Monday, December 31, 2007

அன்னை தெரசா

Friday, December 28, 2007

மறக்க முடியுமா?


வேதாந்தமாகின வேதனைகளிட்ட
நிழல்களின் ரேகைகளை
என் காதலியின் முகத்தில் காண
தேடிச்செல்கிறேன்!

வாழ்க்கை பளீரென்று
புன்னகைத்தது!
சொல்லமுடியா உணர்வுகளை
மனம் சுமந்த நிலையில்
என்னில் எத்தனையெத்தனை
ஞாபகங்கள், சிந்தனைகள்!

பயணத்தின் வழியெங்கும்
கடந்தகால சந்தோஷங்களுக்கு
திடமில்லாத சாட்சிகள்!
எதிர்காலத்தை
என்றோ தொலைத்துவிட்ட
கவலையில்
வழியோர மரங்களின்
பச்சைநிழல்களும்!

கதவைத்திறந்தாள்
ஒற்றைப்பார்வையில்
என் மனதையும்!

நான் இன்னொருவளுக்கு
கணவனாகியும்
அவள் மனதின்
காதலனும் கணவனும் -அது
நானே என்றறிந்ததும்
அறிவு கலாச்சாரம் நீதி நியாயம்
இவையெல்லாம்
தோல்வியுடன்
கடலில் கரைந்த நீர்க்குமிழி போல்
கரைந்துபோனதை
மறக்க முடியுமா?
மறைக்க முடியுமா?

என்னுயிர் காதலியே




நீயொரு மின்னலாய் வந்தாய் என்னில்
என் தனிமையின் கொடுமை விடுதலையானது!

என்னில் காதலின் வெளிச்சம் தந்து
மறைந்து சென்றது ஏனோ
உன்னையே தேடுமென்
விழிகளின் தவிப்பைக்காணவோ?
இருக்காது
நீயென்னன காதலிக்கிறாய்!

மரபுகள் மட்டும்
எனக்குத் தெரியாமல் இருந்திருந்தல்
உனதாசைப்படி அன்றே நான்
கலந்திருப்பேன் உன்னில்!

கப்பலைக் காத்து
கடல் அலைகளையே பார்த்துப் பார்த்து
விசனமாய் மயங்கிக் கிடக்கும் - இந்த
கடல் தீரத்தின் கண்ணீரை
உனையன்றி யாருக்கு
உணரமுடியும்!

Saturday, December 1, 2007

மழை!




தொடர்ந்து மூன்று நாள் மழை !

ஊர் முழுக்க மழைவெள்ளத்தால் மூழ்கின அந்த மாலை வேளையில் மாதவன் தனது ஸ்கூட்டரை மீட்க முயன்று தளர்ந்து போனான். அவனை மழையின் தாக்குதலிருந்து காப்பாற்றினாள் தேவதை போல் அவனருகே வந்த வசந்தா!

அருகிலுள்ள தனது இல்லத்திற்கு மாதவனை அழைத்துச் சென்றாள் வசந்தா. ஆடை மாற்றி வசந்தா வருவதற்குள், வரவேற்பறையில் அமர்ந்திருந்த மாதவனின் மனதில் தான் எத்தனை கேள்விகள்! "

அழகிய வீட்டில் இவள் தனிமையிலா? என்னை ஏற்கனவே இவளுக்கு தெரியுமா? என்ன தான் மனதமிருந்தாலும் இவ்வளவு தைரியுமா? என் மீது இத்தனை கரிசனமா? எனது நெஞ்சார்ந்த நன்றிகளை எப்படிச் சொல்வேன்..." - ஆனால் அத்தனை கேள்விகளையும் தனது மனதிற்குள்ளையே பூட்டி வைத்தான், மாதவன்.

புன்னகையுடன் ஓடி வந்த வசந்தா, மாதவனுக்கு தலை துவட்ட துண்டும், குடிக்க சூடான தேநீரும் கொடுத்தாள்.

மாதவன், "நன்றி..." என்று சொல்லி பேச ஆரம்பித்த சில நொடிகளில் வசந்தா ஒரு ஊமையென்ற உண்மையை அறிந்தான். அவனின் மனது கனத்தது.

பொறியியல் வல்லுனர், வசந்தா, மேற்படிப்பிற்காக அடுத்த நாள் விடியற்காலை லண்டனுக்கு செல்லும் செய்தியை மாதவனுக்கு அவளின் அழகிய எழுத்துக்கள் சொன்னது.

மழை நின்றதும் மாதவனை அழைத்துச் செல்ல அவனின் தந்தை கார் எடுத்து வந்தார். தந்தையை அறிமுகப்படுத்தினான், மாதவன்.

புன்னகை வணக்கமிட்டு காலில் விழுந்து மாதவனின் தந்தையை வணங்கினாள் வசந்தி.

மாதவனுக்கும் வசந்திக்கும் ஏற்பட்ட ஏதோ சொல்ல முடியாதொரு உணர்வுகளின் பதற்றத்தில் இருவரும் தங்களின் தொலைபேசி எண்களையோ விலாசங்களையோ பரிமாறிக்கொள்ள மறந்து விட்டார்கள்.

வருடங்கள் பல கடந்து சென்றாலும் இன்றும் மழையைக் காணும்போதெல்லாம் இருவரின் கண்ணீரிலும் அந்த சந்திப்பின் நினைவுகள் புன்னகைக்கிறது!

இயேசுவைப்போல் வாழ்தல்



இயேசுவைப்போல் வாழ்வதைப்பற்றி வேதபுத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தாலும் நிக்கதேமுவிற்கும் இயேசுவிற்குமிடையே நடந்த உரையாடல் மிகவும் சிறப்பானது

யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கதேமு, இயேசுவினடத்தில் வந்து கிறிஸ்துவ வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற கண்டறிய வந்தபோது இயேசு “ஓருவர் மறுபடியும் பிறவாவிடில் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே சொல்கிறேன்" என்றார் (யோவான் 3:3)

கர்த்தருக்குள் புதியவனாகி இயேசுவைப்போல் வாழ ஆரம்பிப்பதே கிறுஸ்துவ வாழ்க்கையின் முதற்படி. யோவான் 4:16-இல் இயேசு “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று மிகத்தெளிவாக சொல்கிறார்.

இயேசு பூமியில் வாழ்ந்தகாலம் தந்தையான கர்த்தரிடம் வைத்திருந்த நல்லுறவு, அதீத நம்பிக்கை, சமர்ப்பண மனநிலை, கீழ்ப்படிதல் இவைகளை நாமும் நமது வாழ்க்கையில் கடைபிடிக்க அன்புள்ள இயேசு நம்மை உபதேசிக்கிறார். இந்த உபதேசத்தின்படி வாழ்வதே கிறிஸ்துவ வாழ்க்கையின் சாராம்சம்.

யோவான் 14:21 -இல் இயேசு சொல்கிறார், “என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு
அவைகளை கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருக்கிறான்; நானும் அவனில் அன்பாயிருந்து அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்”

கிறிஸ்துவ வாழ்க்கை என்பது ஒரு பட்டியலில் சில சட்ட திட்டங்களை மட்டுமிட்டுவிட்டு அதன்படி இறுக்கமாக சமாதானமில்லாமல் வாழ்வதல்ல. கிறுஸ்துவ வாழ்க்கை என்பது உன்னதமான இனிமையான சுதந்திரமான அன்பான வாழ்க்கைமுறை என்பதை இயேசு இந்த பூமியில் வாழ்ந்து காட்டினார். இயேசு கீழ்க்காணும் உபதேசங்களில் அதை தெளிவுபடுத்துகிறார்.

கர்த்தருக்குள் புதிதாய் பிறந்த புரிதலில் வாழ்தல் ( 2 கொரிந்தியர் 5:17)
======================================
“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போகின, எல்லாம் புதிதாயின”

தேவனின் சித்தம் பகுத்தறிந்து மனம் புதிதாகி வாழ்தல் (ரோமர் 12:2)
============================================
“நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாயிருங்கள்”

மற்றவர்களோடு அன்புடன் வாழ்தல் (பிலிப்பியர் 2:3-4)
============================
“ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையிலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேலானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக”

கர்த்தருடைய உபதேசம் படி வாழ்தல் ( மத்தேயு 5: 3-10)
==============================
“ஆவியில் எளிமையுள்ளவன் பாக்கியவான்; பரலோகராஜ்ஜியம் அவனுடையது
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்
நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் திருப்தியடைவார்கள்
இரக்ககுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவ்னுடைய புத்திரர் எனப்படுவார்கள்
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகரஜ்யம் அவர்களுடையது”

கர்த்தர் மீதுள்ள நம்பிக்கையை மற்றவர்களிடம் தெரிவித்து வாழ்தல் (யோவான் 15:14-16)
=====================================================
“நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மீது இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக்கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல் விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்”

இயேசு இந்த பூமியில் மனித உருவிலிருந்த காலத்தில் வாழ்ந்த அன்பின் வாழ்க்கையை பின்பற்றி அவரின் உபதேசங்கள்படி வாழும் வாழ்க்கையே அர்த்தமுள்ள வாழ்க்கையாகும். அதுவே கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை!

கர்த்தருக்கு பிரியமான தூயவாழ்க்கை வாழும் எல்லோருக்கும் அவருடைய ஆசீர்வாதங்களும் சமாதானமும் மகிழ்ச்சியும் நேற்றும் இன்றும் என்றும் நிச்சயம்!

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments