Sunday, August 29, 2010

வரப்போகும் தமிழகத் தேர்தல்..... இன்றைய பார்வையில்....!


ஒவ்வொரு கட்சியும் இப்போது கூட்டம் போட்டு ஓரு பேரலை வந்தது போல் மக்களுக்கு ஒரு தோற்றத்தைத் தறக்கூடும்!

ஆனால் அந்த பேரலை ஓட்டுகளாக மாறுமா என்ற சந்தேகம் கடலுகளக்கே தெரியாத ஒன்று!

திராவிட கட்சிகளோடு ஒன்று சேராமல் எந்த கட்சிக்கும் மாபெரும் வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்று கடந்த தேர்தல் நிரூபித்து விட்டது!

தற்போதைய அரசு, அடிப்படை ஏழை மக்களுக்கு இலவசங்களால் மனநிறைவு கொடுத்துள்ளது எல்லா விமர்சனங்களையும் தாண்டின ஓர் உண்மை!

ஏழை எளிய மக்கள் தான் அதிகமும் வெயிலில்/மழையில் வரிசைகளில் நின்று ஓட்டு போட முன் வருபவர்கள் என்பது நமக்கெல்லாம் நன்றாக தெரிந்த விஷயம்.

விமர்சன விரும்பிகளில் அதிகமும் NDTV 24 x7 - ஐ குளிர் அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்!

இலவசம் பெற்று மனநிறைவு பெற்றவர்களின் ஓட்டுகள் இந்த அரசிற்கு கிடைக்க வாய்புண்டு.

இந்த அரசு இந்த முறை சொன்னதை செய்தது! சொல்லாத பல புதிய திட்டங்களையும் செயல் படுத்தி உள்ளது!

நீண்ட பட்டியல்களை எல்லோரும் எங்கும் கேட்டிருக்ககூடும் என்பதால் நான் மீண்டு அதை இங்கே பதிவு செய்யவில்லை.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் என பல இலவசங்கள்... இதையெல்லாம் ஓட்டு வாங்க என்று சொன்னாலும் கலைஞர் காப்பீடு திட்டம் போன்றவைகள் மக்களிடம் பெருமளவு ஆதரவை தந்துள்ளது!

கலைஞர் ஐயாவின் வயது ஒரு மாற்றத்தை கொண்டு வர மக்கள் மனதில் எண்ணம் எழுந்தாலும் திரு ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் ஆதரவு சிறப்பாக உள்ளதாகத் தான் பொதுவாக சொல்லப்படுகிறது.

தனித்தனியாக கட்சிகள் களத்தில் இறங்கினால் ஓட்டுகள் சிதறி யாருக்கும் வெற்றியைத் தராது என்பதால் யார் யாரோடு இணைவார்கள் என்று தான் மக்களின் கவனம்.

மாற்றங்கள் மக்கள் விரும்பலாம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

ஓட்டு போட எல்லோரும் முன் வர வேண்டும்.

வெறும் 45 அல்லது 55 விழுக்காடு மட்டும் பதிவான ஓட்டுக்களை வைத்துக்கொண்டு வெற்றிகளை தீர்மானித்து ஒரு கட்சியிடம் அல்லது ஒரு கூட்டணியிடம் இதோ இந்த நாட்டை ஆண்டு கொள் என்று சொல்வது மிகவும் கவலைக்குறியது!

காங்கிரஸ் கட்சி, தமிழக ஆட்சியைப் பிடிக்க வரப்போகும் தேர்தலிலும் வாய்ப்பே இல்லை.

எந்த கட்சி/கூட்டணி தமிழகத்தை ஆண்டால் என்ன?

கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்கள் தந்த நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் காண என் போன்றோருக்கு ஆசை இல்லாமல் இல்லை!

எது நடக்க வேண்டுமோ
அது நன்றாகவே நடக்கட்டும்!

என் சுரேஷ்
யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்ற குழப்பத்தில் இருக்கும் உங்களில் ஒருவன்:-)

Tuesday, August 24, 2010

அந்தோணி முத்துவை சொர்கத்தில் சந்திப்போம்...



அந்தோணி முத்து!

25 வருடங்களுக்கு மேல் படுத்த படுக்கையாக அந்தோணி என்ற ஒருவர் இருப்பதாக (அழகி தமிழ் - பா விஸ்வாநாதன் மூலம்) அறிந்ததும் எனது ஆசிரியர் மைக்கல்ராஜ், தாயார் திருமதி சுமதி மைக்கல்ராஜ், மற்றும் எனது மனைவி திருமதி விஜயலக்ஷ்மி சுரேஷ் - நாங்கள் மூவரும் அவரைக் காண ரெட் ஹில்ஸ் என்ற இடத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்று நேரடியாக கண்டு வந்தோம்.

"யாரிவர் " என்ற கவிதை ஒன்றை எழுதி வலைப்பதிவு நண்பர்களிடம் அந்தோணி முத்துவைப் பற்றி அறிவித்தேன். அவரின் நிலைப் பற்றி நான் அனுப்பின புகைப்படங்களும் சொல்ல முடியாத செய்திகளை அறிவித்தன!

வலைப்பதிவாளர்கள், அழகி தமிழ்- பா விஸ்வநாதன், சிங்கப்பூர் அன்பு, சீனா ஐயா, சக்தி ஐயா, ஆல்பர்ட் அண்ணன், என்றென்றும் அன்புடன் பாலா, ஹரன் (துபாய்) என பலநூறு பேர்கள் என்றென்றும் பாலாவின் வங்கி வழியாகவும் பிறகு அந்தோணிக்கு நேரடியாகவும் உதவி செய்தனர். (எனது மனநிலை கவலையால் இருப்பதால் பலருடைய பெயர்கள் விட்டுப்போய் விட்டது, தயவாக மன்னிக்கவும்)

தேவையான மடிகணினி, இயந்திர நாற்காலி என அடிப்படை தேவைகள் முடிந்த அளவு வலைதள நண்பர்களும் மற்ற பல அன்புள்ளங்களம் அளித்து அந்தோணி சந்தோஷமாக இருந்தார்.

இருள் நிறைந்த அறை விட்டு இயந்திர நாற்காலியில் தானே வெளியேச் சென்று தினமும் சூரியனைக் கண்டு வரும் மகிழ்ச்சி நிறைந்த சந்தோஷ வார்த்தைகள் மறக்க முடியாதவை!

என்னை மகனாக நேசிக்கும் திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் எனக்கு ஒரு மடல் எழுதி ( அப்போது அவர் துபாயில் இருந்தார்) திரு. வி.கெ.டி பாலன் ஐயாவை தொடர்பு செய்யச் சொன்னர். செய்தேன்!

திரு.வி.கே.டி. பாலன் ஐயா அவர் மக்கள் தொலைக்காட்சியில் அந்தோணி முத்துவை நேர்காணல் செய்து இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி அந்தோணி, அந்தோணியின் வீட்டிலிருந்து கொண்டே ஒரு வேலை செய்யும் சௌகரியத்தையும் செய்து கொடுத்து மதுரா க்ரூப் என்ற அவருடைய நிறுவனத்திலிருந்து அன்று முதல் தனது சிறப்பான ஓர் தொழிலாளியாக நியமித்து கௌரவித்தார்

இந்நேரத்தில் திரு அப்துல் ஜப்பார் ஐயாவையும் திரு வி.கே.டி பாலன் ஐயாவையும் நன்றியோடு வணங்குகிறேன்!

ஏறத்தாழ எல்லா நாளேடுகளும், வார இதழ்களும் அந்தோணியின் நேர்காணலை பதிவு செய்தது.

இணயதளத்தோடு அல்ல, தமிழோடு இணையதளத்தை தொடர்பு கொண்ட பிற்கு, அந்தோணிக்கு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் மிக மிக சந்தோஷமாக இருந்தது.

எனக்கு நேரம் இல்லாத தவிக்கும் போதெல்லாம் வலைப்பதிவாளர் திருமதி அருணா அவர்களோடு அந்தோணியிடம் பேச சொல்வேன். அவர்கள் முடிந்த போதெல்லாம்
பேசி வந்தார். திருமதி அருணா அப்படி ஒரு தாயன்பு கொண்டவர்!


கழுத்திற்கு கீழ் இரண்டு கைகளைத் தவிற எல்லாம் வேலை செய்யாத போதும் உழைத்து வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்த அந்தோணி முத்து கடந்த ஓரிரு மாதங்களாக எப்போதும் ஏற்படும் மூச்சுத் திணறல் ( வீசிங்க் ) காரணமாக கஷ்ட்டப்பட்டு வந்தார். குடும்பத்தாரோடு சேர்ந்து நாங்களும் இது எப்போதும் போல் சரியாகி விடும் என்று நினைத்தோம்.

அந்தோணி அதிகமாக கஷ்ட்டப்படுவதைக் கண்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்படு அவருக்கு தீவிர சிகிட்சை அளித்து வந்த போதும் நிர்பந்தமாக அவர் தனது இல்லத்தின் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் தன்னை கொண்ட செல்ல அடம் பிடித்த போது வேறுவழியின்றி அவருடைய குடும்பத்தர் அதற்கு சம்மதித்தனர்.

விஷயம் தெரிந்ததும் திரு பாலன் ஐயாவோடு தொடர்பு கொண்டேன். அத்தனை மருத்தவ தகவல்களை அவரிடம் சேர்க்க ஏற்பாடு செய்யச் சொன்னார், செய்தேன்.

எனது தற்போதைய வேலை அழுத்தம் காரணமாக அந்தோணியை மருத்துவமனை சென்று காண முடியவில்லை என்ற குற்ற உணர்வு என்னை கொன்று கொண்டிருந்தது. இருப்பினும் என்னால் முடிந்தவைகளை எல்லாம் தொலைபேசி வழி செய்து வந்தேன்.

அந்தோணி முத்துவின் சகோதரிகளில் ஒருவர் (திருச்சபை கன்னியஸ்த்ரி) அவர்களின் பரிந்துரையின் பேரில் நேற்று காலை இசபெல்லா மருத்துவமனைக்கு அந்தோணியை மாற்ற தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகள் செய்யும் நேரம் இதற்குமேல் அந்தோணி கஷட்டப்பட வேண்டாம் என்று அவரின் அழகிய உயிர் மலரை இறைவன் இந்த புமியின் மனிதத்தோட்டங்களிலிருந்து எடுத்துக்கொண்டார்.

ஆரம்பம் முதல் நேற்று வரை அந்தோணியை நேரடியாக சந்தித்தோர், உதவி செய்தோர் என எல்லோருக்கும் எனது நன்றிகளை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்.

நமக்கெல்லாம் புண்ணியம் கிடைக்கத் தான் இறைவன் அந்தோணி முத்துவைப் போன்றோரை படைக்கிறார் என்றும் இதுபோன்று கஷ்ட்டப்படுபவர்கள் அதிக காலம் வாழ்வதில்லை என்றும் என் மனது சொன்னது!

அந்தோணி இனி இங்கு இல்லை என்ற விஷயம் தெரிந்ததும், திரு பாலன் ஐயா, " சுரேஷ், அந்தோணியின் வலியும் கஷ்ட்டமும் அவருக்கு மட்டுமே தெரியும். இறைவன் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ அதை சரியாக் செய்வார், நீங்கள் தயவாக உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருங்கள்" என்று மிக மிக உறுதியோடு என் இதயத்தில் பதிவு செய்தார்.

என்னை தொடர்பு கொண்ட பலருக்கும் பாலன் ஐயா சொன்ன அதே வாசகத்தை சொல்லிக்கொண்டே என்னை ஆறுதல் செய்தேன்

இன்று மீண்டும் அந்தோணியின் வலைதளத்தை பார்த்தேன்.

இந்த பதிவு எழுதும் நேரம் தற்போது அவருடைய இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கிறது!
இதை வாசித்து ஒரு நொடி நீங்கள் கண்களளை மூடி அந்தோணியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய அன்போடு அழைக்கிறேன்!

இனி என்று?

இன்றாவது அந்தோணியின் வலைப்பூவை வாசியுங்கள். மரணம் ஒருவனின் எழுத்தை கோபுரத்திற்கு கொண்டு போகும். அந்தோணி உயிருடன் தற்போது இல்லை என்றாலும், அந்தோணி முத்து என்ற அவருடைய பெயர் கோபுரத்தில் எழுதப்படட்டும் உங்களால்!

அவரின் வலைப்பூ http://positiveanthonytamil.blogspot.com/2008/03/blog-post_23.html

என்றென்றும் அன்புடன்
என் சுரேஷ்

பின் குறிப்பு: நான் ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய ஆர்ம்பிக்கும்போதும் அதை ஒரு ப்ராஜக்ட் என்பேன். முடிந்ததும் ப்ராஜக்ட் ஓவர் என்பேன். ஆனால் அந்தோணியின் ப்ராஜக்ட் தீரவில்லை, அதை இறைவனின் பாதத்தில் தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன். மரணத்திற்கு பிறகு ஆத்மா இறைவனிடம் செல்லும் என்பது உண்மையெனில் எனக்கு இனி அந்தோணியைப் பற்றி கவலையில்லை!

அந்தோணியை நாம் சொர்கத்தில் சந்திப்போம்!

Thursday, August 19, 2010

வழக்கறிஞர் தீபிகாவிற்கு திறந்த ஒரு மடல்...

அன்பினிய என் தங்கை திருமதி தீபிகா அவர்களுக்கு,

இன்று உங்கள் பிறந்த நாள் என்று என்றோ அறிந்து வைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம் இன்று!

மீண்டும் உங்களுக்கான எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை இந்த மடல் வழியாக தெரிவித்து மகிழ்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்த சமாதானமும் தரவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

2010 -ல் இறைவன் எனக்கு அளித்த பல முக்கிய பரிசுகளில் தங்கை தீபிகா, நீங்கள் முக்கியமான ஒன்று!

துடிப்பும் தெளிவும் நிறைந்த அறிவாற்றல் நிறைந்த பேச்சு, கடின உழைப்பு, கடந்து வந்த பாதைகளை மறவாமால் அடுத்தவர்களுக்கு உதவும் அன்புள்ளம், நகைச்சுவை உணர்வு, தைரியம் என நீண்டதொரு சிறப்பு பட்டியலுக்கு சொந்தக்காரி நீங்கள் என்றும் இந்த பூமிக்கு ஒரு முக்கிய சொத்து என்றால் அது மிகையாகாது!

இப்படித் தான் வழக்கறிஞர்கள் என்ற சாதாரண மனிதனின் புரிதல்களுக்கு வியப்பளிக்கிறது உங்களுடைய சேவைகள்.

ஏழ்மை தந்த பசி அறிந்த ஒருவருக்கே இன்னொருவரின் பசி கண்டு உதவ முன் வர முடியும்.
அந்த வகையில் நீங்கள் பலருக்கு செய்து வரும் உதவிகளைக் கண்டு பாராட்டாமல் இருக்க முடியுமா?

மாநாகராட்சி பள்ளிகளில் படிக்கும் எங்கள் சமுதாயத்தின் (ஏழை எளிய) பிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லிக்கொடுக்கும் முதல் வழக்கறிஞரை நான் உங்களில் தான் வியப்போடு பார்க்கிறேன், பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன், ஆகையால் பாராட்டுகிறேன்!

பணம் பணம் பணம் என்ற ஒற்றை விஷத்திற்கு மட்டுமே பின்னர்/ முன்னர் போகும் இந்த சமுதாயத்தில், உணவில் உப்பைப் போன்று மட்டுமே பணம் போதும்; உப்பே உணவாக்கும் கொடுமை நமக்கெதற்கு என்ற கருத்தை நடைமுறை படுத்தும் உங்கள் வாழ்க்கை முறையும் சிறப்பானதே!

திரு பார்வேந்தன் அவர்களை நான் சந்திக்க நீங்கள் எடுத்த முயற்சி, அதில் எனது சந்தோஷம் கண்டு உங்களின் மகிழ்ச்சி - இதை எந்நாளும் நான் நன்றியோடு நினைத்துப்பார்ப்பேன்!

நாம் யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேச இந்த காலம் நமக்கு துணைவருவதில்லை என்பது கசப்பான ஓர் உண்மை தான்!
இருப்பினும் முயற்சி செய்வோம்.

இதுவரை நீங்கள் சந்தித்த வழக்குகளில் மறக்க முடியாதவைகள் யாது என்றெல்லாம் உங்களிடமிருந்தும் கேட்டறிந்து இன்னமும் கொஞ்சம் ஆழமான எனது சமுதாய தரிசனங்களுக்கு உங்கள் கருத்துக்கள் எனக்கு உதவிட காலம் கனியட்டும்!

என் தம்பிகள் சுரேஷ், முத்து, மற்றும் தங்கை மேகலா போன்றோர்களுக்கு வேலைகள் கொடுத்து, அவர்களில் நீங்கள் காட்டும் அன்பும் நலனும் கண்டிப்பும் கண்டு சந்தோஷப்படுகிறேன்.

உங்களினிய குடும்பத்தார் அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புகள்!

உங்களுக்கு நிச்சயம் நல்ல ஒரு எதிர்காலம் இறைவன் அளிப்பார் என்ற நம்பிக்கையில் மீண்டும் வாழ்த்துகிறேன் தங்கையே! நீங்கள் நீடூழி வாழ்க! வாழ்க வளமுடன்

என்றென்றும் பேரன்புடன்
உங்கள் அன்பு அண்ணன்
என் சுரேஷ்

Tuesday, August 10, 2010

அன்பின் உலகம்...

வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல
புரட்சியில் வெற்றி காண வேண்டியவை!
ஆனால்…

அதே புரட்சி வார்த்தைகளால்
நாடுகள் பல விடுதலை அடைந்தும்
சுதந்திரம்
அடுத்த அதிகாரத்திற்கு
அடிமையாகிறதே!

தங்களின் கூர்மை தந்தங்களை மறந்து போய்
மரத்தடிகளை சுமக்கும் யானைகள் கூட
மனித அடிமைகளைக் கண்டு
கவலைப்படுவதுண்டு
பரிகசிப்பதுமுண்டு!

இது தான் சம்பளம்
பிடிக்கவில்லை எனில் வெளியே போ - என
கர்ஜிக்கும் அக்னி வார்த்தைகளால்
கவலையில் எரிகிறது
ஏழை அடிமைகளின்
வயிறும் சுயமரியாதையும் அடுப்பும்!

இன்னமும் உலகில்
எத்தனை கோடி அடிமைகள்!
அழுது தீர்க்க வேண்டியவைகள் தானா
ஏழைகளின் ஆயுட்காலம் ?

தவறுகளை தவறாமல் நியாயப்படுத்தி
ஏழ்மைக்கு மீண்டும்
ஏழ்மை கொடுத்து அடிமைப்படுத்தி
மகிழும் அதிகார துரோகிகள்
தங்கள் தவறுகளை உணரும் நேரம்-வாழ்க்கை
கடலைக் கடந்த மீனாகத்
துடிக்குமென்பதை அறியாதவர்கள்!

தெயவமாக வேண்டாம்
மிருகமென்று சொல்லி
மிருகங்களையும்
அவமானப்படுத்த வேண்டாம்
மனிதா! நீ மனிதனாக இரு!

காலம் இன்னமும் காத்திருக்கிறது
அமைதியும் சுதந்திரமும் நிறைந்த
அன்பின் உலகம் கண்டு மகிழ!

Friday, August 6, 2010

K ஜான்...

திரு. K. ஜான் என்பவர், Haemophilia என்ற நோயால் கஷ்ட்டப்படுகிறார்.

இரத்தத்தில் K- பேக்டரின் குறைவு தான் இந்த நோய்க்கு காரணம்.

உடலில் அடிபட்டு இரத்தக்கசிவு ஏற்பட்டால் என்னதான் கட்டு போட்டாலும் இரத்தம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள "Factor 8" என்ற ஊசி போட்டால் மட்டுமே இரத்தக் கசிவு நிற்கும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோன பலரின் சொத்துக்கள்/ நண்கொடைகள் வைத்துக்கொண்டு Haemophilia Society என்ற ஓர் அமைப்பு ஜான் போன்றோருக்கு ரூபாய் மூவாயிரம் ரூபாய்க்கு இந்த ஊசி குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் சென்னை அலுவலகம், தரமணியில் உள்ள VHS மருத்துவமனையில் உள்ளது.

என்ன தான் ஏழ்மையில் வாடினாலும் தன்னிடம் ஒரு மூவாயிரம் ரூபாய் எப்போதும் ஜான் வைப்பது வழக்கம். அவ்வப்போது ஆபத்து வரும் வேளைகளில் அந்தப் பணம் கொண்டு ஊசிபோட்டு இரத்தக் கசிவை நிற்க வைப்பது பல காலங்களாக நடந்து வருகின்ற ஒன்று. தொடர்ந்து சிறிய சம்பளத்தில் பல காலங்களாக வேலையும் செய்து வந்தார், அவருடைய தற்போதைய வயது 43. படிப்பு 12 ஆம் வகுப்பு வரை!

அண்மையில் ஓர் விபத்தில் சிக்கிக்கொண்ட ஜானிற்கு இடுப்பு, கால்கள் என பல இடங்களில் இரத்தம் கட்டிக்கொண்டு VHS மருத்துவமனையில் தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வந்தது. Haemophilia Society மூலமாக இவருக்கு பலமுறை ஊசிகள் குறைந்த விலையில் (மூவாயிரம் ரூபாய்க்கு) கொடுக்கப்பட்டது.

மொத்தச் செலவு 12000 ரூபாய்க்கு மேலாயிற்று. தன்னிடம் இருந்த 2000 ரூபாய் அடைத்து விட்டு, பாக்கி மாதாமாதம் கட்டிக்கொள்கிறேன் என்ற ஜானின் விண்ணப்பத்தின் அடிப்படையில், அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்று அங்கிருந்து மருந்தோடு ஓய்வும் எடுத்து வருகிறார். ஆனால் மருந்திற்கும் குடும்பச்செலவிற்கும் பொருளாதாரம் போதவில்லை.

இவருக்கு தற்போது வேலையும் இல்லை என்பது இன்னொரு கவலை. அப்படியே வேலை கிடைத்தாலும் உடனடியாக அவர் வேலைக்கு செல்ல இயலாத நிலை. கைத்தடி வைத்துத் தான் அவருக்கு தற்போது நடக்க முடிகிறது.

இவரின் மனைவி, சாதாரண பள்ளி ஒன்றில் ஆசிரியை. அந்த குறைந்த வருமானத்தில், வாடகையும் கொடுத்து, தங்களின் மகளை பன்னிரண்டாவது படிக்க வைத்து வாழ இந்த குடும்பம் மிகவும் கஷ்ட்டப்படுகிறது.

நோயும், வறுமையும் ஒன்று கூடினால், கொடுமை தான்!

இன்னொரு மனிதன் உயிரோடு இருக்கும் வரை யாரும் அனாதை அல்ல!

நேரடியாக ஜானை சந்திக்க விரும்புவோர் அவரை அவரது இல்லத்தில் சந்திக்கலாம். அவருடைய விலாசம்:

கெ. ஜான்
54/43, வெங்கடபத்தன் தெரு
புரசைவாக்கம், சென்னை -7

பேசி ஆறுதல் கூற நினைப்பவர்கள் அவரை 9840910567 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அவருக்கு பொருளாதார உதவி செய்ய விரும்புவோருக்கு அவருடைய வங்கி சம்பந்தப்பட்ட தகவல்கள்:

K John
Catholic Syrian Bank
Annanagar Branch, Chennai 600 102
Savings Bank Account Number 20070619
IFSC Code Number: CSBK0000320
குறிப்பு: பணம் அனுப்பின செய்தியை ஜானிற்கு தயவாக தெரிவிக்கவும்.


மருத்துவச் செலவிற்கு நேரடியாக Haemophilia Society -க்கு பணம் அனுப்பி உதவ நினைப்பவர்களுக்கு தேவையான தகவல்கள்:

Haemophilia Society - Madras Chapter
Indian Overseas Bank
VHS Branch ( Branch Code 1744)
SB Account No.174401000000903
IFSC Code Number :IOBA0001744

குறிப்பு: பணம் அனுப்பின செய்தியை ஜானிற்கு தயவாக தெரிவிக்கவும்.
Heamophilia Society Contact Persons: Mr.Parthasarathy or/ and Mr.Vydyanathan
Address: Heamophilia Society- Madras Chapter, VHS Hospital Campus, Taramani,
Phone Number 22541652 / 9444014281


"அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது
நான்குமறை தீர்ப்பு,.."



அன்புடன்
என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments