Saturday, March 29, 2008

எல்லோருக்கும் தந்தை இறைவன்!



மேல்நாட்டு கலாச்சாரங்களுக்கு அடிமையாகிக் கொண்டே போகும் நமது சமுதாயத்தில் ஒவ்வொரு முக்கிய உறவின் பெயரிலும் வருடத்தில் ஓர் நாள் என்று கொண்டாடும் பழக்கம் கடந்த பத்து-பதினைந்து வருடங்களாக நமது நாட்டிலும் வளர்ந்து கொண்டே வருகிறது.

"காதலர் தினம்" எனத் தொடங்கி பெற்றோர்களுக்கும் வருடத்தில் ஒரு நாளென "அன்னையர் தினம்", "தந்தையர் தினம்" என்று கொண்டாடி வருகிறார்கள். இந்த கொண்டாட்டங்களின் மீது சமுதாய சீர்திருத்த நல்லோர்களுக்கு எதிர்ப்பிருந்தாலும் அவர்கள் இதைப் பற்றி ஒரு கருத்தும் சொல்லாமலிருக்க காரணம் என்னவென்றால் வருடத்தில் ஒரு நாளாவது தாய்-தந்தையருக்கு அனபைத் தெரிவித்து இந்த காலத்து பிள்ளைகளில் சிலர் மகிழவைப்பதை ஏன் தடுக்க வேண்டும் என்ற நல்லதோர் சிந்தனைக்கு தள்ளப்பட்டதினால் தான்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை "தந்தையர் தினம்" கொண்டாட 1924-இல் அமெரிக்க அதிபர் கால்லின் கூலிட்ஜ் தனது ஆதரவை தெரிவிக்க 1966-இல் அதிபர் லிண்டன் ஜான்ஸன் அதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆயினும் அவ்வருடத்திற்கு மட்டுமே இருந்தது. பின்னர் ஏப்ரில் 24, 1972-இல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன், "தந்தையர் தினம்" ஒவ்வொரு வருடமும் நினைவுகூரத் தக்கதாக அறிவித்தார்.

தந்தையர் தினத்தன்று தந்தையார் உயிருடன் இருப்பின் சிவப்பு நிற ரோஜாவும், தந்தையர் மறைந்துவிட்டால் வெள்ளை நிற ரோஜாவும் அணிவார்கள். தந்தையர் தின உணவை தந்தையே சமைத்து பரிமாறுவது இத்தினத்தில் மற்றுமோர் சிறப்பாகும்.

அனாதை இல்லத்துக் குழந்தைகள் எந்த நிற ரோஜாவை அணிய வேண்டும்?

தந்தை யாரென்றே தெரியாமல், அவரின் அன்பை உணர முடியாமல், தாயின் பாச ஸ்பரிசமென்றால் என்னவென்று கேட்கும் அனாதை இல்லத்துக் குழந்தைகளுக்கு இந்த "தந்தையர் தினம்" எவ்வளவு மனவலியை தரும் என்று யோசித்தால் யாருக்கும் மனமுருகும்; கண்ணீர் முந்தி விடும்.

இன்று உலகமெங்கும் எத்தனை கோடி அனாதைக் குழந்தைகள்!

இவர்களைக் காண வரும் பொதுமக்களில் எத்தனை பேர் உண்மைத் தாய்ப் பாசத்தோடும் தந்தைப் பாசத்தோடும் வருகிறார்கள்?

தங்களின் குடும்பத்தில் யாருக்காவது பிறந்த நாளென்றால், அந்த நாளன்று புண்ணியம் வேண்டுமென்ற சுயநலத்தின் எதிர்பார்ப்போடு என்று பிறந்தோம் யாருக்கு பிறந்தோம் என்ற உண்மை கூடத் தெரியாத அனாதைக் குழந்தைகளுக்கு உணவுப் பொட்டலங்களையோ, இனிப்புப் பொட்டலங்களையோ செயற்கைப் புன்னகையோடு வீசியெறிந்து அல்லது அதற்கான பணத்தைக் கொடுத்து ரசீதை வாங்கி, கண்டிப்பாய் ரசீது வாங்கி ( வறுமான வரி விலக்கு பயன்பெற!) வீடு திரும்புவோர் பலர்!

ஆனால் அந்தக் குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மனமுள்ளவர்கள் எத்தனை பேர்?

அனாதை இல்லத்திற்கு வருகின்றவர்களைக் காணும்போது "இன்றாவது தனக்கு ஒரு தாயும் தந்தையும் குடும்பமும் கிடைக்காதா" என்ற எதிர்பார்ப்பையும் ஏக்கங்களையும் ஒவ்வொரு அனாதைக் குழந்தையுடைய கண்களிலும் காணலாம். அனால் அந்த எதிர்பர்ப்புகளுக்கு பரிசாக அதிக வேளைகளும் இவர்களுக்கு கிடைப்பது விலை குறைந்த உணவுப் பொட்டலங்களும், இனிப்புப் பொட்டலங்களும், ஆங்காங்கே கிழிந்த பழைய ஆடைகளும் தான்.

அனாதை இல்லத்துக் குழந்தைகளுக்கு அதிகமும் தேவை அன்பும் ஆதரவும் நிறைந்த மனிதர்களின் நேசம் மட்டும் தான்.

அனாதை இல்லத்தார் தங்களால் முடிந்த உணவும், ஆடையும், கல்வியும் அந்த குழைந்தகளுக்குக் கொடுத்து வருகிறார்கள். ஆனாதை இல்லங்களுக்காக தங்களையே அர்ப்பணம் செய்து வேலை செய்து வரும் சிலருக்கு அங்கிருக்கும் வேலைகளை செய்யவே நேரமில்லாத ஒரு நிலை. அதனால் பொதுமக்கள் இந்த பிஞ்சுக் குழந்தைகளைக் காணும்போது அவர்களை அள்ளியெடுத்து முத்தமிட்டு, எவ்வளவு பாசம் கொடுக்க முடியுமோ அவ்வளவு பாசம் கொடுத்து மகிழ்விக்க வேண்டும். இதைத் தான் அந்த இல்லத்துக் குழந்தைகளின் மனங்கள் எதிர்பார்க்கின்றன.

பிள்ளைகள் இல்லாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் இருந்தும் செல்வச் செழிப்பில் மகிழ்ந்து வாழும் தம்பதியர்கள் அனாதை இல்லத்திலிருந்து குழந்தைகளை தத்தெடுத்து அந்தக் குழந்தைகளையும் அன்புடன் நேசிக்கும் மனம் உலகமெங்கும் மிகவும் குறைவாகவே உள்ளது.

பொதுமக்கள் அனாதைப் பிள்ளைகளை அதிகமாக நேசிப்பது குறைவு என்பதை விட, எந்த குழந்தையும் தான் ஒரு அனாதையாக விரும்புவதில்லை, என்ற உண்மையை அறியாமல் இருப்பதே மிகவும் வருத்தப்பட வேண்டிய உண்மை!

அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போகும்போதே அனாதைகள் போலப் பிள்ளைகள் இருக்கிறார்களே என்று கவலை சங்கீதம் இசைக்கும் இந்த தன்னல சமுதாயம், பெற்றோர்கள் யாரென்றே தெரியாமல் கவலையில் வாடும் இந்த மழலைச் செல்வங்களின் நிலையைப் பற்றி அதிகமாய் ஏனோ யோசிப்பதே இல்லை.

நான், எனது குடும்பம், எனது பிள்ளைகள் எனது வேலை, எனது மகிழ்ச்சி இவைகளைத் தாண்டி, மனிதன், தனது நேசத்தின் வட்டத்தை பெரிதாக்க முயற்சி எடுப்பதே இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

தங்களுக்கு யாருமில்லையே என்று கவலையில் வாழும் அனாதைக் குழந்தைகளோடு பொதுமக்கள் அன்பான நேரத்தை செலவிட்டால், இன்னொரு மனிதன் உயிரோடு இருக்கும் வரை யாரும் அனாதையல்ல என்ற உண்மை, உண்மையாகும்.

அனாதை இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு அன்பில் தான் வறுமை உள்ளது. அதனால் அந்த வறுமையைப் போக்க நல்வழியை எல்லோரும் யோசித்துச் செயல் படுத்தினால் அந்த பிஞ்சு மனங்களில் புத்துணர்வின் ரோஜாத்தோட்டம் தழைத்து வளர்ந்திடும்.

என் சுரேஷ்

21 comments:

enRenRum-anbudan.BALA said...

சுரேஷ்,
சிந்திக்க வைத்த பதிவு, உங்கள் எண்ணங்களுக்கு தலை வணங்குகிறேன் !
எ.அ.பாலா

N Suresh said...

அன்புள்ளம் கொண்ட
சேவைமனமே பாலா,

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

இறைவன் உங்களுக்கு எல்லா ஐஸ்வரியங்களையும் தந்து பலருக்கு தொடர்ந்து உதவிட வாய்ப்பு தர வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

பாசமுடன் - என் சுரேஷ்

தெய்வமகன் said...

//"எனக்கு உறுதியான இறைநம்பிக்கை உண்டு. மதவாதியல்ல, ஆன்மீகவாதி" //

உங்களின் இந்த வரி என்னை மிகவும் கவந்தது சுரேஷ்

SP.VR. SUBBIAH said...

'எல்லோருக்கும் தந்தை இறைவன்'

உங்களுடைய துவக்க வரி' மிக நன்றாக உள்ளது

அசத்துங்க்!

வாழ்த்துக்களுடன்

SP.VR.சுப்பையா

ஷைலஜா said...

நல்லதொரு பதிவு சுரேஷ்..நட்சத்திரமாய் ஒருவாரத்திற்குஜொலிக்கப்போகும் உங்களுக்கு வாழ்த்துகள்!

வினையூக்கி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் என்.சுரேஷ்

அன்புடன்
வினையூக்கி செல்வா

ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்:)


உற்ற உறவுகளுடன் கூடி குதூகலித்திருக்கும் வைபோகங்களில்
உறவற்றவர்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சிகள் பல நடக்கும்போதும் கூட நாமும் அவ்வப்போது உறவற்றவர்களுடன் உறவாடி அவர்க்ளை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற தங்களின் மனகருத்தினை மனமார வாழ்த்துகிறேன்!!!!

மதுமிதா said...

///எந்த குழந்தையும் தான் ஒரு அனாதையாக விரும்புவதில்லை///

///இன்னொரு மனிதன் உயிரோடு இருக்கும் வரை யாரும் அனாதையல்ல ///

///அனாதை இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு அன்பில்தான் வறுமை உள்ளது///

எழுத்து, சிந்தனை சிறந்து மேம்பட்டுள்ளது தெரிகிறது.
நட்சத்திர வாழ்த்துகள் சுரேஷ்.

அன்பினில் செழித்திடும் வையம்.

அன்புடன்
மதுமிதா

முபாரக் said...

வாழ்த்துக்கள் அண்ணா!

சினேகபூர்வம்,
முபாரக்

மணியன் said...

சுரேஷ், இந்த வாரம் இனிமையாக அமைய இறைவன் அருள் உங்களுக்கு நிச்சயமாக உண்டு...வாழ்த்துகள் !!

N Suresh said...

//"எனக்கு உறுதியான இறைநம்பிக்கை உண்டு. மதவாதியல்ல, ஆன்மீகவாதி" //

//உங்களின் இந்த வரி என்னை மிகவும் கவந்தது சுரேஷ்//

அன்புள்ள தெய்வமகன்,

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
எனக்கு உங்களுடைய பெயர் மிகவும் பிடித்துள்ளது.

தோழமையுடன் - என் சுரேஷ்

N Suresh said...

அன்புள்ள
திரு சுப்பைய்யா, திருமதி ஷைலஜா,திரு வினையூக்கி, திகழ்மிளிர்,முபாராக்,

வணக்கம்!

உங்களுடைய வாழ்த்துகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி பல

தோழமையுடன் - என் சுரேஷ்

N Suresh said...

//உற்ற உறவுகளுடன் கூடி குதூகலித்திருக்கும் வைபோகங்களில்
உறவற்றவர்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சிகள் பல நடக்கும்போதும் கூட நாமும் அவ்வப்போது உறவற்றவர்களுடன் உறவாடி அவர்க்ளை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற தங்களின் மனகருத்தினை மனமார வாழ்த்துகிறேன்!!!!//

மிக்க நன்றி திரு ஆயில்யன்

தோழமையுடன் - என் சுரேஷ்

N Suresh said...

//எழுத்து, சிந்தனை சிறந்து மேம்பட்டுள்ளது தெரிகிறது.
நட்சத்திர வாழ்த்துகள் சுரேஷ்.

அன்பினில் செழித்திடும் வையம்.

அன்புடன்
மதுமிதா//

அன்புள்ள மதுமிதா,

வாழ்த்துகளுக்கு நன்றி.

"சுபாஷிதம்" என்ற அருமையான ஒரு படைப்பை தமிழ் மக்களுக்கு தந்த கவிஞர் உங்களை வணங்குகிறேன்.

தோழமையுடன் - என் சுரேஷ்

N Suresh said...

//எழுத்து, சிந்தனை சிறந்து மேம்பட்டுள்ளது தெரிகிறது.
நட்சத்திர வாழ்த்துகள் சுரேஷ்.

அன்பினில் செழித்திடும் வையம்.

அன்புடன்
மதுமிதா//

அன்புள்ள மதுமிதா,

வாழ்த்துகளுக்கு நன்றி.

"சுபாஷிதம்" என்ற அருமையான ஒரு படைப்பை தமிழ் மக்களுக்கு தந்த கவிஞர் உங்களை வணங்குகிறேன்.

தோழமையுடன் - என் சுரேஷ்

N Suresh said...

//சுரேஷ், இந்த வாரம் இனிமையாக அமைய இறைவன் அருள் உங்களுக்கு நிச்சயமாக உண்டு...வாழ்த்துகள் !!//

அன்பு உள்ளம் கொண்ட திரு மணியன் அவர்களே,

உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

தோழமையுடன் - என் சுரேஷ்

Anonymous said...

சுரேஷ்

வழக்கப்படி தாமதமாக வந்திருக்கிறேன்:)

நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்..கவிதைகளும் உண்டுதானே:)

அன்புடன்...ச.சங்கர்

Thamizhan said...

மனித நேயமே மகத்தான பண்பு என்பதை நன்கு எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

பெரியார் பெண் குழந்தைகள் காப்பகம்
ஆரம்பித்து திருச்சி நாகம்மை குழந்தைகள் இல்லம் பல பட்டதாரிகளை,மண மக்களை வளர்த்து வந்திருக்கிறது.திராவிடக் கழகத் தோழர்களும் ஆடம்பரமில்லாமல் அவர்கள் குடும்ப விழாக்களுடன் இணைந்து இவர்களைச் சிறப்பிப்பது மனிதனை நினை என்ற வார்த்தையின் முழுப் பொருள்.வாழ்க உங்கள் மனித நேயம்.

N Suresh said...

//மனித நேயமே மகத்தான பண்பு என்பதை நன்கு எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
பெரியார் பெண் குழந்தைகள் காப்பகம்
ஆரம்பித்து திருச்சி நாகம்மை குழந்தைகள் இல்லம் பல பட்டதாரிகளை,மண மக்களை வளர்த்து வந்திருக்கிறது.திராவிடக் கழகத் தோழர்களும் ஆடம்பரமில்லாமல் அவர்கள் குடும்ப விழாக்களுடன் இணைந்து இவர்களைச் சிறப்பிப்பது மனிதனை நினை என்ற வார்த்தையின் முழுப் பொருள்.வாழ்க உங்கள் மனிதம்//

அன்புள்ள திரு தமிழன்,

நல்ல செய்தி ஒன்றை நினைவிற்கு கொண்டு வந்தீர். மிக்க நன்றி.

பெரியாரை ஐயாவை தமிழகத்தில் பலரும் மறந்து விட்ட நிலை தான் கவலையைத் தருகிறது.

அதை நினைத்தால் உண்மையில் கோபமும் வருகிறது.

எப்பேற்பட்ட சிறந்த ஒரு சிந்தனையாளர், புரட்சியாளர் அவர்!

எல்லாவற்றிருகும் மேல்
ஒடுக்கப்பட்ட ஏழை மக்கள் மீது அதீத அக்கரை கொண்டவர் தந்தை பெரியார் அவர்கள்!

தோழமையுடன் - என் சுரேஷ்

குமரன் (Kumaran) said...

சுரேஷ். சிந்திக்க வைத்த எழுத்துகள். இன்றாவது இந்த இடுகையைப் படித்தேனே என்று மகிழ்கிறேன். இந்த இடுகை எழுப்பிவிட்ட சிந்தனைகள் தொடர்கின்றன.

N Suresh said...

//சுரேஷ். சிந்திக்க வைத்த எழுத்துகள். இன்றாவது இந்த இடுகையைப் படித்தேனே என்று மகிழ்கிறேன். இந்த இடுகை எழுப்பிவிட்ட சிந்தனைகள் தொடர்கின்றன//

அன்புள்ள சகோதரரே,

உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

எனது கட்டுரை உங்களின் நல்ல சிந்தனைகளை தொடர வைத்தால் என்னை விட சந்தோஷப்படும் இறைவனை போற்றுகிறேன்.

நீங்கள் எல்லா வளமும் பெற்று அன்போடும் அமைதியோடும் இந்த பூமியில் வாழும் காலம் முழுவதும் வாழ
நான் பிரார்த்திக்கிறேன்.

பாசமுடன் என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments