ள உங்களுக்கு நம்ம சுப்புடு மாமவைப் பற்றி தெரியும். அவருடைய விமர்சங்களின் பலமும் பலவீனமும் பற்றித் தெரியும்.

இங்கே நான், காற்று வெளியினிலே... என்ற புத்தகத்தை ஒரு விமர்சகனாக வாசிக்கவில்லை. என் அன்புடன் அப்பா எழுதின புத்தகத்தில் அவரின் அனுபவங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வாசித்த புத்தகமிது. . இதில் என் மனதில் இவரைப் பற்றின என்க்குத் தெரிந்த பல நல்ல முன் தீர்மானங்களை/புரிதல்களை மனதிற்கொண்டு தான் வாசிக்க ஆரம்பித்தேன். வாசித்த மகிழ்ந்ததை பகிர்ந்து கொண்டேன், மகிழ்ந்தேன். என் அன்புள்ள அப்பாவின் நல்ல குணங்களை பின்பற்ற வேண்டுமென்ற தீர்மானங்கள் எடுத்தேன். இப்படியிருக்க அந்த புத்தகங்களின் எழுத்துப்பிழைகள் சிலவற்றைத் தவிற ஒரு தவறும் என் பார்வைக்கு படவில்லை. படவும் படாது:-)

எல்லாவற்றிற்கு மேலாக அவருடைய அறிவிற்கும் அனுபவத்திற்கும் முன் நான் எந்த வகையிலும் அவருடைய புத்தகத்திற்கு கருத்துக்கள் கூட எழுத தகுதியில்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்து வைத்துள்ளேன். அதனால் விமர்சனங்கள் என்று எனது பகிர்வுகளை சொல்வதை நான் தாழ்மையோடு ஏற்கவில்லை, அவ்வளவு தான்.

அம்மா, இதோ எந்தன் தலை, நான் எழுதியதில் ஏதாவது தவறுகள் இருப்பின் என்னை நீங்கள் செல்லமாய் கொட்டலாம்.

பாசத்தால் கொட்டலாம் என்றால், இது கருத்து!

இதற்கெல்லாம் கொட்டுவது தவறு. இருப்பினும் அது இருவர்களுடைய மனதிற்கு ஏற்றது போல் என்பது விமர்சனம்!

இது தான் நடந்தது, என்பது பகிர்வு!!!

நன்றி வணக்கம்
பாசமுடன் என் சுரேஷ்

Monday, May 26, 2008

திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் எழுதின..காற்று வெளியினிலே...



உலகத் தமிழ் மக்கள் எல்லோருக்கும் திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்களை நன்றாகவே தெரியும். 1950 ல் சிறுவனாக இலங்கை வானொலியில் கால்ப்பதிவு. 1951 ல் ஆடிசன் இல்லாமலே நாடகத்திற்கு தேர்வு. 1962ல் இந்தியா திரும்பி, அகில இந்திய வானொலியில் விட்ட இடத்திலிருந்து தொடர்ச்சி. 1980 முதல் ஒலிபரப்பில் ஒரு புதியமுகம். கிரிக்கெட் நேர்முக வர்ணனை தமிழில். 1986 உலகக் கோப்பையின்போது பி.பி.சியில்,. 1999 உலகக்கோப்பை வர்ணனை லண்டன் 24 மணிநேர ஒலிபரப்பில் ஐ,பி.சி - தமிழில். 1993 ல் இலங்கை அரசு கலாச்சார அமைச்சரவையின் "பதுருல் மில்லத்" பட்டம் - விருது - பொற்கிழி. 1997 அகில இந்திய வானொலியின் சுதந்திர தின பொன்விழாவை ஒட்டி "மிகச்சிறந்த ஒலிபரப்புக் கலைஞன்" என்ற விருது. இலண்டன் ஐ.பி.சியில் வாரந்தோரும் தொடர்ச்சியாக "இந்தியக் கண்ணோட்டம்". இதுபோல லண்டன் தீபம் தொலைக்காட்சியில் "அரங்கம் - அந்தரங்கம்" நிகழ்ச்சி. நாடகம் இலக்கியம் - விளையாட்டு என்று தொடரும் இவரது கலைப்பணிக்கு வயது ஐபத்தி எட்டிற்கும் மேல்!

திரு அப்துள் ஜப்பார் ஐயா அவர்கள் "காற்று வெளியினிலே... என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மித்ரா ஆர்ட்ஸ் என்ற நிறுவனம், இந்த புத்தகத்தை 2003 டிசம்பர் மாதத்தில் வெளியிட்டுள்ளது.

அன்புக் கவிஞர் அறிவுமதியும், கலைமாமணி வி.கேடி பாலன் அவர்களும், அன்பு அறிவிப்பாளர் திரு பி.எச். அப்துல் ஹமீத் அவர்களும் இந்த புத்தகத்திற்கு அணிந்துரை, முன்னுரை எல்லாம் கொடுத்து வாசகரை அன்போடு வரவேற்கிறது.

" ஓவ்வொருவரையும் அவரவர் கலைத்துறையில் அவரவருக்கு நேர்ந்த அனுபவங்களை குறிப்பெடுத்து எழுதும்படி கேட்கப் போகிறேன், நாளை ஒரு சமயம் அந்தந்த துறைகளின் வளர்ச்சி - வீழ்ச்சிகளையும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்களிப்புகளையும் மதிப்பீடு செய்ய இது பெரிதும் உதவும், பிஸ்மில்லா நீ முதலில் துவங்கு" என்று முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் அவர்களின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள், தான் கடந்து வந்த பாதைகளை நினைவுபடுத்தி பார்த்துக் கொண்டே எழுத்துக்களால் வரைந்த நல்ல ஓர் ஓவியம் தான் இந்த காற்று வெளியினிலே... என்ற அழகிய புத்தகம்.

அதனால் இந்த புத்தகத்தில் ஒரு சுயசரிதையின் கொடுமையில்லை. திரும்பிப்பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு ஒருவன் கண்ட காணக்கூடாதவைகளின் தேவையற்ற அலங்கரிப்புகளுமில்லை.

மிக மிக மென்மையான கருத்தோட்டம். மிக அழகான தமிழ் - இவைகள் இரண்டும் இந்த அழகிய ஓவியத்திற்கு பேரழகான இரு கண்களாக அமைந்துள்ளது.

" நான் ஒரு நல்ல மகனாக இருந்தேன். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தேன் ஒரு நல்ல தந்தையாக - கணவனாக இருந்து வருகிறேன். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தும் மேல்படிப்புக்கு வசதி இருக்கவில்லை. கலை உலகிலும் கால் ஊன்றி இருக்கிறேன். தொழில் துறையிலும் நின்று பிடித்திருக்கிறேன். எளியவனாகவே இருக்கிறேன். என் உழைப்புக்கும், ஈடுபாடுக்கும் எங்கோ போயிருக்கவேண்டியவன். எனினும் கார்-பங்களா என்றில்லாவிட்டாலும் கடன் இல்லாத வாழ்வு - பசி இல்லாத வாழ்வு என்பது இன்று வரை எனக்கு கை கூடி வந்திருக்கிறது. அரசர்களோடு உலவும் - குலவும் வாய்ப்பிருந்தும் சாமன்யர்களோடு சரிசமமாகப் பழகும் பண்பு இன்றும் அன்றும் எனக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. கேரளத்தில் நாற்பத்தி இரண்டு காலம் நான்கு பெரிய நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்பிலிருந்தும், எந்த ஒரு காரணத்துக்காகவும் தொழிலாளர்கள் போராட்டக் கொடி உயர்த்தாமல் பார்த்துக்கொண்டது என் மனிதாபிமான அணுகுமுறைக்கு கிடைத்த பரிசு என்று நினைக்கிறேன்."

இந்த ஒரு பகுதி வாசித்தாலே திரு அப்துல் ஜப்பார் ஐயாவைப் பற்றி ஓரளவிற்கு யாருக்கும் யூக்கிக்கக் கூடும்.

இலங்கையில் இவரது சிறுவர் காலம் முதல் இளமைக்காலம் வரை நடந்த நிகழ்வுகளில் முக்கியமான நிகழ்ச்சிகள் பற்றி அதிகமாக வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார். அன்று முதல் கிடைத்த நண்பர்கள். நாடக அமைப்பு, நாடகத்தின் சில் தொழில்நுட்பங்கள் என பல சம்பவங்களையும் பல கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி நமது மனதில் பதிவு செய்கிறார்.

தன்னுடன் எந்த நிகழ்ச்சிகளானாலும் சரி, பங்கேற்கும் கலைஞர்களில் ஒருவன் எத்தனை சோப்ளாங்கியானாலும் சரியே அவனை தட்டிக் கொடுத்து அரவணைப்பார், ஒரு போதும் இவர் யாரையும் தட்டிக்கழித்து வேதனைப்படுத்துவதில்லை. இதனை ஒரு வாழ்க்கை நெறியாகவே இன்றும் கடைபிடித்து வருகிறார் திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் என்பதை இந்த புத்தகத்தில் அவர் எடுத்துச் சொன்ன பல நிகழ்ச்சிகளும் சாட்சி சொல்லி மகிழ்கின்றன.

நிறைய நாடகங்களை எழுதி நடித்துள்ளார். இவரது குடும்பத்தார்கள் (மனைவி, மகன், மகள்) எழுதின நாடகங்களிலும் நடித்துள்ளார். நாற்பது வருடங்களுக்கு மேல் கடினமாக உழைத்த பின்னர் தன்னுடைய பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்ததும் மீண்டும் ஊடகத்துரையில் தனது சேவைகளை தொடர்ந்து செய்து மகிழ்கிறார்.

இவர் சில சம்பவங்களைப் பற்றி எழுதி, தான் அப்போது கற்றுக்கொண்ட பாடங்களை வாசகரோடு பல இடங்களில் பகிர்ந்து கொள்கிறார். உதாரணமாக

" இருட்டறையில் அடைக்கப்பட்ட இருவருக்கு வெளி உலகைக் காண ஒரு சிறு துவாரம் மட்டும் இருந்தது. ஒருவன் கீழே தெரியும் சாக்கடையைப் பார்த்து "சீச்சீ இது என்ன உலகம்?" என்றான், மற்றவன் வானில் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து " ஆஹா என்ன அற்புத உலகம்" என்றான் "

பல வசிஷ்ட்டர்களின் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற இவர் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்த அனுபவங்களை பங்கு வைக்கும் வரிகள் ஒவ்வொன்றிலும் வாசகனை அந்த நிகழ்ச்சிக்கே நேரடியாக கொண்டு செல்லும் வண்ணம் இருக்கும்.

"உதாரணத்துக்கு ஒன்று: பழைய காதலன் அவனுடைய காதலியை சந்திக்கிறான். "நம் காதல் பிரகாசமாக ஒளிவிடும் என்று நினைத்தேன்" என்று சொல்லும்போதே சிகரட் லைட்டரை பற்ற வைப்பார், பிறகு "ஆனால்..." என்று ஒரு பெருமூச்சு விடும்போது அதை அணைக்க வேண்டும்"

என்ன அழகாக இந்த காட்சியை தன்னுடைய வார்த்தைகளால் எழுதி படம் பிடித்துள்ளார் என்று பாருங்கள்!

தன்னோடு வாழ்ந்த/பணிசெய்த பலரை குறிப்பிட்டு ரசிக்கிறார், கவலைப்படுகிறார், நன்றி தெரிவிக்கிறார்ர். அதில் திரு பிச்சையப்பா என்கிற ஒரு கலைஞனைப் பற்றி சொல்லும்போது " அந்த கலைஞனுக்கு என் உள்ளத்தில் ஏற்பட்ட மதிப்பு அவர் மாண்டு மறைந்து விட்டாலும் என் உள்ளதிலிருந்து என்றும் மாளாது - மாறாது - மறையாது" - என்கிறார்.

தனது காதலைப் பற்றி ஐயா குறிப்பிடுகையில்

"ஒரு நாள் மாலை ஒரு "பெர்த்டே" பார்டிக்கு வருமாறு எனக்கும் எனது நண்பன் மக்கீனுக்கும் சேர்த்துக் கடிதம் வந்தது. இருவரும் சென்றோம் வீட்டில் ஆள் ஆரவமே இல்லை. அந்தப் பெண் குறும்பாகச் சொன்னாள் "பேர்த்டே பார்ட்டி இங்கல்ல, வேறோர் இடத்தில். குடும்பமே போய் இருக்கிறது. நான் மட்டும் தனியே. துணையாக இருக்கத் தான் வரச்சொல்லி எழுதினேன்" என்றபோது இனம் புரியாத ஓர் உணர்வுக்கு ஆட்பட்டேன். ஆனால் எதையோ புரிந்து கொண்டது போல், " சரி இருவரும் பேசிக்கொண்டிருங்கள். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது கொஞ்ச நெரத்தில் வந்து விடுகிறேன்" என்று மக்கீன் நைசாக நழுவி விட்டான். ஒரு பெண்ணுடன் - அதிலும் என்னை மிகவும் நேசிக்கும் - நானும் விரும்பும் ஒரு பெண்ணுடன் - என் வாழ்நாளில் முதன் முறையாக யாருமில்லாத தனி வீட்டில் தனித்து விடப்பட்டிருக்கிறேன். இளமைத் துடிப்புடன் வாலிபத்தின் தலைவாயிலில் நிற்பவர்கள் நாங்கள், ஆனால் தவறான ஒரு பார்வையோ பேச்சோ கூட இல்லை.

என்னை உயிருக்கு உயிராய் நேசிப்பதாக சொன்னாள். என்னை மணந்து வாழ விரும்புவதாக விருப்பம் தெரிவித்தாள். எனக்கும் அந்த விருப்பம் இல்லாமல் இல்லை. என் நிலமைகளை எடுத்துச் சொன்னேன். என்னைப் போலவே அவருக்கும் பல சகோதரிகள் என்பதை எடுத்துக் காட்டினேன். வெவ்வேறு மதம் - இனம், பொருளாதாரத்திலும் என்னை விட உயர்வானது அவர்களுடைய நிலை அதனால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் ஆகியவற்றை எடுத்துச் சொன்ன போது அழுத அழுகை என்னை குலுக்கியது. கண்ணீரைத் துடைத்துவிட்டேன் ----கைக்குட்டையால். அப்போது கூட அந்தப் பெண்ணைத் தொடவில்லை என்பதே இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. சப்தமில்லாமல் குமுறிக் குமுறி அழும் அந்தப்ப் பெண் என் தோளில் அப்யம் தெடினாள்... இக்கட்டான நிலை, ஆபத்பாந்தவனாக மக்கீன் வந்து சேர்ந்தான். உள்ளே சென்று அந்தப் பெண் முகம் கழுவி பவுடர் போட்டு சிரித்த முககமாக வெளிவந்தாள்; நாங்கள் விடைபெற்றோம்"

என்று அந்த காட்சி அனைத்தையும் ஐயா நமது கண்முன்னே கொண்டு வர, இந்த மக்கீன் மீது கோபம் கொள்வதா, நன்றி சொல்வதா என்ற குழப்பத்தில் இந்த இடத்தில் வாசகர்கள் குழம்பி விட வாய்ப்புண்டு.

பிறகு அடுத்த பக்கத்தில் இவர் தன்னுடைய காதலைப் பற்றி இப்படி நினைத்துப் பார்க்கிறார்.

" நான் செய்தது சரி தானா? காதலை மதிக்கத் தெரியாமல் போய் விட்டதா? அல்லது ஏற்கத் துணிவில்லாது போய் விட்டதா? அல்லது ஒரு நடுத்தர குடும்பத்தின் பொறுப்புள்ள தலைமகனாக நடந்து கொண்டேனா? இன்று வரை விடை தெரியவில்லை. ஆனால் உள்ளத்தின் அடித்தளத்தில் மாறாத ஓர் ஊமை வேதனை இருந்து கொண்டே இருந்தது. இறைவனின் அருட் கொடைபோல் ஓர் நல்ல துணை வாய்க்கும் வரை - வாய்த்தாள்"

ஈழத்தின் தமிழ் இலக்கிய பிதாமகர் என்று எஸ்.போ அவர்களை போற்றுகிறார்.

"சுயநலத்தை விட சில அடிப்படையான கொள்கைகளை உயிரினும் மேலாக கருத வேண்டும் என்கிற உண்மையை எனக்கு உணர்த்திய பெரியவ்ர் திரு கே.எஸ். நடாராஜா" என்று அவரைப் போற்றுகிறார்.

இப்படி பல கதாபாத்திரங்களையும் அவருடை அழகான தமிழில் வர்ணனை செய்து அவர்களை எல்லாம் பாராட்டி மகிழ்கிறார், திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள்.

ஐயாவிடம் எதை யார் சொன்னாலும் அவர் முதலில் சொல்கிற பதில் "லெட் மி திங்க்".

"கலை எமக்களிப்பது ஊதியமல்ல உயிர்" என்ற சொற்றொடரை அவருடைய நாடகக் குழுவிற்கு வழங்கவும் நன்றாக யோசித்திருப்பார் என்றே தோன்றுகிறது.

நீண்ட பட்டியலிட்டு ஐயா இப்படி யோசிக்கிறார்.

"என்னிடம் பிரதிபலன் எதிர்ப்பார்த்தா இதைச் செய்தார்கள்? - இல்லை நிச்சயமாக இல்லை. என் மீது அவர்களுக்குள்ள அன்பின் ஆழத்தின் பிரதிபலிப்பாகவே இதைச் செய்தார்கள். இவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்? ஒன்றைச் செய்யலாம், என்னை தகுதி உடையவன் என்றெண்ணி, தங்கள், தங்கள் தனிப்பட்ட திறமைகளை இவர்கள் முன்னிறுத்தி எனக்கு உதவியது போல் நான் பிறருக்கு உதவலாம். திறமைசாலிகளை இனம் கண்டு அவர்களை வளர உதவலாம். அதைச் செய்திருக்கிறேன் - செய்கிறேன் - இன்ஷா அல்லா இனியும் செய்வேன்"

சமுதாயம் சம்பந்தமாக சொல்லும்போது

"லாப நோக்கு" என்பது மனிதனின் அடிப்படை குணம். முற்றும் துறந்த முனவருக்குக் கூட "முக்தி" என்கிற லாபநோக்கு உண்டு. எனவே அதை கிள்ளி எறிய நினைக்கும் எந்த சக்தியும் நிலைக்காது. மேலும் மனிதன் சுதந்திரப் பறவை. அவன் சிறகுகளை சிறிது காலத்துக்குத் தான் ஒடித்துப் போட இயலும். ஒரு நாள் அவன் சீற்றம் கொள்ளும் போது சிறைக்கதவுகள் தூளாகும். காலத்தின் கணக்குகளில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் இது கண்டிப்பாக நடந்தே தீரும்.

உழைப்பவனின் வியர்வை உலரும் முன்பே அவனது கூலியைக் கொடுத்து விடுங்கள்" என்கிற எல்லோருக்கும் ஏற்புடைய இஸ்லாத்தின் கொள்கை மாத்திரமல்ல அதை அமுல் படுத்துவதில் ஆன்மீகம் கலந்த ஜனநாயக முறைகள் மீதுள்ள என் பிடிமானம் மேலும் இறுகியது. வட்டியை ஹராமாகவும் (வெறுக்கத் தக்கது) வியாபாரத்தை ஹலாலாகவும் (விரும்பத் தக்கது) ஆக்கி அதன் மூலம் பொருலீட்டும் முதலாளிகளை சமூகத்தின் தர்மகர்த்தாக்களாக - அறங்காவலர்களாக - நடந்து கொள்ளச் சொல்லும் முறை சரியாக புரிந்து கொள்ளப்பட்டால் அமுல் நடத்தப்பட்டால் ஏழ்மையே இருக்காது என்பது என் திடமான எண்ணம்

இளைய தலைமுறை என்பது ஒரு மாபெரும் சக்தி, உண்மையில் அது அதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு சிம்ம சொப்பனம். இந்த நிலையில் ஐம்பத்தி எட்டு வருட அனுபவம் என்பது தலையில் சூடப்பட்ட கிரீடமா அல்லது கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட கல்லா என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் ஒன்று புரிகிறது. முன்பை விட இப்போது அதிக உழைப்பு தேவை. உத்வேகம் தேவை. மாற்றங்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் ஆற்றின் ஒழுக்கை அனுசரித்து நீந்தும் வல்லமையும் தேவை. அல்லது காலச்சுழியில் அகப்பட்டு மூச்சுத் திணறி மூழ்கிப்போக நேரிடலாம். ஒரு பெண்ணின் வயது அவள் தோற்றத்தைப் பொறுத்தது. ஒரு ஆணின் வயது அவன் சிந்தனையைப் பொறுத்தது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன்" .

வானொலி நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்கையில்...." மேடையை அநேகமாக விட்ட மாதிரி தான். ஆனால் வானொலியை விடுவேனோ என்பது சந்தேகமே. அன்றாட வாழ்வின் ஆய்வு - சோர்வு - அலைச்சல் - உழைப்பு - டென்ஷன் இவற்றுக்கு மத்தியில் ஏதோ சில மாத இடைவெளிக்கு பிறகாவது வானொலி நிலையத்தில் சென்று செலவாகும் அந்த ஒரு நாள் எனக்கு புத்துயிரும் புது உணர்வும் நல்குகிறது என்பது தான் காரணம்" என்பதை வாசித்ததும் இவரில் இருக்கும் கலை உணர்வை அறிந்து வாசகர் இவரை போற்றுவார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அச்சாணி, ஆணிவேர், யாராலும் நெருங்க முடியாது என்று கருதப்படும் சூப்பர் மேன் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் திரு அப்துல் ஜப்பார் ஐயாவை, அவரே நேரடியாக வந்து சந்தித்து அன்புடன் கரங்களை பற்றி ஆதரவுடன் தோள்களை பற்றி மலர்ந்த முகத்துடன் " நான் உங்கள் ரசிகன் ஐயா" என்று சொல்லும் அந்த சந்திப்பைப் பற்றி மிக அழகாக ஐயா எழுதியுள்ளார்.

மீண்டு மனம் திறந்து இப்படி எழுதுகிறார்

"வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எனக்கு வயதாகிவிடவில்லை. எனினும் என்னுள் ஒரு "தேடல்" ஆரம்பமாகி உள்ளது. "நினைவு கூர்தல்" என்கிற இந்தக் கட்டுரைத் தொடர் கூட அதன் வெளிப்பாடாக இருக்கலாம். கொஞ்சம் மென்மையாகிறேன் என்பதை என்னால் உணர முடிகிறது. என் கெட்ட குணங்களில் ஒன்றான முன் கோபத்தை முற்றிலுமாக ஒழித்து விட்டேன் என்று கூட சொல்லலாம். எனவே இந்த வயதில் இயல்பாக வரக்கூடிய இரத்த அழுத்தம் கட்டுக்குள் அடங்கி இருக்கிறது. "இளமையில் ஒழுக்கம், முதுமையில் ஆரோக்கியம்" என்ற பழஞ்சொல், என் வரை, இது வரை உண்மை ஆகி இருக்கிறது. இன்றும் அதிகாலையில் நான்கைந்து கேம்கள் "ஷட்டில்" ஆடுகிறேன். நடக்கிறேன்"

இந்த புத்தகத்தில் ரசித்தவைகளை எல்லாமே எழுதித் தான் ஆக வேண்டுமென்றால் இந்த புத்தகத்தை அப்படியே தட்டச்சிடத் தான் வேண்டும்!

அது தவறு என்பதால், அப்படி செய்யாமல், இதை வாசிப்பவர்களுக்கு இந்த புத்தகத்தின் விற்பனையாளரின் விலாசத்தைத் தருவதே நன்று. விசாரிக்கையில் 2003 இல் வெளியிடப்பட்டதால் 200 புத்தகங்கள் மட்டுமே இருக்கும் என்று இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர் திரு எஸ்போ ஐயா தெரிவித்தார்.

புத்தகம் கிடக்க அனுக வேண்டின விலாசம்:
Mithra Arts and Communication
32/9 Arcot Road, Chennai 24
Telephone: 23723182 / 9444357173
Email: mithra2001in@yahoo.co.in / itheijo@hotmail.com

இந்த புத்தகத்தின் விலை இப்போதும் ருபாய் 60/= மட்டுமே.

"இலங்கை வானொலி ஸ்டைலில் உங்களை மீண்டு சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்வது உங்கள் அன்புக்குறிய ஏ.எம்.அப்துல் ஜப்பார். அதாவது சாத்தான்குளம் அப்துள் ஜப்பார்" என்றெழுதி இந்த புத்தகத்தை மிக அழகாக அன்புள்ள ஐயா முடித்துள்ளார்.

நன்றி, வணக்கம்
தோழமையுடன் என் சுரேஷ்

Saturday, May 24, 2008

ரோஜாச் செடி


என்னில்
எத்தனை முற்கள் இருந்தாலென்ன?

என்னில்
நீ மலர்ந்ததால்...
மலர்வதால்... மலரப்போவதால்.....

என் பெயர் என்றுமே
ரோஜாச் செடி!

என் சுரேஷ்

இன்று போய் நாளை வாராய்!

அன்று மாலையும் கர்ணன் தானதர்மங்கள் செய்வதற்காக பொருட்கள், பெற்காசுகள், பணம் இவைகள் யாவும் எடுத்துக் கொண்டு அவரது மாளிகையின் வாசலில் அமர்ந்திருந்தார். பலர் வந்தார்கள். அன்போடு எல்லோருக்கும் தானதர்மங்கள் செய்தாயிற்று. மாலை இரவாக மலரும் நேரம், ஓர் ஏழைப் பெரியவர் வந்தார். கர்ணன் அந்தப் பெரியவரிடம் அன்போடு வணக்கம் சொல்லி சுற்றி முற்றிப் பார்த்தார் ஆனனல் ஒன்றும் கொடுக்க இல்லாத நிலை. தான் அமர்ந்திருந்த இருக்கையின் இடது பாகத்தில் இருந்த பெரிய ஒரு அழகான தங்க விளக்கு அவரின் கண்களில் பட்டதும் கர்ணன் தனது இடது கைய்யாலையே அதை எடுத்து, இடது கையாலையே அந்த ஏழைக்கு புன்னகையோடு கொடுத்தார். நன்றி சொல்லிவிட்டு அந்த ஏழை, தங்க விளக்கை சந்தோஷமுடன் எடுத்துச் சென்றார்.

இந்த நிகழ்ச்சியைக் கண்டவர்கள்..." ஐயா இடது கையால் தானம் செய்வது சரியா" என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

அதற்கு கர்ணன், " மன்னிக்கவும், இடது கையிலிருந்து வலது கைக்கு அந்த தங்க விளக்கு மாறும் வேளையில் எனது மனம் மாறிவிடுமோ என்ற எண்ணத்தில் தான் இடது கையிலேயே அதை கொடுத்து விட்டேன்" என்றார்.

நல்ல செயல்களை செய்ய நேரம் பார்க்க தேவையில்லை என்பதை பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் செய்ய வேண்டிய நல்ல செயல்களை நாளை பார்க்கலாம் என்று தள்ளிப்போடாமல் அதை உடனடியாக செய்வதே நன்று. உலகத்தின் கடைசி நாள் ஒருவேளை இன்றே இருக்கக்கூடும் என்ற ஒரு மனோபாவத்தில் நல்ல செயல்களை தள்ளிப்போடாமல் உடனடியாக செய்வது நிச்சயமாக வெற்றியான, மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை நமக்கு அன்பளிப்பாய் தரும் என்பது நிச்சயம்.

இப்படி ஒரு பெரியவர் தனது சொற்பொழிவொன்றில் பேசியதை நான் இங்கே பதிவு செய்கிறேன், அவ்வளவு தான்!

அதனால் எப்போது கர்ணன் இதைச் செய்தார், மகாபாரதத்தில்/கம்பராமாயணத்தில் இதில் எந்த பாடலில் வருகிறது என்றெல்லாம் கேட்டு என்னை யாரும் சிநேகிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்:-)

என் சுரேஷ்

Wednesday, May 21, 2008

இறை இல்லம்

வெற்றிகளும் தோல்விகளும் சேர்ந்த இந்த வாழ்க்கையில் மாபெரும் வெற்றிக்கு முன் வநதுவிடும் சில தோல்விகளின் ரேகைகளைக் கண்டுதுமே மனமுடைந்து போய் சிலர் இப்போதெல்லாம் திடீரென்று ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுகிறார்கள்.

அது ஒரு நல்ல தீர்மானம் தான்!

என்ன அது ?

அனாதை இல்லம் அல்லது முதியோர் இல்லம் (அ/மு இல்லம்) ஒன்றை ஆரம்பிப்பிது என்பதே அது.

இதுபோன்ற நல்ல சில சிந்தனைகள் கவலைகளிலிருந்து வெளிவர ஓரளவிற்கு பலருக்கும் உதவி செய்கிறது என்பது உண்மை தான்!

தூரத்தில் எங்கேயோ ஒரு வெளிச்சம் தெரிய, அந்த நம்பிக்கையால், தற்போதைய இருளான வாழ்க்கையைக் கண்டு பயந்து போகாமல், அந்த தூரத்து வெளிச்சம் நோக்கி, தங்களின் வாழ்க்கையை அழிக்காமல், ஒரு இனிய பயணத்திற்கு இது போன்ற நல்ல சிந்தனைகள் பலருக்கும் வாழவேண்டும் என்ற ஓரு ஆசையின் பாதையை இடத்தான் செய்கிறது.

ஆனால் மு/அ - இல்லங்கள் ஆரம்பிகக்வேண்டும் என்ற எடுத்த தீர்மானங்களை நிறைவேற்ற செல்லும்போது தான் அங்கிருக்கும் பிரச்சனைகள் பலவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.

உதாரணமாக முதியோர் இல்லத்தில் எந்நேரமும் நடக்க இருக்கும் அந்த முதியோர்களின் மரணமும் அதனால் அந்த இல்லம் ஆரம்பித்த நல்லவர்கள் சந்திக்ககூடும் பிரச்சனைகளும் கொடுமையானது.

முதியவர் ஒருவர் இறந்து போனதும் அவருடைய சில சொந்த பந்தங்கள் எங்கிருந்தோ திடீரென்று வந்து அதன் நிர்வாகிகள் மீது கொலைக்குற்றம் சுமத்தி அந்த (பல) நல்லவர்களுடைய வாழ்க்கையை காலத்திற்கும் நீதிமன்றத்திலேயே அநீதியாக்கப்படுகிறதைப் பற்றி என்னத்த சொல்ல!

குழந்தைகளுக்கு இல்லங்கள் ஆரம்பிக்க அதிக வேலை ஆட்கள் தேவை. அதிகமான பொருளாதாரமும் தேவை. பிள்ளைகள் வளர்ந்ததும் ஆண் பிள்ளைகளுக்கு/பெண் பிள்ளைகளுக்கு என தனித் தனியாக தங்கும் வசதிகள் செய்தாக வேண்டும். அதிகமும் பலர் இதை ஆரம்பத்திலேயே சிந்திக்காமல் செய்லபடத்துவங்கி திடீரென்று ஐயோ இனி என்ன செய்வது என்று மண்டையைப் போட்டுக் குடைவார்கள். பாவம் இவர்கள் மண்டைகள் தான் என்ன செய்ய முடியும்:-)

இப்படியாக மு/அ -இல்லங்கள் ஆரம்பிக்க/ஆரம்பித்தால், தொல்லைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஒரு திட்டத்தின் செலவுகள் பொதுவாக அதைவிட அதிகமாவது இயற்கை. ஆனால் நிர்பந்தமாக உதவ வந்தவர்களில் பலர் வெறும் பத்தே பத்து இந்திய ரூபாய்கள் கொடுத்துவிட்டு பத்தாயிரம் கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்டுச் செல்ல, இதை ஆரம்பித்தவர்களின் நிலை யாருக்கும் யூகிக்கக் கூடும்.

இதனால் தான் பல மு/அ இல்லங்களும் ஆரம்பித்த சில நாட்களிலேயே மூடப்பட்டு விடுகின்றன!

புண்ணியம் கிடைக்க வேண்டும், சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைக்க வேண்டும், மனதிற்கு ஒரு திருப்தி கிடைக்க வேண்டும் என்றெல்லாம் சுயநலம் மட்டும் மனதின் முன் வரிசையில் நிற்க, அற்பணிப்பு மனோபாவாம் அதிகமும் இல்லாமல், இது போன்ற நற்பணிகள் செய்ய முன் வருவோருக்கு ஏமாற்றத்தைத் தவிற வேறென்ன கிடைக்கக் கூடும்?

வாழ்க்கையில் இப்போது தோல்வியில் இருப்பவர்கள் அந்த தோல்வியிலிருந்து அடுத்த மாபெரும் வெற்றிக்கு செல்வது எப்படி என்று யோசிக்க வேண்டுமே தவிற அந்த சிந்தனையை ஓர் மு/அ - இல்லம் ஆரம்பிக்க வேண்டுமென்ற ஒரு சிமிழுக்குள் மட்டும் அடைப்பது நிச்சயமாக கவலையைத் தவிற வேறென்ன தரக்கூடும்? இருப்பினும், உறுதியாக இருப்பவர்களுக்கு அவர்கள் வெற்றி பெற என் இனிய வாழ்த்துக்கள்!

பிள்ளைகள் பிறப்பதற்கு அவர்கள் காரணமா?

பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு செலவுகள் செய்வதெல்லாம் அவர்கள் மீது எறிகின்ற எதிர்பார்ப்பின் முதலீடுகள் என்பதால் தான் அதிகமும் இப்போதுள்ள முதியோர்களுக்கு இந்த நிலை என்பது மறுக்கமுடியாத உண்மை என்றாலும் தங்களுக்கும் வயதாகும் என்ற உணர்வோ, பெற்றெடுத்த தெய்வங்களை இப்படி அநாதைகளாக விட்டு விடுவது தவறென்ற புரிதலோ இந்த காலத்தில் பலருக்கும் இல்லை என்பது மிக மிக வருத்தமானதோர் உண்மைச் செய்தி.

முதியோர்களை மு-இல்லத்தில் விட்டு வீடு திரும்ப, இதில் பல மருமகன்களுக்கும் மருமகள்களுக்கும் அப்படி ஒரு சந்தோஷம், என்பது தான் வயிற்றெரிச்சலாக உள்ளது! அடப்பாவிகளா, உங்களை இறைவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். திருந்திவிட காலம் இனியும் உண்டு. விரைவில் உங்கள் வீட்டு தெய்வங்கள் இனிமேலும் அநாதைகள் அல்ல என்ற உண்மையை மனதிற்கொள்ளுங்கள் என்ற நமது கருத்தை அந்த அறிவுஜீவிகளிடம் எப்படி சொல்ல முடியும். மனம் ஆதமா எல்லாம் மறுத்துப்போன இதுகளுக்கு காது மட்டும் கேட்குமா என்ன?

மகன்கள்=மகள்கள் இவர்களின் நிலையும் இது தன்!

அநாதை என்றால் நாதியற்றவன் என்று பொருள், இன்னொரு மனிதன் உயிரோடு இருக்கையில் எப்படி ஒருவன் அநாதை ஆக முடியும்?
அதனால் அனாதை இல்லங்களுக்கு "இறைவனின் இல்லம்" என்று பெயரிடலாம் என்று தோன்றுகிறது.

லண்டன், ஜப்பான் போன்ற நாடுகளில் அரசே அ/மு இல்லங்களை நடத்தி சிறப்பான சேவைகளை செய்து வருகிறது என்று கேள்விப்பட்டேன். இந்தியாவில் இருக்கும் 110 கோடி மக்களுக்கு இந்த திட்டமென்றால் சிதம்பரம்-அங்கிள் (சினாதானா ஐயா) எப்படியெல்லாம் அடுத்த பட்ஜட்டில் குழப்புவார் என்று யோசிக்கக் கூட முடியவில்லை:-).

பிள்ளைகளை நேசித்து வளர்க்கும் பெற்றோர்கள், தங்களின் வருமானத்தின் ஒரு பகுதியை சேமித்து வைத்து வயதாகும் காலத்தில் எப்படி வாழ்வது என்று திட்டமிட்டால், எதிர்பார்ப்புகள் இல்லாமல் தங்களின் மனநிலையை மாற்றி அமைத்தால், வருங்காலத்தில் முதியோர் இல்லத்து வாசல்களை மிதிக்க வேண்டின கொடுமையை தவிற்கலாம்.

வருமானமே இல்லை, என்ன செய்ய ? - எனும் ஏழை மக்களுக்கு "இந்திய நிஜமாகவே ஒரு நாள் ஒளிரும்" என்ற நம்பிக்கையைக் கொடுத்து ஏமாற்றுவதைத் தவிற இப்போது நானும் நீங்களும் என்ன சொல்ல முடியும்?

வைரங்களை கொட்ட இன்னொரு குப்பைத்தொட்டி ஏன்!

முதியோர்/குழந்தைகள் இல்லங்கள் சமூகத்திற்கு மாபெரும் அசிங்கமே!

இருக்கும் முதியோர் இல்லங்களை ஒழுங்காக நடத்த, எல்லோரும் முன்வந்து உதவுங்கள், வாழ்த்துக்கள். அங்கிருக்கும் தங்களின் தாயையும் தகப்பனையும் வீட்டிற்கு கொண்டுபோய் அன்போடு சில காலம் சேவை செய்யுங்கள். ( கவலைப்படவே வேண்டாம்! அந்த முதியோர்கள் வாழ்ந்த காலங்கள் இனி வாழப்போவதில்லை! ) புதிய முதியோர் இல்லங்கள் வருவதை தடுக்க குடும்ப தெய்வங்களை வீட்டிலேயே வைத்து சேவை செய்யும் நல்ல உள்ளம் எல்லோருக்கும் மலரட்டும் என்று இணயதளம் வழியே நாம் எல்லோரும் பரப்புரை செய்வோம், அதன்படி நாமும் நடந்துகொள்வோம், அதற்காக வாழ்த்துவோம், பிரார்த்தனைகள் செய்வோம்!

சரி... இன்னும் 15-20 வருட காலத்திற்கு பின்னர் நானும் எனது மனைவியும் முதியோர் இல்லத்திற்கு சென்று தான் ஆகவேண்டும்!
ஏனெனில் எங்களுக்கு பிள்ளைகள் இல்லயே!

ததும்பும் தோழமையுடன் என் சுரேஷ்

Tuesday, May 20, 2008

அனு என்ற அவள்

தகப்பனுக்கும் தாய்க்கும் சர்க்கரை வியாதி இருந்தால் பிள்ளைகளுக்கும் அது பாரம்பரிய முறை படி அதிகாரமான சொத்து என்பதால் அதன் உரிமை எனக்கு வந்து விட்டதா என்ற சோதனையை நான்கு ஐந்து வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறேன்.

2007 முதல் ஏறத்தாழ மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த செலவை செய்து மகிழ்வதில் என் மருத்துவருக்கு அப்படி ஒரு சந்தோஷம்! "டேய் சொன்னதை செய்யுட" என்று சொல்லும் சகோதரியின் பாசம் தரும் எங்கள் குடும்ப மருத்துவரை எதிர்த்து ஒன்றும் பேசவும் முடியாது. புன்னகை மட்டும் தான்!

ஒவ்வொரு முறையும் இரத்தப் பரிசோதனையின் முடிவு, என்னை காஷ்மீர்-பாகிஸ்தான் எல்லைக்கு கொண்டு செல்வதே வழக்கம்!

பொதுவாக இரத்தம், பரிசோதனைக்கு கொடுப்பதற்கு முந்தைய நாளின் இரவு-உணவை மாலையிலேயே சாப்பிட வேண்டும். அடுத்த நாள் காலையில் ஒரு காப்பி கூட சாப்பிடாமல் (கொடுமையிது!) பரிசோதனைக்கு செல்ல வேண்டும். இது தான் வழக்கம்.

இந்த வாரம் ஞாயிறு 18ற்கு காலை பரிசோதனைக்கு செல்வதாக எனது தீர்மானம். 17 மதியம் 2 மணியளவிற்கு நன்றாக பசி. அலுவலகத்தில் எல்லா சனிக்கிழமைகளிலும் எங்களுக்கு "Get together" என்ற பெயரில் சத்துணவு தருவது வழக்கம். ஓரளவிற்கு நன்றாகவே அப்போது சாப்பிட்டேன்.

மாலை 3.30 மணிக்கு யூனியன் வங்கியின் ஒரு கூட்டத்தில் என்னை பேச அழைத்தார்கள். கூட்டம் முடிந்ததும் அங்கே "ஹைடீ" என்ற பெயரில் சமூசா போன்ற உணவு வகைகள், குளிர்பானங்கள், மற்றும் டீ காப்பி எல்லாம் வைத்திருந்தார்கள். பசியில்லை ஆனால் சென்னை வெயிலின் தாக்கத்தால் தாகமிருந்தது. குளிர்பானம் "மிராண்டா" ஒன்றை குடிக்க நினைத்து அதனருகே சென்று கொண்டிருக்கிறேன், எனது மனைவி செல்பேசியில்... "என்னங்க நீங்க ஒன்னுமே வெளியே சாப்பிடாதீங்க" என்று ஒரு கட்டளை, உபதேசம் என்ற தலைப்பில்!

என்ன செய்ய, ஒரு கோப்பை தண்ணீர் மட்டும் குடித்து விட்டு அங்கிருந்து மரிநாவில் அன்புடன் குழுமத்தின் சந்திப்பில் கலந்து கொள்ள ஆராதா என்ற தம்பியின் பாச அழைப்பை மதித்து அங்கு சென்றேன்.

ஆறு-ஏழு பேர் கொண்ட அந்த சகோதர வட்டத்தில் அன்று பேசுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. 5.00 மணிக்கு ஆரம்பித்தது 10.00 மணிக்கு தான் நேரம் தாமதமானதால் முடிந்தது. எல்லோரும் மனம் விட்டு பேசிட சிலர் கவலைகளை கொட்டி விட, சிலர் அதை நகைச்சுவைகளால் கட்டுப்படுத்த, நேரம் போனதே தெரியவில்லை. சந்திப்பின் முடிவில் உங்களுக்கு பிடித்த பாடல் என்ன என்று ஒவ்வொருவரிடம் கேட்டு, நான் அதை பாடும் கொடுமையை பாவம் அவர்கள் சகித்தார்கள். இருப்பினும் எனக்கு சந்தோஷத்தால் மனம் நிறைந்ததும் பசி பறந்து விட்டது.

சரி, மற்ற எல்லோருக்கும் உணவிற்கு ஏற்பாடு செய்வோமே என்று எண்ணுவதற்குள், எல்லோரும் தங்களின் கடிகாரம் சொன்ன உண்மைச் செய்தியை உணர்ந்திட, வீடு சென்றதும் (காலதாமதம் ஆனதால்!) சந்திக்கக் வேண்டின பிரச்சனைகளை மனதிற்கொண்டு ஓடி விட்டார்கள். நானும்!

அடுத்த நாள் 18 ஆம் தேதி காலை இரத்தப் பரிசோதனை செய்யும் ஒரு பெரிய நிறுவனத்திற்கு நான் சென்றேன். கடன் அட்டை வாங்கும் ஒரே வசதியால் அங்கு செல்வதில் ஒரு மகிழ்ச்சி. பணம் கட்டி விட்டேன். எனை அழைக்கிறார்கள்.

எனை அமரச்சொல்லி இடது கையில் ஒரு ரப்பர் கயிறால் கட்டிவிட்டார்கள். ஓர் இளம்பெண், எனது மகளாக இவள் இருந்திருந்தால் என்று ஆசைப்படும் அளவிற்கு அவளுடைய எளிமையான தோற்றம், மென்மையானப் பேச்சு, ஆங்கிலத்தில் சொல்வார்களே good -attitudes இவை எல்லாம் இருந்தது. பண்பிற்கு அதிக முக்கியத்தும் கொடுக்கும் ஒரு மண்ணில் (தமிழ் நாட்டில்)பிறந்து-வளர்ந்து-வாழ்பவன் எனக்கு அவளின் முகத்தில் ஒரு கவலை நிழலாடிக் கொண்டிருப்பதை மட்டும் உணர முடிந்தது.

"சார் நீங்க எப்ப சாப்பிட்டீங்க..." என்றாள். பாராட்டு கிடைக்கப் போகும் சந்தோஷத்தில் நான் சொன்னேன் " நேற்றைக்கு மதியம் 2 மண்க்கு சாப்பிட்டேன். பிறகு இப்ப வரைக்கும் ஒன்னுமே சாப்பிடவில்லை" .

உடனே அவளின் விரல்கள் தொலைபேசியில் நர்த்தனமாடின. " சார் நான் அனு பேசறேன். இங்கே ஒரு பேஷ்யண்டு வந்திருக்காரு. அவரு சாப்பிட்டு 20 மணிநேரமாச்சு.. சர்க்கரை மற்றும் கொழுப்பு இந்த இரண்டையும் டெஸ்ட் பண்ணுங்க பண்ணுங்க என்று என்னிடம் அடம் புடிக்கிறாரு" என்றாள்.

எனக்கு உண்மையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "என்னம்மா நான் உண்மை சொன்னது தப்பாப் போச்சு போலிருக்கே" என்றேன்.

அதற்கு அவள், "சார் நாங்க பணத்திற்காக மட்டும் இந்த சேவை செய்யவில்லை. எங்களுக்கென்று சில வழிநடத்தல்கள் எல்லாம் இருக்கு. 12 மணிநேரத்திற்கு மேல் எடுத்தால் ரிசல்ட் சரியா வராது" என்று மென்மையாக சொல்லிக்கொண்டே இருக்கையில் தொலைபேசி மணி அடிக்கிறது.

அனு எடுக்கிறாள். நன்றாக யோசித்த பின்னர் அவளுடைய மூத்த அதிகாரி உத்தரவு இடுகிறார். "அவர்..அந்த பேஷ்யண்டு, 400 ரூபாய் பணம் கட்டி விட்டாரு, அதனால ஒன்னு பண்ணுங்க... 20 மணிநேர fasting ற்கு பிறகு பேஷ்யண்டோட நிர்பந்தப் பிரகாரம் எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனை என்ற குறிப்போடு ரசீது போட்டு, அவருடைய சாம்பிள் எடுங்க"

எனது இரத்தம் எடுக்க ஊசியோடு என்னருகே வருகிறாள் அனு. அவள் முகத்தில் பொட்டில்லை. அனு என்ற பெயருடைய அவளின் நெற்றியில் ஏன் பொட்டில்லை என்று யோசித்தேன்!

கால் பார்த்தேன் அதில் மெட்டி இருந்தது. "என்னம்மா, ஏன் நெற்றியில் ஒரு பொட்டு வைக்கக் கூடாதா" என்றேன். அதற்கு "நான் ஒரு கிறிஸ்துவப் பெண். இந்துவாக இருந்து சில காலம் முன் கிறுஸ்துவப் பெண்ணாக மாறினேன்" என்றாள்.

கிறுஸ்துவளாக இருப்பதற்கும் பொட்டு வைக்காமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று திருச்சபை கூட்டங்களிலும் கிறிஸ்துவ அறிவாளிகளின் மத்தியிலும் பலமுறை வாதாடி சில இடங்களில் மட்டும் எனது கருத்திற்கு அங்கீகாரம் கிடைத்த அனுபவத்தால் அட்வைஸ் என்ற பெயரில் எதையும் அவளிடம் சொல்ல நான் விரும்பவில்லை.

"என்னம்மா அப்போ கடவுளை உனக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கே" என்றேன்.

ஊசியைப் பார்த்து பயந்த என்னிடம் "சார் என்ன நீங்க குழந்தையைப் போல பயப்படுறீங்க" என்று சிரித்துக்கொண்டே எனது இரத்தத்தை ஊசியால் இழுத்துக்கொண்டிருக்கிறாள். நான் கண்மூடிக்கொண்டிருக்கிறேன். அப்போது அவள் சொல்கிறாள்.

"எனக்கு இறைவனைப் பிடிக்கும் ஆனால் இறைவன் தான் என்னை சோதிக்கிறார்"

கண் திறந்து பார்த்ததும் அவள் கன்னங்கள் இரண்டிலும் கண்ணீர் மழை!

"சோதனைகளை வெல்ல இறைவன் நமக்கு உதவுவார், சோதனையின் முடிவில் ஒரு வெற்றி தர அவர் காத்திருக்கிறார்" என்றேன். கவலையின் உச்சத்தில் இருப்பவர்க்கு இறைவனின் வசனங்களே ஆறுதல் என்ற புரிதலோடு அவள் தனது கன்னத்தின் கண்ணீரைத் துடைத்தாள்.

"சார் எனக்கு ஒரு குழந்தை ஆன பிறகு என்னை விட்டு அடிக்கடி எனது கணவர் வெளியே செல்கிறேன். பிறகு சில வாரங்கள் கழித்துத் தான் வருகிறார். இந்த கவலையால் நான் ஒரு சைக்கோ ஆனேன். இங்கிருக்கும் மருத்துவர்களின் உதவியால் இப்போது தேறி வருகிறேன். high depression" என்றாள். "குழந்தை பிறந்த பிறகு நான் அழகாக இல்லை; என்னை பிடிக்கவில்லை என்று அவர் சொல்கிறார். இதில் என்ன நியாயம்? எனக்கு அவர் என்றால் உயிர் சார்..." மீண்டும் அழுகிறாள்.

நல்ல வேளை இத்தனையும் ஒரு தனி அறையில் (அடைக்கப்பட்ட ஓரு அறை- ஒரு cabin -இல்) நடக்கிறது. அதனால் அவளுடைய கவலையின் வெளிப்பாட்டை என்னைத் தவிற மற்றவர்கள் யாரும் பார்க்கவில்லை.

கோபம் கவலை அனுதாபம் இவை எல்லாம் ஒன்றுகூடின ஒர் உணர்வில் நானும் மௌனத்தில்.

சில நொடிகள் கழித்து மீண்டும் பேசுகிறாள் அனு. "குழந்தைக்காக நான் வாழ வேண்டும் சார், நான் வாழ்வேன். நான் சம்பாதித்து தான் என் வீட்டு வாடகை மற்றும் எல்லா செலவும் பார்க்கனும்" அதற்கு மேல் என்ன என்னமோ சொல்லத்துடிக்கும் அவள் உணர்ச்சிப்பிழம்பானாள். ஒன்றுமே பேசமுடியாமல் அப்படியே மௌனமாக அழுது கொண்டே இருந்தாள்.

என்ன சொல்வதென்று தெரியாமல் நான் தவித்தேன். எப்படியோ ஒரு தைரியம் வரவைத்து நான் சொன்னேன். "அம்மா.. உன்னுடைய மகனை எவ்வளவு வேண்டுமென்றாலும் படிக்க வை.. நானும் என் மனைவியும் எங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்கிறோம். வேண்டுமென்றால் நமக்குத் தெரிந்து சில என்.ஜி.ஓ சமுதாய நல வாரியங்கள் மூலமாக உனது கணவரை உன்னோடு சேர்த்து வைக்க முயற்சி செய்கிறோம்" அதற்கு " வேண்டாம் சார், வேண்டாம்.. அப்படி செய்தால் அதற்கும் ஒரு சந்தேகப் பார்வை பார்த்து வேறொரு பிரச்சனையை உருவாக்குவார் என் கணவர்"

என் மகன் ஒரு மருத்துவர் ஆவார் என்று பேசும்போது நீங்கள் சொன்னீர்கள், அந்த நிலைக்கு அவன் படிக்கும் காலத்தில் எனக்கு தேவைப்பட்டால் நான் உங்களிடம் நிச்சயம் உதவி தேடி வருகிறேன். அதற்கு இன்னமும் பல காலங்கள் இருக்கு. நீங்க உடனே போய் ஏதாவது சாப்பிடுங்க, சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் மீண்டும் இரத்தம் எடுக்க வேண்டும்" என்றாள்.

நான் உணவருந்தி, இரண்டு மணிநேரம் கழித்து "அன்பென்ற மழையிலே" என்ற எனது கவிதைத்தொகுப்பை ( கர்த்தரின் நேசம் பற்றி எழுதினது) எடுத்து மீண்டும் அந்த மருத்துவமனைக்கு சென்றேன். அந்த புத்தகத்தை அவளிடம் கொடுத்தேன். அதில் "அன்புடன் என் மகளுக்கு" என்று எழுதி கைய்யெழுத்திட்டிருந்தேன். அதை வாசித்து "நன்றி" என்று சொல்லி வாங்கி விட்டு, "உங்களுடைய இரத்தம் எடுக்க இன்னமும் பத்து நிமிடங்கள் உள்ளன நீங்கள் இந்த ஹாலிலேயே உட்காருங்க, நான் பிறகு கூப்பிடறேன்" என்று புத்தகத்தைப் பார்த்துகொண்டே அவளுடைய அறைக்குச் சென்று விட்டாள்.

சில நிமிடங்கள் கழித்து என்னருகே வந்த அனு, "சார்...இருபது பக்கங்கள் கட கட என்று வாசித்தேன். எல்லாமே எனக்காகவே எழுதியது போல் உள்ளது, வாங்க சார், இப்போது சாம்பிள்(இரத்தம்) எடுக்கிறேன்" என்றாள்.

இரண்டாம் முறை அவள் இரத்தம் எடுக்கிறாள். இருவரும் மௌனம். நான் புறப்புடும் நேரம்
"தொடர்ந்து ஜபம் செய், கர்த்தர் கைவிடமாட்டார்" என்ற ஆறுதல் சொல்லி புறப்பட்டேன். அங்கிருந்து நான் காரில் வீடு செல்லவில்லை, என் மீது கார் பயணித்துக் கொண்டிருந்தது போல் இருந்தது.

அடுத்த நாள் திங்கட்கிழமை 20 ஆம் தேதி மாலை எனது இரத்தப் பரிசோதனையின் அறிக்கையை அந்த மருத்துவமனையின் வரவேற்பு அறையிலிருக்கு அறிவிப்பாளர் தந்தார். உடனே திறந்து வாசித்தேன்

எனக்கு சக்கரைவியாதி என்று உறுதி செய்யப்பட்டது!!!

என் சுரேஷ்

Friday, May 16, 2008

கவிதை கேளுங்கள்

அன்பர்களே,

www.worldtamilnews.com - ல் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் எனது கவிதையை கேட்க கீழ்காணும் சுட்டியை தட்டவும்.


Poem for download here...

Poem for download here...

http://azhagi.com/all/uk/UK-1.zip


When the poems plays in WinAmp, do right-click on the player window of WinAmp and click on 'View File Info' to see the Title, Album and Comments info (given by my Brother) for this particular mp3.


பாசமுடன் என் சுரேஷ்.

Tuesday, May 13, 2008

பொன்மாலைப் பொழுது.....!


என் இனிய நண்பர்களே,

உணர்வுகளை வெளிப்படுத்த எழுத ஆரம்பிக்கும் காலம், சில நேசர்களுடைய பாராட்டுக்கள் பெற்றதும் மீண்டும் மீண்டும் எழுதத் துடிப்பு. எழுதியவைகளின் எண்ணிக்கை அதிகரித்ததும் ஆகா! இதையெல்லாம் ஒரு தொகுப்பாக வெளியிட்டால் என்ன, என்ற முயற்சி! முதல் குழந்தையை காணத் துடிக்கும் ஒரு பாசத்தின் பரிதவிப்பு. புத்தகம் வந்ததும் அட! நாமும் ஒரு புத்தகத்திற்கு ஆசிரியர் என்ற பெருமை! இதற்குள் மிக நெருங்கின அறிஞர்கள் சிலர் தங்களின் பார்வைகளில் பட்ட திருத்தங்களை இனிப்பு பூசின நல்மருந்துகளாக்கின அன்பளிப்பு! மூத்தவர்களின் படைப்புகளை பல்வேறு விமர்சனங்கள் கிழி கிழியென்று கிழிக்கும்போது வியப்பு, பயம். இருப்பினும் மீண்டும் எழுத ஓர் உந்துதல், ஆனால் அதன் வேகம் அப்போது குறையும். மருத்துவம் தந்த அறிஞர்கள் தங்களுடைய மனதிற்குள் இதைக் கண்டு பாராட்டுவார்கள். ஆனால் அடுத்த தொகுப்பிற்காக காத்திருப்பார்கள். இப்படியாக சில கவிதைத்தொகுப்புகள் வெளியிட்ட பின்னர் போதுமடா என்றிருக்க, "இன்று" என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி என் நண்பரும் சகோதருமான அழகி டாட் காம் நிறுவனர், திரு பா. விஸ்வநாதனிடம் காட்டினேன். அவர் அந்த கவிதையை வாசித்து, ரசித்து, உண்மையான தனது பாராட்டுககளை தெரிவித்தது மட்டுமன்றி 200க்கும் மேற்பட்டவர்களுக்கு அந்த கவிதையை அனுப்பி என் நண்பன், திரு என் சுரேஷின் இந்த கவிதையை வாசித்துப் பாருங்கள் என்றார். அந்த கூட்டத்தில் பலர் தமிழ் மொழியை நன்கு கற்றவர்க்ள், அறிஞர் பெருமக்கள். சிலர் பின்னூட்டமிட்டும் மற்றவர்கள் தொலைபேசியில் அழைத்தும் பாராட்டினார்கள். கவிதையை இன்னமும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன், ஒரு நல்ல ரசிகனாக இருந்துபோகிறேன் என்ற எனது நிலைபாடு தவறென்றார்கள் அறிஞர்கள் பலர். பாதைப்போட்டுக்கொண்டே பயனமிடு என்றார்கள் சிலர்.

கவிதைகளை எழுதுவது என்பது எனக்கு முதலிரவின் முதல் இன்பம் போன்றது. ஆனால் கவிதைத்தொகுப்பு புத்தகமாக வெளிவர ஒவ்வொன்றும் தலைப்பிரசவம். அப்படியாக இதோ எனது அடுத்த கவிதைத் தொகுப்பு - " பொன்மாலைப் பொழுது" நேற்று பிறந்துள்ளது. எனது கவிதைகளை மிகவும் ரசித்து வாசிக்கும் சில முதியோர் இல்லத்து தெய்வங்களுக்கும், ஆனாதை விடுதியில் தங்கிப் படிக்கும் சில மாணவச் செல்வங்களுக்கும், எனக்கு ஊக்கம் தந்து தொடர்ந்து எழுத அறிவுரை கூறிவரும் எனது சகோதரர்கள் திரு. ஆல்பர்ட், திரு. சக்தி சக்திதாசன், திரு. பா. விஸ்வநாதன் திரு ஆசிப் மீரான் ஆகியோருக்கும் எனது நன்றிகள் பல! எனது தமிழ் ஆசிரியர் திரு. கே இராஜேந்திரன் ஐயாவிற்கும் வெளியீட்டாளர்களுக்கும் இதை தொகுப்பு செய்து உதவிய தம்பி சுந்தர் அவர்களுக்கும், அச்சகத்தில் எனக்காக வியர்வை சிந்திய என் ஏழையின சகோதர சகோதரிகளுக்கும் நான் நன்றி பாராட்டி மகிழ்கிறேன். பணம் இருக்கும் திமிரில் புத்த்கமா எழுதித் தள்ளுகிறான் இவன் என்று என் வங்கிக் கணக்கு பார்க்காமல் என்னை கோடீஸ்வரனாக்கும் சில அறிவுஜீவிகளுக்கும் நான் நன்றி சொல்கிறேன். என்னைப் பற்றின் சில அறியாமை சிலரிடம் அப்படியே இருந்துபோவதில் சில நன்மைகள் இருக்கத் தானே செய்கிறது! இந்த புத்தகத்தை "எனது எல்லா புத்தகங்களையும் வாசித்து வெற்றியடையச் செய்த வாசகர்களுக்கு" நன்றியோடு சமர்ப்பணம் செய்துள்ளேன். இந்த புத்தகம் திருமகள் நிலையத்தார் வெளியிட்டுள்ளார்கள், இந்த புத்தகம் உலகெங்கும் தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் ஏறத்தாழ எல்லா கடைகளில் கிடைக்கும்.

தோழமையுடன் என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments


Anonymous commented:
very nice sir, I like this story

பூங்குழலி commented:
கண் கலங்குது ணா

ராமலக்ஷ்மி commented:
சிறப்பான அணிந்துரை. பகிர்வுக்கு நன்றி.நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

cheena (சீனா) commented:
This comment has been hidden from the blog.

அன்புடன் அருணா commented:
பூங்கொத்தும் வாழ்த்துக்களும்!!!

அறநெறி முனைவர் க. பழனிச்சாமி commented:
This comment has been hidden from the blog.

vetha (kovaikkavi) commented:
vaalthukalhttp://www.kovaikkavi.woedpress.com

N Suresh commented:
மிக்க நன்றி அம்மா!பேரன்புடன் என் சுரேஷ்

vetha (kovaikkavi) commented:
இனிய சுதந்திர தின வாழ்த்துகள் டென்மார்க்கிலிருந்து.வேதா. இலங்காதிலகம்.http://www,kovaikkavi.wordpress.com

N Suresh commented:
மிக்க நன்றி திருமதி ரமலக்ஷ்மி அவர்களே!

N Suresh commented:
This comment has been hidden from the blog.

Anonymous commented:
This comment has been hidden from the blog.

Dhavappudhalvan commented:
This comment has been hidden from the blog.

Rathnavel Natarajan commented:
This comment has been hidden from the blog.

vetha (kovaikkavi) commented:
This comment has been hidden from the blog.

vetha (kovaikkavi) commented:
This comment has been hidden from the blog.

vettha.(kovaikavi) commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh.

vettha.(kovaikavi) commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh

Anonymous commented:
அருமையாகத் தொடுக்கப்பட்டி அளிக்கப்படுள்ளது.nanry suresh.....

ராமலக்ஷ்மி commented:
தற்சமயம் நலம் என்பதறிந்து ஆறுதல். கடவுளுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி commented:
மிக நன்று. நல்வாழ்த்துக்கள்!

Shakthiprabha (Prabha Sridhar) commented:
அருமை. வாழ்த்துக்கள். புத்தாண்டுக்கு புதுப் பொலிவுடன் துவக்கம்.

சமுத்ரா commented:
வாழ்த்துக்கள்

Anonymous commented:
GOD created every man as a gift to another man and the only thing we have to share with each other is LOVE.Thats what Lord extracted in TEN COMMANDMENTS.

Shakthiprabha (Prabha Sridhar) commented:
வாழ்த்துக்கள் :)